September 27, 2010

சிவந்த கைகள்

ஒவ்வொரு விஷயத்தின் மீதான பற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. பொம்மைகள் என்றால் உயிராய் இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அவற்றின் மீதிருந்த காதல் காமிக்ஸ் புத்தகங்கள் மீது திரும்பியது. பின்னர் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் ஏற்பட்ட ஆர்வம். எதிர்காலம்/பொருளாதார பயங்கள் எழும்பி பொருளீட்டலில் பயணிக்க வைக்கும். குடும்பென்றானபின் குழந்தை மீது கவனம் திரும்பும். இப்படி நிறைய பட்டியலிடலாம். ஆனால் எல்லோருக்கும் சிறு வயது தொட்டு இன்று வரை ஏதேனும் ஒரு விஷயம் அல்லது சிலவற்றின் மீது தீராக் காதல் இருந்துக்கொண்டே இருக்கும். நான் ரொம்பவே காதலிக்கும் விஷயங்களில் மருதாணியும் ஒன்று.

பள்ளி இறுதிக் காலத்திலிருந்தே நகைகளின் மீதான ஆர்வம் போய்விட்டது. இன்றுவரை மருதாணியின் மீதான் க்ரேஸ் குறையவேயில்லை. மெஹெந்தியை விட மருதாணியே அழகாக இருக்கிறதென்பது என் கருத்து. முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும், லட்சக்கணக்கான டிசைன்களில் பலவித வண்ணங்களில் மெஹெந்தி போடப்பட்டாலும் விரல்களுக்கு தொப்பி போட்டது போல வைக்கப்படும் நம்மூர் ஸ்டைல் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.

மருதாணி வளர்ப்பது முதல் வைப்பது வரை பெரிய கலை. என் பாட்டிக்கு மருதாணி செடி வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு நல்லதில்லையென்ற நினைப்புண்டு. எனக்கும் அம்மாவிற்கும் நினைத்த நேரத்திற்கு மருதாணி வைத்துக்கொள்ள வீட்டில் செடியில்லன்னா எப்படி என்று தோன்றும். காஞ்சிபுரத்தில் நல்ல அடர்த்தியான மருதாணிச்செடி வளர்த்தோம். இலைகள் ரொம்ப திக்காக இருக்கும். மருதாணி இலை பறிப்பது நேரம் முழுங்கும் வேலை. நண்பர்களோடு கதையடித்துக்கொண்டே ஒவ்வொரு இலைகளாக பொறுமையாக பறிக்கலாம். ரொம்ப அவசரமென்றால் அப்படியே நீட்டக் கிளைகளை ஒடித்துக்கொண்டு போய் இலைகளை மட்டும் பின்னர் உருவிக்கொள்ளலாம். எப்படிப் பறித்தாலும் மருதாணி சீக்கிரமே துளிர்த்துவிடும் (வளர்க்கும் மண்ணைப் பொறுத்து).

சிலச் செடிகள் இலையை உருவிப் பறிக்கும்போதே கைகளில் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும். சிலது பறித்து அரைக்கும்போது வண்ணம் கொடுக்கும். சில இலைகள் என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்தாலும் அசரவே அசராது. இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஆரஞ்சிலே நின்று கடுப்பேற்றும். இன்று வரை எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்து, கிச்சன் சுத்தப்படுத்திய பின்னரே மருதாணி அரைப்பார்கள். காஞ்சிபுரம், வாலாஜா வீடுகளில் அம்மிக் கல் இருந்தது. கொஞ்சம் கொட்டைப் பாக்கு சேர்த்து அரைப்பார்கள். மருதாணி வைத்தால் சளி பிடிக்குமென்பவர்களுக்காக கொஞ்சம் யூக்லிப்டஸ் ஆயில் சேர்ப்பார்கள். மருதாணி கிடைக்காத இடங்களில்/அவசரத்திற்கு குங்குமம், மைதா இன்னும் ஏதோ வஸ்துவெல்லாம் சேர்த்து பசை மாதிரி ரெடி செய்வார்கள். ஆனால் அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மி. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அதே மாதிரி பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பெயிண்ட் வாசனைபோல் இருக்கும்.

