March 31, 2009

ஸ்ரீ ராஜஸ்தானி தாபா - அண்ணாநகர்

மிளகாய்ல காரம் கொஞ்சம் கம்மின்னு சொல்றவங்களுக்கு இந்த தாபா ஒத்து வராது. மிதமான சில சமயம் காரமே இல்லாத உணவுகளுக்கு பெயர் போன ராஜஸ்தான் உணவுகளை வழங்குகிறது ஸ்ரீ ராஜஸ்தானி தாபா. நேற்று மதிய உணவிற்க்கு நானும் தம்பியூம் சென்றோம். உள்ளே போகும்போது "ஈ ஓட்டிக்கிட்டிருக்கானேடா? மவனே சாப்பாடு நல்லால்ல செத்தடா நீ" என்று அவனை எச்சரித்துக்கொண்டே வந்தேன் (பின்ன அம்மாவின் இஞ்சி துவையலையும் தயிர் கீரையும் கஷ்டப்பட்டு மறுத்துவிட்டல்லவா வந்தேன்). ஆர்டர் குடுப்பதற்க்குள் திமுதிமுவென கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டது. Exclusive ராஜஸ்தானி உணவுகள். கூடவே கொஞ்சம் பஞ்சாபி சப்ஜிகளும் மெனுவில் இருக்கின்றன. இன்னொரு பெரிய ஆச்சரியம்/ஆறுதல் சப்ஜி/தால் வகைகள் அரை பிளேட்கூட தருகிறார்கள்.

80 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரை 3 thali வெரைட்டி இருக்கிறது. தம்பி 140 ரூபாய் ஸ்பெஷல் ராஜஸ்தானி thali ஆர்டர் செய்தான். 4 சப்ஜிகள், தால், கதி (kadi), ஆலு பராத்தா, பஜ்வார் ரொட்டி (கம்பு), புல்கா, வெஜிடபிள்ஸ், தயிர், சூப்/மால்புவா, லஸ்ஸி/குல்பி. இதுதான் ஸ்பெஷல் தாலியின் மெனு. இதில் கடைசி இரண்டு அயிட்டங்களைத் தவிர மற்ற அனைத்துமே unlimited. போன முறை நண்பர்களோடு வந்தபோது நல்லா கட்டினதா தம்பி சொன்னான்.

நான் மக்கி ரொட்டியோடு (மக்காச்சோளம்) அரை பிளேட் கதி ஆர்டர் செய்தேன். மக்கி ரொட்டி டக்கராக இருந்தது. கொதிக்க கொதிக்க கொஞ்சம் எண்ணைய் (நெய்யாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை) தடவிக் கொடுத்தார்கள். சைஸ் கொஞ்சம் சின்னது. கதி சுமாருக்கு கொஞ்சூண்டு மேலே. ரொம்பவே தண்ணியாக இருந்தது. அதுக்கப்புறம் ஒரு புல்காவும் அரை பிளேட் தாலும் ஆர்டர் பண்ணேன். தால் சொர்க்கம். இவ்வளவு டேஸ்டியாக நான் எந்த உணவகத்திலும் சாப்பிட்டது கிடையாது. உப்பு, காரம், மசாலா எல்லாமே சரியான அளவுகளில். புல்காவும் ரொம்ப சின்னது. அதனால் தாலை வேஸ்ட் பண்ண மனசில்லாமல் ஒரு ஸ்பூனை கேட்டு வாங்கி குடித்துவிட்டேன். பசி அடங்கினாற்போலவேயில்லை. அடுத்து போனது பனீர் பராத்தா. இது சுமார் தான். பராத்தாவில் உப்பு காரம் ரெண்டுமே கம்மி. ஆலு பராத்தா நன்றாக இருந்தது. மெனுவில் ஆலு, பனீர், மூளி (முள்ளங்கி), கோபி (காலிபிளவர்) என நான்கு வகை இருக்கிறது. இவற்றிற்க்கு நடுவே ரெண்டு கிளாஸ் ஜல்ஜீரா பானி ஸ்வாஹா:)
ஸ்வீட் சாப்பிடாமல் இருந்தால் உமாச்சி கண்ணைக்குத்தும்ன்னு பெரியவங்க சொல்லிருக்கறதால மால்புவா ஆர்டர் செய்தேன். Awesome. அளவான தித்திப்புடன் அட்டகாசமாக இருந்தது. கடைசியாக கிளம்புபோது வயிறும் உணவகம் போல நிரம்பியிருந்தது.
மேலதிக தகவல்கள்

உணவகம் - ஸ்ரீ ராஜஸ்தானி தாபா
இடம் - Second Avenue, அண்ணா நகர். இடத்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம். Second avenue ரோட்டில் வரிசையாக ஹாட் சிப்ஸ், பிட்ஸா ஹட், அடையார் ஆனந்தபவன் போன்ற உணவகங்கள் இருக்கும். காஞ்சி ரெசிடன்சி என்ற ஹோட்டலுக்கு முன்னாள் உள்ள ஒரு கட்டிடத்தின் (ஆந்திரா பேங்கின் எதிர்புறமுள்ளது) மூன்றாவது மாடியிலிருக்கிறது தாபா. கவனமாக பார்க்கவில்லையெனில் பெயர் பலகை கண்ணுக்குத் தெரியாது.
டப்பு - Thali வகைகள் 80லிருந்து 140 வரை. இருவருக்கு 300 ரூபாய் ஆனது.

பரிந்துரை - தாரளமாக ஒருமுறை போகலாம். ஆனால் மறுபடியும் சொல்கிறேன் காரம் விரும்புவர்களுக்கு கஷ்டம் தான். பர்ஸை பதம் பார்க்காத வித்தியாசமான உணவு:)

பிகு : இந்த முறை உங்களை வயிறெரிய வைக்கும் விதமாக புகைப்படங்கள் அமையவில்லை. அண்ணன் எப்ப எந்திருப்பான் திண்ணை எப்ப காலியாகுமென நாலு பேர் டேபிள சுத்தி நின்னாங்க. இதுல நான் போட்டோ வேற எடுத்துட்டுருந்தேன்னா என் நிலைமை ரெம்ப மோசமாயிருக்கும்:)

March 30, 2009

I'm Back

சரியா பத்து நாள் கழிச்சு பதிவு போடறேன். போன வாரம் இணையத்தின் பக்கமே வரமுடியாதபடி இருந்தது. பத்து நாளும் சரியான அலைச்சல்:(
ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுக்கனும். ஆணிகளையெல்லாம் புடுங்கிட்டு நேரம் கிடைக்கும்போது விட்டுப்போன பதிவுகளையெல்லாம் படிக்கனும்.

