October 31, 2011

நினைவெல்லாம் நிவேதா - 1

கணேஷ் காதம்பரி கேஸ்கட்டில் தலையைக் கொடுத்திருந்தான்.

“இனிமே இந்த மாதிரி அராத்து கேஸ்லாம் என்கிட்ட கொண்டுவராதடா. சரியா இழுத்தடிக்குது. காம்ப்ரமைஸ்க்கு வழியிருக்காப் பாரு.”

“என்ன பாஸ். திடுதிப்புன்னு காம்ப்ரமைஸ்ன்னுட்டீங்க. நான் இப்பதான் பாஸ் காதம்பரிக்கு கைரேகை பார்க்கிற அளவுக்கு வந்திருக்கேன். மச்ச சாஸ்திரம் பார்க்கனும். ச்சே சொல்லனும். அப்புறம்..”

“ஷட் அப். வசந்த்.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது. காதம்பரி என விசிலடித்துக்கொண்டே கதவை திறந்த வசந்தின் விசில் சத்தம் சட்டென நின்றது.

“மிஸ்டர் கணேஷைப் பார்க்கனும்” என்ற பெண்ணுக்கு 23 வயதிருக்கும்.

“அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்றான் வசந்த் அவளை கண்களால் அளந்துக்கொண்டே.

“இல்லை. ஆனால் ரொம்ப அவசரம்”.

“சாரி மிசஸ்???”

”மிஸஸ் நிவேதா”

“சாரி மிஸஸ் நிவேதா. பாஸ் இப்போது கோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார். றோம். மாலையில் ஒரு போன் செய்துவிட்டு வாருங்களேன்”

“ஐ வோண்ட் டேக் மோர் தென் டென் மினிட்ஸ். ப்ளீஸ். ஐ’ம் கன்ப்யூஸ்ட். ஐ நீட் ஹிஸ் ஹெல்ப் டெஸ்பரேட்லி.”

“நீங்க பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கமாட்டீங்க. ஆனா இங்கிருந்து கோர்ட்டுக்குப் போக ட்ராபிக் சுளையா முக்கா மணிநேரத்த முழுங்கிடுமே. லேட்டாப் போனா கிருஷ்ணமாச்சாரி வாய்தா வாங்கிடுவார். ஏற்கனவே பாஸ் காதம்பரி கேஸால கடுப்புல இருக்கார். இதயே காரணம் காட்டி கழட்டி விட்டுட்டார்னா? நான் அட்லீஸ்ட் மச்ச சாஸ்திரமாவது பார்க்கனும்”

“எக்ஸ்யூஸ் மீ?”

“சாரி. உங்களுக்குப் புரியாது. நீங்க போய்ட்டு அப்புறமா வாங்களேன்.”

அந்தப் பெண் விழிகளில் அப்பட்டமாய் ஏமாற்றத்தைக் காட்டிவிட்டு நகர்ந்தாள்.

“இன்னிக்கு அடைமழை நிச்சயம்டா வசந்த்”

“நீங்க வேற பாஸ். 40 கிட்ட கொளுத்தறது. இப்போதைக்கு எந்த சைக்ளோனும் கிடையாதுன்னு வேற சொல்லிட்டாங்க. இப்ப ரமணனுக்கு பதிலா குழந்தைவேலுன்னு ஒருத்தர் வர்றார். பார்த்தீங்களோ?”

“டேய். ஒரு பொண்ண. அதுவும் ஜீன்ஸ் குர்தாவுல வந்த பொண்ண, முக்கியமா ரொம்ப அழகா இருந்த பொண்ண வசந்த் திருப்பியனுப்பிருக்கான்னா அது இயற்கைக்கு அப்பாற்பட்ட
விஷயமில்லயா?"

"நீங்க இன்னும் பழைய வசந்தாவே பார்க்கறீங்க. அவன் செத்துட்டான் பாஸ்"

"இப்பதான் காதம்பரின்னு கூப்பாடு போட்டுக்கிட்டிருந்த?"

"ஐயோ பாஸ். கல்யாணமான பொண்ணுங்களுக்கு ரூட் விடறதில்லன்னு பாலிசி கொண்டுவந்திருக்கேன். நெத்தி வகிட்ல குங்குமம் வச்சிருந்தது பாஸ்."

"சரிதான். எதுக்குடா வந்திருப்பா? முஞ்சு முழுக்க கவலை கபடியாடித்து."