அடுத்து மருதாணி வைக்கும் படலம் ஆரம்பமாகும். முதலில் வாண்டுகளுக்கு வைத்துவிட்டு பின்னர் பெரியவர்கள் வைத்துக்கொள்வார்கள். சின்ன மக்கில் தண்ணி எடுத்து வைச்சுப்பாங்க. முதலில் சுண்டு விரலிலிருந்து ஆரம்பித்து கட்டை விரலில் முடியும். சின்னதாய் உருண்டை உருட்டி கைகளில் வைத்து அழுத்தி அப்படியே முழு விரலையும் மூடிவிடுவார்கள். எனக்கு விரலின் கால் பாகம் வைப்பது புடிக்கும். அம்மா, பெரியம்மா, அக்காவிற்கெல்லாம், முக்கால்வாசி விரல்கள் மூடும்படி வைப்பார்கள். விரல்கள் முடித்த பின்னர் உள்ளங்கையில் ஒரு சிறிய வட்டம். காம்பஸ் வைத்து வரைந்தாற்போல் தத்ரூபமாக இருக்கும். பின்னர் அதைச் சுற்றி சின்ன பொட்டுகள் ஏழோ எட்டோ கைக்குத் தகுந்தாற்போல் முளைக்கும். அவ்வளவுதான்.

இனிமேதான் இருக்கு சாமர்த்தியமே. அதென்னவோ மருதாணி வச்சு முடிச்சப்புறம் தான் முதுகு அரிக்கும், மூக்கு அரிக்கும், தண்ணி தாகம் எடுக்கும், முடி கலைஞ்சு மூஞ்சில வந்து விழும், கண்ணுல தூசி விழும், இல்லாத இம்சையெல்லாம் க்யூ கட்டி நிற்கும். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் மருதாணி கலையாமல் பாதுகாப்பாய் தூங்கி பாதி இரவில் எழுப்பி/தூக்கத்திலேயே கைகளில் எலுமிச்சை சாறு கொஞ்சம் தடவி, காலையில் எழுந்தவுடன் கைகளில் இருக்கும் காய்ந்த கலவையை சுரண்டி எடுக்கும்போதே தெரிந்துவிடும் பத்திருக்கா இல்லையான்னு.

சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். என் அக்காக்கு கருப்பாகவே இருக்கும். பித்தம் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லி சொல்லியே நாலு நாளைக்கு காஃபியைக் கட் பண்ணிடுவாங்க பெரியம்மா. எனக்கு எப்பவுமே நல்ல சிவப்பாகவும் எப்போதாவது ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். காலேஜ் படிக்கும்போதெல்லாம் மருதாணியின் நிறத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் உண்டு. மருதாணி கலைச்சவுடனே கையக் கழுவக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு மணிநேரத்துக்கு தண்ணி படாம பாதுகாத்தா இன்னும் கொஞ்சம் கலர் கூடும். அப்புறம் கையக் கழுவும்போது தான் ஒரிஜினல் கலர் என்னன்னு தெரியும். அன்னிக்கு முழுக்க மருதாணியோட வாசம் மூக்கச் சுத்திக்கிட்டேயிருக்கும். மருதாணி வச்சு எடுத்தன்னிக்கு ப்ரெஷ்ஷா உறையூத்துன கெட்டித் தயிர சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா. ம்ம்ம்ம். சொர்க்கம் தான் போங்க. நல்ல தரமான மருதாணியின் கலர் குறைய எப்படியும் மூணு வாரமாகும். அதுவரைக்கும் அநாட்டிய பேரெலிகள் கூட சும்மா சும்மா அபிநயம் பிடிச்சு பார்த்துப்பாங்க:))

முன்னமெல்லாம் எங்கவீட்ல எதாவது விசேஷம்னாலே மருதாணிச் செடிதான் முதல் வெட்டு. கல்யாணம், தீபாவளி, பொங்கல்ன்னு இப்படி எதுக்கெடுத்தாலும் மருதாணி வச்சுப்போம். அப்புறம் செடி இல்லை, இலை கிடைக்கலன்னு ஆரம்பிச்சு வெறும் கல்யாணத்துக்கு மட்டுமே மருதாணி வைக்கிற நிலைமை வந்திடுச்சு. இந்த மாதத் துவக்கத்தில் மாமா பெண்ணின் கல்யாணம் நடந்தது. கடைசியாக என் வளைகாப்பிற்கு மருதாணி வைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு இப்போதான் வைத்துக்கொண்டேன். ஆசையாசையாய் இரண்டு கைகளிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொண்டேன். இப்போது தான் கலர் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் என் இரு கையையும் பிடித்துக்கொண்டு “அம்மாக்கு உவ்வா இக்கா. மந்து போடவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

September 21, 2010

தேவதை... அவள் ஒரு தேவதை...