எனக்கும் டிவிடி பேருந்துகளுக்கும் ராசியே இல்லை போல. இந்த தடவை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினவுடனேவே படம் போட்டான். என்ன படம் தெரியுமா? நம்ம கேப்டன் நடிச்ச அரசாங்கம். முடியல. ஐ.பாட் எடுத்து மாட்டினவ அந்த படம் முடிஞ்சுதான் இயர்போனை கழட்டினேன். உடனே அடுத்த படம் போட்டான்.அதுக்கு அரசாங்கமே பரவாயில்ல. பரத் படுத்திய நேபாளி. திரும்பவும் ஐ-பாட். ஊர் வரப்போகுதுன்னு அப்பா சொன்னபிந்தான் நிம்மதியா இருந்தது. ஐ-பாட் மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்:(

இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. அடுத்த பதிவு என்னோட பேவரிட் செக்ஷன் கொட்டிக்கலாம் வாங்க. என்ன உணவகமாயிருக்கும்ன்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. சீக்கிரமா வலையேத்துறேன்:)

March 20, 2009

சம்பங்கி

பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி முல்லையின் வாசனையைத் தாண்டி வீசும் சம்பங்கியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்குமென்றால் கைகொடுங்கள். நானும் உங்கள் கட்சிதான். ஆனால் இந்த சம்பங்கியை ஏன் பெண்கள் யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை? இத்தனைக்கும் மார்க்கெட்டில் விசாரித்துப் பார்த்தால் சம்பங்கி தான் விலை ஜாஸ்தி. என்ன அப்படி பார்க்கறீங்க? ஓ யாரிவ பேசிக்கிட்டே போறாளேன்னா? என் பேரு கல்யாணி. எனக்கு இன்னிக்கு வளைகாப்பு. நேத்துதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்குன்னு அம்மா சிரிச்சுகிட்டே சொன்னபோது வெட்கத்தையும் தாண்டி என்னமோ மாதிரி இருந்தது. எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமாகப்போகுது. அங்க பாருங்க. வர்றவங்களை வரவேற்கிறேன் பேர்வழின்னு அங்கிங்க ஓடிக்கிட்டிருக்காரே ராம் அவர் தான் என் வீட்டுக்காரர். முழுப்பேரு கல்யாணராமன். பெயர் பொருத்தம் நல்லாருக்குன்னு தான யோசிக்கிறீங்க. எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்த ஜோசியர் அசந்தே போய்ட்டார். அவர் வாழ்நாளில இப்படி அம்சமா பொருந்தின ஜாதகத்தை பார்த்ததேயில்லையாம். எந்த தோஷமுமில்லாத எல்லா பொருத்தங்களும் நிறைஞ்ச அம்சமான ஜாதகமாம் எங்க ரெண்டு பேருக்கும்.

ராம் கம்ப்யூட்டர் கம்பெனில வேலை பார்க்கிறார். கைநிறைய சம்பளம், எந்த கெட்ட பழக்கமுமில்லை, சொந்த வீடுன்னு தரகர் போட்டோ குடுக்கும்போதே அம்மாக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இத்தனைக்கும் இதான் முதல் வரன். போட்டோல நல்லா ராஜா மாதிரி இருந்தார். வழக்கமான பொண்ணு பார்க்கிற சம்பிரதாயமெல்லாம் இல்லாம பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு வரசொன்னாங்க. அங்கேயே கைத்தாம்பூலம் மாத்தி நிச்சயதார்த்தையும் ரொம்ப சிம்பிளா முடிச்சாங்க. சீர் பத்தி அம்மா பேசினபோது உடனே அவர் அதெல்லாம் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமாயிருந்தது. பக்கத்து வீட்டு கண்மணி புருஷன் வீட்டுல ஒரு பெரிய பட்டியலே கொடுத்தாங்க. கடன வாங்கி எல்லாத்தையும் செஞ்சு முடுக்க மணி மாமா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல. அந்த மாதிரி எதுவும் கேக்காம இருந்தது ரொம்ப சந்தோஷம். ஆடி மாசம் முடிஞ்ச முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம். குறைவான கூட்டத்துடன் ரொம்ப எளிமையா ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானத்தோட நல்லபடியா நடந்தது. கல்யாணத்துக்கு ஆன செலவுல பாதியை எங்கம்மா கையில கொடுத்து அம்மாவ அழவைச்சிட்டாங்க என் மாமியார்.


தேன்நிலவுக்கு ஊட்டி போனது, அப்புறம் விருந்துங்கற பேர்ல ஊரூரா போய் சாப்பிட்டு நான் கொஞ்சம் சதை போட்டதெல்லாம் சுவாரசியமில்லாத விஷயங்கள். என் மாமியார் என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்கறாங்க. கல்யாணமான இந்த பதினொன்றை மாதங்களில் ஒருநாள் கூட அவங்க என்னை அதட்டி பேசினது கிடையாது. ராமுக்கும் என்மேல் கொள்ளைப் பிரியம். இந்தமாதிரி ஒரு குடும்பத்துல வாக்கப்பட்டதுக்கு நான் குடுத்துவச்சிருக்கனும். வீட்டுக்கு வாரிசு வரப்போற சந்தோஷத்தில மாமியார் ரொம்ப பெரியளவுல வளைகாப்பு ஏற்பாடு பண்ணிருக்காங்க. ரெண்டு ஜோடி வைர வளையல்கூட வாங்கியிருக்காங்க. இதோ பங்க்ஷன் ஆரம்பிச்சிருச்சு. சந்தனம் பூசி குங்குமம் வைச்சி பன்னீர் தெளிக்கறாங்க. அய்யோ ஏன் இவ்வளவு பன்னீர் தெளிக்கிறாங்க?