"டைவர்ஸ் சம்பந்தமா டவுட் கேக்க வந்திருப்பாங்க பாஸ். பிட்ஸா வாங்கித்தரலன்னாகூட பிரியறதுக்கு ரெடியா இருக்காங்க பாஸ். ஹூம்"

"என்னவோ. சரிக் கிளம்புடா."

"ஆனாலும் நீங்க ரொம்பவே அடம்பிடிக்கறீங்க பாஸ். காரையும் மாத்த மாட்டேங்கறீங்க. ஆபிஸையும் மாத்த மாட்டேங்கறீங்க. ரெண்டுமே படுத்தறது. மவுண்ட் ரோட்ல ஆடி ஷோரூம்
தொறந்துருக்கான் பாஸ். வண்டி டக்கரா இருக்கு. ரிசப்ஷனிஸ்ட் பேர் ரீட்டா. அவ வண்டியவிட சூப்பரா இருக்கா பாஸ். ஒருதடவையாவது ஓட்டிப் பார்த்தடனும்."

"டேய்ய்.."

"நான் வண்டிய சொன்னேன் பாஸ்."

"யுவர் ஆனர் காதம்பரி கொடுத்துள்ள புகாரில் இம்மியளவும் உண்மையில்லை" என ஆரம்பித்து எதிர்த்தரப்பு வக்கீல் போரடித்துக்கொண்டிருந்ததை கனேஷும், வசந்தும் கன்னத்தில்
கைவைத்தபடி வேண்டா வெறுப்பாய் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆடி அசைந்து இரண்டு அரசுத் தரப்பு சாட்சிகள் சொன்னவற்றை மகாப் பொறுமையுடன் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி
வைப்பதாகக் கூறி எழுந்துச் சென்றார்,

"சட். சரியான நச கேஸு" என்று புலம்பியபடியே ஆபிஸ் வந்து சேர்ந்தனர் இருவரும். பையன் வாங்கிவந்த டீக்கு சிகரெட்டோடு கல்யாணம் நடத்திவிட்டு கேஸ்கட்டுகளில் மூழ்கினர்.

"ஒரு வாரம் ரொம்ப ஹெக்டிக்கா போச்சுடா. பேசாம கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலைமறைவா போய்டலாம்ன்னு பாக்கறேன். கோர்ட்டுன்னாலே கடுப்பா இருக்கு."

"சொல்லாதீங்க பாஸ். உங்க வாய் முகூர்த்தம். நீங்க வெகேஷனப் பத்தி பேசறச்சேல்லாம் ஏதாவது ஒரு கேஸ் வந்துடுது." வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது.

உள்ளே வந்தவருக்கு வயதைக் கணிக்க முடியாத தோற்றம். கண்டிப்பாய் ரிடயர்டு மிலிட்டரி பெர்சன் என்பதை இரண்டுக்காதுகளுக்கு மேலே ஒரு இஞ்ச் முடியிழந்த மண்டையும், டக்கின்
செய்திருந்த டீ-சர்ட்டும் சொல்லியிருந்தன.

"ஹலோ. ஐ'ம் ஜெயராமன். ரிடயர்டு மிலிட்டரிமேன்."

"ஐ'ம் கணேஷ். ஹி இஸ் மை அசிஸ்டெண்ட் வசந்த். என்ன விஷயமா..."

"ஒன் வீக் பிஃபோர் என் டாட்டர் உங்களைப் பார்க்க வந்திருந்தாளா?"

"உங்க டாட்டருக்கு பேர் வச்சீங்களா சார்?"

"வசந்த்” என்று அவனை அதட்டி, “சாரி சார். உங்க டாட்டர் பேர்?" என்றான் கணேஷ்.

"நிவேதா அஷோக்".

"ஓ யெஸ். ஷி கேம். டோண்ட் சே மீ தட் யூ ஹேவ் அ நியூஸ்.”

“அப்கோர்ஸ் ஐ ஹேவ் அ வெரி பேட் நீயூஸ். மை டாட்டர் இஸ் நோ மோர்.”

- நன்றி பண்புடன் இணைய இதழ்.

-பண்புடனின் வெளிவரும் எனது தொடர்கதையின் முதல் பகுதி.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆரம்பமே அருமையா இருக்கு.
வாழ்த்துக்கள் அக்கா.

Porkodi (பொற்கொடி) said...

am glad buzz is closing. :)