சென்ற வருட துவக்கத்தில் தேவதை என்ற இதழுக்காக உங்கள் பதிவுகளை உபயோகிப்பதில் உங்களுக்கு சம்மதமா என பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். நம்ம பதிவுகளைப் போய் கேக்கறாங்களே யாரோ விளையாடறாங்க போலிருக்கு என விட்டுவிட்டேன். அப்புறம் சக பதிவர்கள் (பெண்கள் மட்டும்) நிறைய பேரின் வலைப்பூ பற்றிய அறிமுகம் தேவதை இதழில் வரவும் அடடா மிஸ் பண்ணிட்டோமே என்று இருந்தது. இப்ப இந்த மாத இதழில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளனர். முழுசா மூன்று பக்கத்துக்கு.

1. மூன்றெழுத்து பயம்
2. க.மு Vs க.பி
3. உறவினர்களை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

ஆகிய மூன்று பதிவுகளும் துணுக்ஸிலிருந்து ஒரு பகுதியும் வந்திருக்கு.

தொடர்ந்து இயங்க ஊக்கமளிக்கும் சக பதிவர்களுக்கு என் நன்றிகள்.

September 15, 2010

எந்திரன் விமர்சனம் எழுதுவது எப்படி?

எந்திரன் ரிலீஸ் தேதி தெரிந்துவிட்டது. சன் டிவி ஒரு பக்கம் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறது. நம்மைப் போல சாதரணமான மக்களுக்கு டிக்கெட் கிடைக்க எப்படியும் 2 வாரத்திற்கு மேலாகிவிடும். அதுக்குள் எண்ணிலடங்கா விமர்சனப் பதிவு வந்துவிடும். இரண்டு வாரங்கள் கழித்து விமர்சனப் பதிவு போட்டால் “கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காது குத்திற்கு வர்றியே” என சகப் பதிவர்கள் எள்ளி நகையாடுவார்கள். பிறரின் சிரிப்புக்கு ஆளாகாமல் விமர்சனப் பதிவு எழுதுவது எப்படி? சில ஐடியாக்களை இங்கே குடுத்திருக்கிறேன்.

#முதலில் தியேட்டருக்கு சென்றதைப் பற்றி ஒரு பத்தி எழுதனும். ட்ராபிக்கில் மாட்டியதைப் பற்றி, கிளம்பும்போது காலில் இடித்துக்கொண்டதைப் பற்றி, சீட் சரியில்லாததைப் பற்றி என எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கண்டிப்பாக அது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்க வேண்டும்.

#ஹீரோவின் எண்ட்ரியை பாராட்டியோ, எதிர்த்தோ ஒரிரு வரிகள் எழுதலாம். என்ன எண்ட்ரி என்று சிலாகித்தோ, என்ன எண்ட்ரி இது (என்ன எழவு இது) என்ற பாணியிலோ எழுதலாம்.

#படம் ஆரம்பித்து முடியும் வரை வரும் சீன்களைத் தான் விமர்சிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதப் போவதால் கொஞ்சம் பின்நவீனத்துவ முயற்சியாக நடிகர்களையும், இசையையும், மற்றவற்றையும் விமர்சித்தே எழுதலாம். இங்கு பின்நவீனத்துவ முயற்சி என்பது யாருக்கும் புரியாத மாதிரியும், எழுதப்போகும் நமக்கு (மட்டுமே) எல்லாம் தெரியும் என்கிற மாதிரியுமான முயற்சி என்பதை நினைவில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.

#இந்தியர்களை திருடர்களாக சித்தரித்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கிய பின் ரஹ்மான் இசையில் அதீத மேற்கத்திய பாணி தெரிகிறது (அ) ரஹ்மான் இந்தியர்களுக்காக குரிப்பாகத் தமிழர்களுக்காக இசையமைக்காமல் ஏகாதிபத்தியம் பக்கம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது. காதல் அணுக்கள் பாடலில் 3ஆவது நிமிடம் 45ஆவது நொடியில் வரும் அந்த கித்தார் ஒலிக்காகவே ரஹ்மானிற்கு ஆஸ்கார் குடுக்கலாம். பிண்ணனி இசை அருமை.

#காதல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கிறது (அ) ரஜினி தாத்தாக்கு இதெல்லாம் தேவையா என ஆண் பதிவர்களும், ஐஸ் பாட்டியைப் பார்க்க சகிக்கவில்லை என பெண் பதிவர்களும் எழுதிக்கொள்ளலாம்.