"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு. சனியன். இந்த வயசுல பூக்கட்டி வித்து பொழப்ப ஒட்டனும்னு என் தலைல எழுதிருக்கு. அதுக்காவது ஒத்தாசையாஇருக்குதா? எப்ப பாரு ஏதாவது நினைப்பு. ஒன்னுக்கும் உதவாத தண்டக்கருமாந்திரம். ஏய் எருமை எங்கடீ பராக்கு பாத்துக்கிட்டிருக்க? ஒழுங்கா மாலைய கட்டுடீ எழவெடுத்தவளே."


வளைகாப்பு நல்லபடியா முடுஞ்சுது. ராமுக்கும், மாமியாருக்கும் பெண் குழந்தை வேணும்னு ஆசை. எனக்கு பையன். உங்களுக்கு என்ன தோணுது?


டிஸ்கி : கதைய படிச்சிட்டு நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டீங்கனா போனபோதுன்னு இத்தோட விட்டுடறேன். ஏதாவது வம்பு பண்ணிங்கன்னா அடிக்கடி இப்படி ஏதாவது எழுதி ரப்சர் பண்ணுவேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

March 19, 2009

விடைப்பெற்றாள் கிருஷ்ணவேணி

ஆனந்த விகடனில் வந்த கிருஷ்ணவேணி என்ற நிஜ திகில் தொடர் இந்த வாரத்தோடு முற்றுப்பெற்றது. 36 வாரங்களாக ஆனந்த விகடனை வாங்குவதற்க்கு நான் சொன்ன காரணம் இந்த தொடர் மட்டும்தான். ராஜேஷ் குமாரின் நாவல்களுக்குப் பிறகு நான் மிகவும் விரும்பிப் படித்த திகில் கதை. அதுவும் நிஜமாகவே நடந்த சம்பவங்கள் என்கிறபோது மயிர் கூச்செரிகிறது. கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இயல்பாக செதுக்கப்பட்டுள்ளது. கதையின் முதல் பாகத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு துளிகூட குறையவில்லை. முரளிக்காணியின் அமானுஷ்யமான மரணம், குட்டியின் மரணம் கதை நாயகியான கிருஷ்ணவேணியின் மரணம் எல்லாமே திகிலூட்டின. ஒவ்வொரு வாரமும் கதையை முடிக்கும்போதும் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர்கொள்ள வைத்திருப்பது ஆசிரியரின் சிறப்பு. 36 வாரங்களில் ஒரு முறைகூட சிறு தொய்வு ஏற்படாத நடை அருமை.

இந்த வாரம் நிஜ கிருஷ்ணவேனியின் போட்டோ, அவர் அண்ணன் அண்ணியின் போட்டோவோடு பேட்டி, விக்கிரமன்காணி வள்ளி ஆகியோர்களின் போட்டோ போட்டிருக்கிறார்கள். அப்பழுக்கில்லாத முழுநிலவு போன்ற கிருஷ்ணவேணியின் முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. தொடர் ஆசிரியர் ராஜநாரயணன்னுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே இன்னொரு வித்தியாசமான கதைகளத்தோடு வாங்க சார்.

March 18, 2009

வ்ரூம் வ்ர்ரூம் - ஜூனியர் டைம்ஸ்

தென்றலக்காவின் ஆஷிஷ் பற்றிய இந்தப் பதிவை படித்ததிலிருந்து எனக்கும் ஜூனியரின் வண்டிகள் மீதான காதலை வலையேற்றனும்னு ஆசை. அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் இஸ்மாயில் அங்கிளோ ராஜாமணி அங்கிளோ வந்து ஜூனியரை தூக்கிக்கொண்டு போய் ஜீப்பில் உட்காரவைத்துவிடுவார்கள். ஸ்டியரிங்கை திருப்புவதும் கியர் மாற்றுவதுமாக அவன் செய்கைகள் கொள்ளை அழகு. வீடியோகூட எடுத்தேன். ஜூனியர் பிற்காலத்தில் embarass ஆகக்கூடாதுன்னு அதப் போடல:)அப்புறமா சிட்டி செண்டர் போகும்போது அங்கிருக்கும் ப்ளே ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் கார், ட்ரைன், போன்றவற்றில் ஏறினால் கீழே இறங்கவே மாட்டான்.
அவனுக்கு வாங்கின விளையாட்டுப் பொருட்களில் அவன் உபயோகிப்பது இவற்றை மட்டும்தான். மத்தபடி அவனுக்குன்னு வாங்கின விளையாட்டு பொம்மைகள் எல்லாம் சீந்த ஆளில்லாமல் தான் இருக்கின்றன. இவை போரடித்தால் ரிமோட், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் மாட்டிக்கொண்டு அல்லல்படும்.

போன முறை சிட்டி செண்டர் போயிருந்தபோது அந்த காரை விட்டு கீழே இறங்கமாட்டேன்னு ஒரே அழுகை. கீழே விழுந்து புரண்டு தேம்பி தேம்பி அழுகை. பையன் அழுததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. ரிமோட்டில் இயங்கக்கூடிய கார் வாங்கலாமென்றார்ர். மார்க்கெட்டில் விலை விசாரித்தபோது 5000 என்றார்கள். நான் வேண்டவே வேண்டாமென்றேன். ரொம்ப நாளாக மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்ற பிளானை காருக்கு மாற்றியாச்சு. "இப்ப அவனுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்குறது வேஸ்ட் ரகு" என்றதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் "அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்" என சொல்லி என் வாயை அடைத்தாகிவிட்டது. போதாக்குறைக்கு மாமன் வேற மருமகனுக்கு கண்டிப்பா வாங்கனும்னு சப்போர்ட்.
வண்டில உக்காந்தவுடனே ஒரே சந்தோசம்தான்.
Ready for a ride.

டிஸ்கி : இன்னும் இரண்டு பதிவு ஜூனியரைப் பற்றி. விரைவில் எதிர்பாருங்கள்:)

March 17, 2009

என்னத்த சொல்ல

போன துணுக்ஸ் பதிவில் பரிசல் துணுக்ஸ் என்ற தலைப்பு வெண்பூ பயன்படுத்தியது என்று சொல்லியிருந்தார். வெண்பூ அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டதுக்கு ரொம்ப பெருந்தன்மையா பரவாயில்லைன்னு சொல்லிட்டார். இருந்தாலும் என் மனசாட்சி உறுத்தவே துணுக்ஸ் நிறுத்தப்படுகிறது. ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க. அதுக்குப் பதிலாதான் இந்த தலைப்பு:)
*******

உறவினருக்கு கல்யாணத்துக்காக பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 28 வயதான பெண் ஒருவரின் கண்டீஷன் "குறைஞ்சது 50,000 சம்பாதிக்கனும். கல்யானத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் தான். அக்கா தங்கை இருக்கக்கூடாது". இன்னும் பல. பொண்ணோட குவாலிபிகேஷன். 12 வது பெயில். இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்கிறது குதிரை கொம்பாருக்காம். இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு பையன் கிடைக்கிறது கஷ்டமா இருக்குமாம். ஆக ரெகுலரா என் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடும் பொண்ண பெத்த பதிவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி பரிசீலிக்கப்படும்:)
************

நான் எழுதனும்ன்னு நினைக்கிற மேட்டர வேற யாராவது ரொம்ப நல்லா எழுதிடறாங்க. அப்படி நான் எழுதனும் நினைச்ச ஏர்டெல் விளம்பரத்த பத்தி கார்க்கியும், பரிசல் சாரும் எழுதினாங்க. அப்புறம் வோடோபோன் விளம்பரத்த பத்தி பரிசல் சார் தனி பதிவே போட்டுட்டார். விடமாட்டேன். புதுசா வந்திருக்கிற மிரிண்டா விளம்பரத்தில் மொக்க ஜோக்காக இருந்தாலும், பிண்ணனி இசை டக்கராக இருக்கிறது.

***********

பேருந்தில் லேட்டஸ்ட் படங்களின் காமெடி சீன்ஸ் ஒளிபரப்பினார்கள். வில்லு படமும் ஏகன் படமும். என் நிலைமை எப்படியிருக்கும். அப்படியே கண்ணாடிய ஒடைச்சிட்டு வெளிய குதிச்சிடலாம்னுகூட யோசிச்சேன். அப்புறம் வருங்காலத்தில் தமிழ் பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்துட்டோமேன்னு நீங்க எல்லாரும் சோகத்தில் தத்தளிப்பீங்களேங்கற ஒரே காரணத்துக்காக முடிவ மாத்துக்கிட்டேன். நயந்தாரா கொஞ்சம் நடிச்சும் காட்டிருக்கலாம்.
**********

அஜீத்தின் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.
ஒவ்வொரு முறை இந்தப் பாட்டைப் (தப்பித்தவறி) பார்க்கும்போதும் தோன்றுவது "பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்". அப்பாவோட கமெண்ட் இன்னும் மோசமா இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு பயந்து அதை இங்கே குறிப்பிடல. இன்னொரு பாட்டு மிஜிக் டைரக்டராக முயற்சி பண்ணுவாரே. அதுல மழைல நனைஞ்சிக்கிட்டே பாடுவார் (படுத்துவார்). நான் விஜயின் தீவிர ரசிகை இல்லையென்பதற்கான ஆதாரம்.
***********

செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.

இப்படி போன வாரத்தில் முக்கால்வாசி நேரம் பயணத்திலேயே கழிந்தது. வரும் ஞாயிறு வரை ரெஸ்ட் (வீட்டில் புடுங்க வேண்டிய ஆணிகளெல்லாம் கடப்பாரைகளாக மாறி கழுத்தை நெரிப்பது வேறு விஷயம்). திரும்பவும் திங்கள் கள்ளக்குறிச்சி போகனும். ஒரு வாரம் அங்க ஸ்டே. எக்கச்சக்கமா பதிவுகள் ட்ராப்டில் முடிக்கப்படாமல் இருக்கின்றன். இந்தப் பயணங்களின் காரணமாக நீங்க தப்பிச்சிட்டிருக்கீங்க. அடுத்த வாரம் முழுக்க பதிவு போட முடியாது. ம்ம்ம்ம் ரொம்ப காலத்துக்கும் நீங்க எஸ்கேப் ஆகமுடியாது. மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:)

March 13, 2009

கீதம் சங்கீதம்

இப்போதெல்லாம் டிவியில் எந்த சேனலைத் திருப்பினாலும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் என ஒரே பாட்டு போட்டிதான். ரொம்பவே திகட்டுகிறது. நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. ஒரே டிராமா. கண்ணீர்விட்டு அழுவது, நடுவர்கள் போட்டியாளர்களை திட்டுவது, பின்னர் அது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது. இப்பல்லாம் வீட்டில டி.வி பார்க்குற நேரம் தடாலடியா குறைஞ்சுடுச்சு. முழுநேரமும் பாட்டு இல்லன்னா ஜூனியருக்காக ரைம்ஸ்ன்னு mp3 ப்ளேயர் தான் ஓடிக்கிட்டிருக்கு:)

போன வாரம் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தபோது விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார். அந்த 4 நாட்கள் அவர்கள் அடித்த கூத்தைக் காண கண்கோடி வேண்டும். நான் பார்த்த மட்டில் என் சங்கீத சிற்றறிவிற்க்கு (இது பத்தி தனி பதிவு அப்புறமா) எட்டிய வகையில் நடுவர்கள் பாராட்டும் அளவிற்க்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பதென் கேள்வி. ஒரே ஒரு போட்டியாளர் பட்டையைக் கிளப்பினார். இத்தனைக்கும் அவர் கர்நாடக சங்கீதம் கற்றிருக்கவில்லை. எனக்குத் தெரிந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு/ ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு செகண்ட் கிரேட் பாடல்கள் பிடிப்பதேயில்லை. அதேபோல் குரலும் ரொம்பவே இனிமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போதிருக்கும் இசைக் கலைஞர்கள் / பாடகர்கள் நிறைய பேருக்கு செகண்ட் கிரேட் பாடலகளும், குத்துப்பாட்டுகளும் தியாகராஜ கீர்த்தனைகளை விட நன்றாக சூட் ஆகின்றன. நிறைய பேர் குத்துப்பாட்டுகளை உள்ளுக்குள் ரசித்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். SPB, ஜேசுதாஸ் இன்னும் பலருக்கு அப்பால் சில வித்தியாசமான குரல்களும் இருக்கின்றன. பாடகிகளில் சித்ராவிற்குப் பிறகு எனக்கு ரொம்பவும் பிடித்தவர் ஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.