#ரஜினியின் உதவியாளர்களாய் வரும் சந்தானமும் கருணாஸும் பட்டையைக் கிளப்புகிறார்கள். கதையோடு ஒன்றி வரும் காமெடி ட்ராக் படத்தின் மிகப்பெரிய பலம் (அ) ஒரு மெத்தப் படித்த சயிண்டிஸ்ட் இப்படிப்பட்ட உதவியாளர்களையா வைத்துக்கொள்வார். ரோபோ உதவியாளர்களை ஏய்க்கிறதாம். கருமம்.

#படத்தில் வரும் CG காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கிறது. பிரம்மாண்டம் படம் முழுவதும் மிரட்டுகிறது (அ) இத்தனைப் பொருட்செலவில் இப்படி ஒரு குப்பை தேவையா? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது நினைவுக்கு வருகிறது (காசும் செலவு செய்யக் கூடாது. படமும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிறது நியாயமா என கேள்விகள் யாரும் கேட்டால் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்).

#கூகிள் சர்ச்சில் ரோபாடிக்ஸ் எனத் தேடுங்கள். வந்து விழும் முதல் இரண்டு லிங்கைப் படிக்காதீர்கள். முதல் பக்கத்தில் தெரியும் கடைசி இரண்டு லிங்கைப் படித்து வைத்துக்கொள்ளுங்கள். முழுவதும் படிக்க முடியவில்லையெனில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத சயிண்டிபிக் வார்த்தைகள் நான்கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். CG பற்றி எழுதும்போது இந்த வார்த்தைகளைப் பரவலாக உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ரோபோடிக்ஸில் மிகப் பெரிய ஜாம்பவான் என அறியப்படுவீர்கள்.

#எந்திரன் - மந்திரன்
எந்திரன் - தந்திரன்
எந்திரன் - முழு சந்திரன்

(அ)
எந்திரன் - காயலான் கடைக்கு
எந்திரன் - உயிரில்லை
எந்திரன் - துருப்பிடித்த இரும்பு

பி.கு : ஆதரவாகவும், எதிர்த்து எழுதவும் சில குறிப்புகளும், இரண்டித்திற்குமே பொதுவாக சில குறிப்புகளும் இருக்கின்றன. உபயோகித்து பயன் பெறுக.

September 13, 2010

குயில் பாட்டு சென்றதென்ன...

தமிழ் திரையிசைப் பாடகர்களில் என்னை ரொம்பவே கவர்ந்தவர் ஸ்வர்ணலதா. பெயரைப் போலவே குரலும் தங்கம். Flawless voice. காதல், பிரிவு, ஏக்கம், துள்ளல் என எல்லா விதமான உணர்வுகளையும் இவர் பாடும்போது உணர முடியும். உச்சஸ்தாயில் பிசிறு தட்டாமல், அலட்டாமல் பாடுவதில் வல்லவர். எம்.எஸ்.வியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இளையராஜா இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர். ஹார்மோனியமும் தெரியும். 1989ல் ஜேசுதாஸோடு டூயட் மூலமாக இசைப் பயணத்தை தொடங்கியவர். எவ்வளவு ஹிட்ஸ். நிறையப் புதையல்கள். ஆனால் இவரின் குரலிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது சந்தேகமே. மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சுத்தமான தமிழ் உச்சரிப்பைக் கொண்டிருந்தவர்.

இவர் பாடியதில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். சிலவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

குயில் பாட்டு வந்ததென்ன இளமானே - என் ராசாவின் மனசிலே
மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் - வள்ளி
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலைபாயுதே
ஹாய் ராமா யே க்யா ஹுவா - ரங்கீலா
போறாளே பொன்னுத்தாயி - கருத்தம்மா
நீதானே நாள்தோறும் - பாட்டு வாத்தியார்

மேலே குறிப்பிட்டுள்ள பாடல்களில் தனியாக இருக்கும் பெண்ணின் ஏக்கம், சோகம், காதல், தாபம் என அத்தனையும் மிக அழகாக கேட்கும்போதே காட்சியாய் விரியும்.