Get this widget Track details eSnips Social DNA

இளா அருணின் இந்தப் பாட்டு தூளாக இருக்கும்.
Get this widget Track details eSnips Social DNA

அதே போல் வித்தியாசமான குரல் கொண்ட சாகுல் ஹமீதின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். ப்ச்ச் உயிரோடு இருந்திருந்தால் சிகரம் தொட்டிருப்பார்.
Get this widget Track details eSnips Social DNA

இப்போதெல்லாம் குத்துப்பாட்டு/fast numbers என்றால் அனுராதா ஸ்ரீராமைத்தான் கூப்பிடுகிறார்கள். ஒரே மாதிரியான டோனில் அவர் பாடுவது ரொம்ப போர். எனக்கு அனுராதா ஸ்ரீராமை பிடிக்காதென்பது வேறு விஷயம்:)
ஆகக்கூடி நான் என்ன சொல்றேன்னா கர்நாடக சங்கீதம் மட்டுமே நல்ல இசையென்று கிடையாது. இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை.

March 9, 2009

ஜூனியருக்கு பிடித்தமானவர்கள்

ஜூனியருக்கு பிடித்தமானவர்களின் லிஸ்ட் பற்றி எழுத சொல்லியிருந்தார் சந்தனமுல்லை. ஜூனியரின் லிஸ்ட் ரெம்ம்ம்ம்ப பெருசு என்பதால் யோசித்து சிலரைப் பற்றி மட்டும் எழுதுகிறேன். வழக்கம்போல் தாத்தா'ஸ், பாட்டி, மாமாக்கு அப்புறம் அவன் ரொம்ப க்ளோசாக இருப்பது இவர்களிடம் தான்.

வசந்தி - அம்மா வீட்டில் வீட்டு வேலை செய்பவர். இவருக்கு இருக்கும் சுறுசுறுப்பு என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும். குழந்தை பிறந்ததிலிருந்து இன்றுவரை அவன் வளர்ச்சியைப் பார்த்து பரவசப்படுபவர். சம்பளத்துக்காகத் தானே வேலை செய்கிறோமென்றில்லாமல் ஆதமார்த்தமான அன்பு கொண்டவர். அம்மா வீட்டுக்கு போனவுடன் ஜூனியர் முதலில் தேடுவது இவரைத்தான். தோட்டத்தில் தான் போய் பார்ப்பான். சாப்பாட்டு கிண்ணத்தை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஜூனியரையும் தூக்கிக்கொண்டு வேடிக்கைக் காட்டியே சாப்பிட வைத்துவிடுவார். மொட்டை அடிக்க கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அவரால் வர முடியாத நிலையில் தயங்கியபடியே வந்து 100 ரூபாயை கையில் கொடுத்து குழந்தைக்கு எதுனா வாங்கிக்கொடு என்றார். எதுக்கு இதெல்லாம் வசந்தி. நீங்க இதெல்லாம் செஞ்சு தான் ஆகனுமா என்றதுக்கு கிட்டத்தட்ட அழுதேவிட்டார். தொடர்ந்து 2 வாரம் ஊருக்கு போகவில்லையென்றால் அம்மாவிடம் சொல்லி போன் செய்து கடிந்துகொள்வார் ஏன் இன்னும் வரவில்லையென்று. அப்புனு என்றவர் குரலைக் கேட்டவுடனே ஜூனியரின் முகத்தில் தோன்றும் பிரகாசமே போதும் இவர்களின் உறவினை விளக்க:)

இஸ்மாயில் அங்கிள் - அப்பாவின் ட்ரைவர். அங்கிள் தான் ஜூனியருக்கு கார்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது. வேண்டாமென்றாலும் ஜுனியரை மடியில் வைத்துக்கொண்டு சின்னதாய் ரவுண்ட் அடிப்பார் ஜீப்பில். இப்போதும் இவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்புகையில் அழுது அடம்பிடிப்பார் ஜூனியர்.

ராஜாமணி அங்கிள் - என் வாழ்நாளில் மறக்கமுடியாத மனிதர். ஜூனியரை நாங்கள் இழக்காமல் இருப்பதிற்க்கு முக்கியமானவர்களில் ஒருவர். 4 மாதக் குழந்தையாக இருந்தபோது கடும் வயிற்றுப்போக்கோடு ஜூரமும் சேர்ந்துக்கொள்ள இரவு 3 மணிக்கு மருத்தவரின் வீட்டு வாசலில் நின்றோம். அவர் ரொம்ப சீரியசாக இருக்கிறான். உடனடியாக நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் டெம்பரேச்சர் ஏறினால் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். செங்கல்பட்டிலிருந்து 25 நிமிடங்களில் நுங்கம்பாக்கம் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு சென்று அட்மிட் செய்தபோது மருத்துவர் சொன்னது "Heavy dehydration. கொஞ்சம் டிலே ஆகியிருந்தாலும் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது" என்றார். அங்கிள் அந்த வேகத்தில் வந்திருக்காவிட்டால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்குப் போகும்போது ஜூனியரை தூக்கிக்கொண்டு போய்டுவார். நாங்கள் அங்குபோய் இறங்கும்போது அவனுக்கெண்று மலை வாழைப்பழம் ரெடியாக வாங்கிவைத்திருப்பார்.

சரவணன் அங்கிள் - சமீபத்தில் தான் இவர் ஜூனியருக்கு அறிமுகமானார் என்றாலும் அவனுக்கு சமமாக உட்கார்ந்து விளையாடுவார். அவனோடு கண்ணாமூச்சி ஆடுவது, சாரின் விஷமங்களை பொறுத்தாள்வது என அங்கிள் ரொம்ப ஸ்போர்டிவ்.

இன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. அப்பாவுக்கு இப்போ மாற்றலாகிவிட்டதால் மேற்சொன்ன நால்வரும் ஜூனியரை ரொம்பவே மிஸ் பண்ணப்போகிறார்கள். இல்லை ஜூனியர் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போகிறான் இவர்களை.

டிஸ்கி : ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)

March 6, 2009

பூகம்பமும் சுனாமியும்

பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? நீங்கள் அத்தருணத்தில் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? நான் அனுபவித்தேன். பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் ஏற்படும் பிரளயம் நான் baby sitter வைத்துக்கொள்ளப் போகிறேன் என சொன்னவுடன் எங்கள் வீட்டில் ஏற்பட்டது. இத்தனைக்கும் மாலை இரண்டு மணிநேரம் தான் குழந்தையப் பார்த்துக்கொள்ள ஆள் வைக்கலாமென எண்ணினோம். ஐடியா குடுத்ததே ரகு தான். இரண்டு பேர் வீட்டில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார்கள். இருப்பவர்களோடு அபத்தமான ஒப்பிடு. அவளும் தான் குழந்தை வளர்க்கிறாள். அவளென்ன ஆளா வைத்துக்கொண்டாள்? ஏகப்பட்ட கம்பேரிசன்கள். மறுப்புகள். என்(ங்கள்) பக்க வாதங்களைக் கேக்ககூட தயாராக இல்லை.


குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன். குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன். 24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.


காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன் அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(


குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.


அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன. நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.


கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".


என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)


டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.

March 5, 2009

மூக்க பாத்தியா?

ரோல் நம்பர் 1 - பெரஸண்ட் சார்.
நம்பர் 2 - யெஸ் சார்.
நம்பர் 3 - ஹியர் சார்.

இது ஸ்கூலில் வகுப்பு ஆரம்பிக்கும்போது கேட்கும் சத்தம். பின்னாளில் எங்கள் பள்ளியில் கண்டிப்பாக பெயரைழைத்துதான் அட்டெண்டன்ஸ் எடுக்கனும் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டுவந்தார்கள். It just gave us a great feeling.

காலேஜ் போனதுக்கப்புறம் ஒவ்வொரு வகுப்பிற்க்கு முன்னும் அட்டெண்டன்ஸ் எடுப்பது முதலில் வித்தியாசமாய் இருந்தது. இரண்டே வாரத்தில் ஏன் என அனுபவத்தில் தெரிந்தது:) ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க காலேஜில் வடமாநிலத்தவர் அதிகம். என் டிபார்ட்மெண்டில் 43 பேரில் 9 பெண்களில் மூன்று பேர் பெங்காளிகள். அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது செம காமெடியா இருக்கும். சில விரிவுரையாளர்கள் நான்கு வருஷமும் பெயர்களை (எவ்வளவோ எடுத்து சொல்லியும்) உச்சரிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள முயற்சி கூட செய்யவில்லை.

எங்கள் வகுப்பில் இருந்த பெங்காளி பெண் ஒருத்தியின் பெயர் ரிம் முக்கோப்பத்யாய் (Rim Mukopadhyay). Loveking அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது கூப்பிட்டது "ரிம் மூக்க பாத்தியா". மொத்த வகுப்பும் சிரித்துவிட இவளோ ஏன் சிரிக்கிறார்கள் என தெரியாமல் பக்கத்திலிருந்தவளிடம் கேக்க அவளும் விளக்க, அடுத்த தடவை அவள் நம்பர் வரும்பொழுது இவளே எழுந்து "ரிம் பிரசெண்ட் சார்" என்பாள். கொஞ்சம் அசந்தாலும் சார் மூக்க பாத்தியா நாக்க பாத்தியான்னு ஆரம்பிச்சிடுவாரு:) ஆனால் டிபார்ட்மெண்டில் முதல் வருடத்திலேயே (கல்லூரியின் 2ஆம் ஆண்டு) நிர்வாகம் அவள் சீட்டைக் கிழித்து அனுப்பிச்சிட்டாங்க. அம்மணி அதுக்கப்புறம் சத்யபாமாவில் குப்பை கொட்டினார் என்ற ஆச்சர்யமான தகவல் சமீபத்தில் நண்பனின் கல்யாணத்தில் கிடைக்கப்பெற்றது.

அடுத்த மாட்டிக்கிட்டு முழிக்கற பேர் ஷ்ரேயேஷி சாட்டர்ஜி (Shreyashi Chatterjee). Thermal's வகுப்பெடுத்த மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த ஆசிரியர் கூப்பிடுவது "சிரியாசி". அவளும் சளைக்காமல் அந்த செமஸ்டர் முழுவதும் சொல்லுவாள் "Sir, i'm shreyashi". ஜிக்மே வாங்சூ (Jigme Wangchu) என்றழைக்கப்பட்ட நேபாளத்தைச் சார்ந்த பையனை almost எல்லாருமே "ஜிம்மி" எனதான் கூப்பிடுவார்கள். கடைசி ரோல் நம்பர் என்பதால் கூப்பிடுவதற்கு முன்னமே i'm here என்பான். ததாகத் கோஷ் (Thathagat Gosh) கொஞ்சம் கஷ்டமான பெயர்தானென்றாலும் அவனே விரிவுரையாளர்களிடம் என்னை கோஷ் என்றே அழையுங்களென சொல்லியிருந்தான். ஆனா Loveking மட்டும் அதை கேக்கமாட்டார். "தட்டகட்ட கோஷ்" ஒருகையால் தலையிலடித்துக்கொண்டு மறுகையைத் தூக்கி பிரசெண்ட் சொல்லுவான்.

வடஇந்திய பெயர்கள் தான் வாயில் நுழையாது. சில சமயம் சுலபமான பெயர்களைக்கூட ஸ்டைலாகக் கூப்பிடுகிறேன் பேர்வழி என இம்சையைக் கூட்டுவார்கள். உதாரணத்திற்க்கு சந்தீப் ரெட்டி (Sandeep Reddy) என்ற பெயர் "சாண்டீப்" என அழைக்கப்படும். எங்கள் HOD பெங்காளி. அவருக்கு(ம்) 'ச' வராது. சங்கீதா என்பதை "ஷொங்கீதா" என்றே அழைப்பார். ரமா என்ற பெண்ணை எல்லா விரிவுரையாளர்களும் default "ராமா" என்று தான் அழைப்பார்கள். ஒரு நாள் ரொம்ப நொந்துபோய் அவள் சொன்னது "தேடிப் பிடிச்ச பேர் வைச்ச எங்கப்பாவை ஒரு நாள் நல்லா குமுறனும்டி".

March 4, 2009

துணுக்ஸ் - 4/3/09

சன் டிவியில தீ படத்தோட ட்ரைலர் ஓடிக்கிட்டிருந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்ல யாருக்கு பெட்ரோல் போடுவாங்கன்னு ஆரம்பிச்சு சுந்தர்.சி சீரியஸா காமெடி டயலாக் பேசிக்கிட்டிருந்தார். "ஓ காமெடி படம் போல" என்றார் ரகு. ஒரே ஒரு சீனக்கூட பார்க்கமுடியலயே படம் எப்படியிருக்கும்?
*************

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கின சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்துக் கதைகள்" நாவலை போன வாரம் ஆரம்பித்து, நேற்று முந்தினம் தான் முடிக்க முடிந்தது. அடுத்தது வெண்பூ சொன்ன கறுப்புக் குதிரையை எடுத்தேன். wow கீழே வைக்கவே மனதில்லை. கையோடு 12 கதைகளையும் முடித்த பின் தான் கீழே வைத்தேன். பிரிவோம் சந்திப்போம், five point someone, the three mistakes of my life, தூண்டில் கதைகள் என படிக்க வேண்டிய புத்தகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நேரம் கிடைப்பது தான் பெரும்பாடாய் இருக்கிறது.
****************

எலக்ஷன் தேதி அறிவிச்சாச்சு. ம்ம்ம் இனிமே இந்த விளம்பரங்களின் தொல்லை தாங்க முடியாது. அந்த சாதனை இந்த சாதனைன்னு ரப்சர் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இந்த தடவை இப்படிக்கூட விளம்பரம் வரலாம்.
"பூத் கைப்பற்ற யூத் தேவை. முன் அனுபவம் கட்டாயம் தேவை. கைப்பற்றும் பூத்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். அணுகவும் மானெங்கட்ட அரசியல்வாதி".
**************

ரகுவின் நண்பர் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தார். கூடவே இன்னொரு நண்பரையும். இன்னொரு நண்பருக்கு பெண் குழந்தை. ஜூனியரை விட ஒரு நாள் பெரியவள். இரண்டு பேரும் வீட்டுக்கு அழைத்த நண்பரிடம் சொன்னார்கள் "டேய் எங்க பசங்கள பத்தி தெரியாம வீட்டுக்கு கூப்பிட்டுட்ட. ஏண்டா கூப்பிட்டோம்னு feel பண்ண வைக்கப் போறாங்க". அதற்கு அவர் "ஏதாவது பிரச்சனைன்னா உங்க ரெண்டு பேரையும் இங்கேயே புடிச்சு வைச்சுடுவேன்". நானும் நண்பரின் மனைவியும் கோரஸாக என்ன சொல்லியிருப்போம் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்:)
************

எங்கள் வீட்டு வாசலில் ஒரு அறிவிப்பு பலகை மாட்டலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கோம். "எந்த பொருள் உடைக்கப்பட்டாலும் பெற்றோர்கள் ஜவாப்தாரிகள் இல்லை. Enter @ ur own risk". எல்லாம் ஜூனியர் செய்யற வேலை. வர்றவங்க கிட்ட எவ்வளவோ சொல்லிட்டோம். Dont offer him coolers, mobiles etc. யாரும் கேக்கறதால்ல. உடைஞ்ச அப்புறம் போச்சேன்னு புலம்பி நோ யூஸ். குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க. U gotto be careful. என்ன நான் சொல்றது?
*************

பாண்டிச்சேரிய்யில் ஒருவழியாக எல்லாருக்கும் வெள்ள நிவாரண நிதியாக 2000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டாங்களோ இல்லையோ ரேஷன் கார்ட் வைச்சிருக்க எல்லாருக்கும் 2000 ரூபாய். என் மாமனாருக்கும் உண்டு. ஏம்பா வாங்கினீங்க என்றதுக்கு "நான் வாங்கலைன்னா என் காசு கண்டிப்பா வேற யாருக்காவாது போயிருக்கும். அதான் வாங்கி வீட்டு வேலைக்காரிக்கு, ஆபிஸ் வாட்ச்மேனுக்கு, கொஞ்சம் கோயிலுக்குன்னு பிரிச்சு குடுத்திட்டேன்". ம்ம்ம்ம் இப்படி எல்லாருக்கும் நிவாரண நிதி அள்ளி வழங்கறதுக்கு பதிலா சாக்கடை அடைப்புகள், நீர் வடிகால்கள் ஆகியவற்றை சரிசெய்யலாம்ல.

March 2, 2009

கருநாகமும் பதிமூனாம் நம்பர் வீடும்

1996ஆம் வருடம் என்று நினைக்கிறேன். வாலாஜாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பா பணி நிமித்தமாக அரக்கோணத்திலிருந்தார். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் சன் டிவியில் நகைச்சுவை வாரம், காதல் வாரம், கண்றாவி வாரம் என திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு படங்கள் ஒளிப்பரப்புவார்கள். என் பெரியம்மாவின் இரண்டாவது பையன் எங்கள் வீட்டில் தங்கி லெதர் டெக்னாலஜி படித்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது சன் டிவியில் திகில் வாரம். அன்று 13ஆம் நம்பர் வீடு படம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அண்ணாவும் நானும் அந்தப் படத்தைப் பார்ப்பதென்று முடிவு செய்தோம். அம்மாவும் தம்பியும் உறங்க போயாச்சு (வீட்டில் எல்லோரும் 8.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம்).

நான் வீட்டுப்பாடங்களை செய்துக்கொண்டிருக்க அண்ணா தோல் சாம்பிள்களை ஒழுங்கப்படுத்திக்கொண்டிருந்தார். படம் ஆரம்பித்து ஒடிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டு டீவியை ஹாலின் மூலையில் வைத்திருந்தோம். டீவியின் ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கண்ணாடி ஜன்னலும் (மூன்றும் முக்கோண வடிவிலிருக்கும். முக்கோணத்தின் base டீவி). எதேச்சயாக ஜன்னலைப் பார்த்த நான் கருப்பாக ஏதோ இருக்கவும் கேபிள் ஒயரென நினைத்தேன். கேபிள் ஒயர் வாசல் அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக தானே வருமென நினைத்து அம்மா கரித்துணியை (துடைக்க உபயோகப்படுத்தும் துணி) எங்க போட்ருக்கா பார் என திட்டிக்கொண்டே கையிலிருந்த பென்சிலால் அதை எடுக்கப் போனவள் அப்படியே ஷாக்காயிட்டேன். துணி நகர்ந்து கொண்டிருந்தது.

4 அடி நீளமுள்ள ஜன்னல் கம்பியில் மொத்த உடலையும் சுற்றிக்கொண்டு இருந்தது. மெதுவாக அண்ணாவிடம் "அண்ணா பாம்புன்னா" என்றேன்.

"ஏய் இந்தப் படத்துல பாம்பெல்லாம் வராதுடீ. நான் ஏற்கனவே படத்த பார்த்திருக்கேன். பயமா இருந்துதுன்னா நீ போய் படுத்துக்கோ"

"அண்ணா ஜன்னல் கம்பில பாம்பு சுத்திண்டிருக்குண்ணா"

"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடீ பாம்பு வரும்"

"அண்ணா நீங்க இங்க வந்து பாருங்க"

அண்ணா வந்து பார்த்துவிட்டு "நீ இங்கயே நில்லு. நான் போய் சித்திய எழுப்பி சொல்றேன்" (என்னா ஒரு வில்லத்தனம்)

"சித்தி ஹால் ஜன்னல்ல பாம்பு இருக்கு சித்தி"

"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடா பாம்பு வரும்?" (எனக்கு ரொம்ப சந்தோஷம்)

"இல்ல சித்தி நிஜமாத்தான். நீங்க வந்து பாருங்க"

அம்மா வந்து பார்த்துட்டு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் அண்ணாவும் நானும் நீ போடுற சத்தத்துல பாம்பு டென்ஷனாகி நம்மள போடப்போறது வாய மூடிட்டு இருன்னு அம்மாவ திட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிச்சோம் (போர்ட் மீட்டிங்க் போடற டைமா இது?)

நானும் அண்ணாவும் பாம்புக்கு காவலிருக்க அம்மா மத்த அறைகளை பூட்டினார். பின்னர் தம்பிய நாலு சாத்து சாத்தி (அவன் சரியான கும்பகர்ணன்) வெளியே உட்கார வைத்தார். அடுத்து பாம்ப எப்படி அடிக்கறதுன்னு விவாதம் (டெக்னிகல் டிஸ்கஷன்). பாம்படிக்க தோதான ஆயுதம் எங்களிடம் இல்லாததால் (resource deficiency) அருகில் குடியிருந்த சர்வேயர் அங்கிளிடம் ஆயுத உதவி கோரப்பட்டது. அங்கிளின் குடும்பத்தில் அனைவருமே ரொம்ப நல்லவர்கள். ரொம்ப helpful. அங்கிளும் அவர் பசங்களும் இரும்புக் கழியோடு வந்து சேர பாம்புக்கு பாடை கட்ட வியூகம் தயாரானது. என்ன பாம்பு என்று சரியாகத் தெரியவில்லை. கருப்பும் கோதுமையும் கலந்த நிறம். கண்டிப்பாக விஷப் பாம்புதான் என எனக்குத் தோன்றியது. உடல் பருமனும், பாம்பின் நீளமும் அப்படி (சயின்ஸில் நான் சூரப்புலி). இத்தனை களேபரத்திலயும் பாம்பு மோட்டாரில் காயில் சுற்றுவதை போல் (அட நாங்களும் டெக்னிக்கலா எழுதுவோம்ல) உடம்பை முறுக்கிக்கொண்டிருந்தது.

பாம்பு அடிக்கும்போது ஜன்னல் கண்ணாடி உடைஞ்சிட்டா என்ன பண்றதுன்னு அங்கிள் அம்மாவ கேட்டார். வீடே இடிஞ்சாலும் பரவால்ல சார் என்றார் அம்மா. இரும்பு கம்பியைக்கொண்டு பாம்பின் தலையை சுவற்றோடு அழுத்துவதென்றும், மற்ற இரண்டு பேர் அதை அடிப்பது என்றும் முடிவானது. இதனிடையில் எதிர்த்த வீட்டு மாமி "விளக்கு வெச்சப்புறம் பாம்ப அடிக்கறது பாவம். ஒருவேளை நல்லதா இருந்துட்டா இன்னும் மோசம்" என்றார். அவ்ளோதான் அம்மாக்கு இன்னும் பயம் ஜாஸ்தியாகிவிட்டது. "அதுக்குன்னு விடியற வரைக்கும் அப்படியேவா பார்த்துண்டிருக்க முடியும். நாளைக்கு உங்காத்துக்கு வந்துடுத்துன்னா கஷ்டம் மாமி" என்றார் அண்ணா.ஒருவழியா நீண்ட விவாதத்திற்க்குப் பிறகு பாம்படிக்க தாய்குலம் சம்மதம் வழங்கியது. பாம்படிக்கறத நானும் பார்ப்பேன் என அடம்பிடித்து அங்கேயே நின்றுகொண்டேன். அங்கிள் அதன் தலையை குறிபார்த்து இரும்பு கம்பியால் சுவற்றோடு சேர்ந்து நசுக்கினார். கிணற்றின் ராட்டினத்திலிருந்து கயிறு பிரிவதுபோல பாம்பு சரசரவென்று ஜன்னல் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. அங்கிள் விடாமல் இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.

பின்னர் ஆராய்ந்ததும் தெரிந்தது கருநாகம்/ராஜ நாகம் என்று. The most deadly snake. கிட்டத்தட்ட ஒரு 3.5 அடி நீளமிருந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன். பார்மலின்ல போட்டு லேபில் டிஸ்ப்ளேக்கு வைக்கலாம் என்று. ம்ஹூம். ஒருத்தர் சொன்னார். பாம்பிற்க்கு வாலில் இன்னொரு உயிர் இருக்கும். கொஞ்ச நேரம் விட்டால் அதுக்கு திரும்ப உயிர் வந்துடும் (எங்கேருந்துடா இப்படிப்பட்ட கான்செப்ட் புடிக்கிறீங்க). ஒருவழியா கொஞ்சம் மண்ணென்னைய் ஊற்றி வைக்கோல் படுக்கையில் வைத்து அண்ணாவே கொள்ளி போட்டார். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அம்மா கர்ம சிரத்தையாய் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கோவிலுக்கு சென்று புற்றுக்கு பாலூத்தி பாவத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் கொண்டிருந்தார்.

இப்போக்கூட அண்ணா எதுக்காவது என்னை கிண்டல் செஞ்சால் சொல்லுவேன் "ஹூம் பாம்புக்கிட்டருந்து உன்ன காப்பாத்தினேன் பார். எனக்கு இது தேவைதான்". அண்ணா கொஞ்ச நேரத்திற்க்கு கப்சிப்:)