ஆட்டமா தேரோட்டமா - கேப்டன் பிரபாகரன்
அக்கடான்னு நாங்க உடை போட்டா - இந்தியன்
முக்காலா முக்காபுலா - காதலன்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜெண்டில்மேன்
மெட்ராஸ சுத்திக் காட்டப் போறேன் - மே மாதம்
மெர்க்குரி பூக்கள் - ரட்சகன்
ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கும்மி அடி கும்மி அடி - சில்லுன்னு ஒரு காதல்
போவோமா ஊர்கோலம் - சின்ன தம்பி

இந்தப் பாடல்களைக் கேட்கும்போது அவர் குரலில் இருக்கும் துள்ளல் கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும். கால்கள் தாளம் போட ஆரம்பிக்கும்.

டூயட் பாடல்களில் இழையோடும் காதல் ஒரு சின்னப் புன்னகையை இதழோரம் தவழ விடும்.

கீரவாணி
மலைக் கோவில் வாசலிலே - வீரா
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட - உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
மல்லிகை மொட்டு மனசத் தொட்டு
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்மதுரை
அந்தியிலே வானம் - சின்னவர்
நான் ஏரிக்கரை மேலிருந்து
மெல் இசையே - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மாயா மச்சீந்த்ரா - இந்தியன்
சித்திரையில் என்ன வரும் - சிவப்பதிகாரம்

இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். போறாளே பொன்னுத்தாயி பாட்டிற்காக தேசிய விருது கிடைத்தது. நுரையீரல் பிரச்சனைக் காரணமாக நேற்று (12-09-2010) இறைவனடி சேர்ந்தார்.

உங்கள் ஸ்வர்ண குரலுக்கு என்றுமே அழிவில்லை.

September 6, 2010

பஸீரா - Baseera

சோம்பலான சனி/ஞாயிறு. அதைவிடச் சோம்பலாய் வேலையே செய்யப் பிடிக்காமல் சூரியன் ரெஸ்ட் எடுத்துக்கப் போயாச்சு. மழையும் நான் பெய்ய மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது. மந்தமான வானிலை. ஈசிஆரில் ஒரு ட்ரைவ். இந்த க்ளைமேட்டை அனுபவித்துக்கொண்டே சுடச்சுட உணவு சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நினைக்கும்போதே நல்லாருக்கா? அப்பக் கிளம்புங்க பசீராவிற்கு. ஏற்கனவே வேலை செய்தபோது நண்பர்களின் பிறந்தநாள் ட்ரீட்டிற்காக ஒரு முறையும் டீம் லஞ்சிற்காக ஒரு முறையும், கல்யாணமான புதிதில் ரங்க்ஸோடு ஒரு முறையும் சென்றிருக்கிறேன். இது நான்காவது முறை. இம்முறையும் உணவும், க்ளைமேட்டும் ஏமாற்றவில்லை.

ஈசிஆரில் ப்ரார்த்தனா ட்ரைவ் இன் தாண்டி வெட்டுவாங்கேனியில் இடதுப்புறமே இருக்கிறது. Ample and neat parking space. நுழைந்தவுடனே ஜூனியர் கண்ணில் பட்டுத் தொலைத்தது சில்ட்ரன் ப்ளே ஏரியா. ”சாப்டு விளையாடலாம்டா” என முடிக்கும் முன்னர் அவன் சறுக்குமரத்தில் ஏறத்தொடங்கியிருந்தான். உணவருந்தும் இடத்திற்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. மரத்தடியில் மரங்களையே சேராகாவும், டேபிளாகவும் கொண்ட அமைப்பு, மரத்தின் மேலே கட்டப்பட்டுள்ள ரூஃபுடன் கூடிய இடம் மற்றும் ஏர்கண்டிஷண்டு ஹால்.

உட்கார இடம் பார்த்தாச்சா. இப்போ மெனு. பெரிய்ய்ய மெனு. நார்த் இண்டியன் என்கிற பேரில் பஞ்சாபி (போற போக்க பார்த்தா பஞ்சாபி மட்டும் தான் நார்த் இண்டியன்னு சொல்லிடுவாங்க), சைனீஸ் (சத்தியமா இப்படி எழுத பிடிக்கல), காண்டினெண்டல் (திரும்பவும்) உணவுகள் மெனு கார்ட் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. பரவாயில்ல பிழைச்சுப் போ என்ற பரிதாபப்பட்டு கொஞ்சம் சைவமும், நிறைய்ய்ய்ய்ய அசைவமும்.

நார்த் இண்டியன் உணவு பரிமாறும் பெரும்பான்மையான உணவகங்களைப் போல இங்கும் ஆர்டருக்கு முன்னரே மிளகு அப்பளம் (பப்பட்) சர்வ் செய்யப்படுகிறது. நாங்கள் சென்ற அன்று மழை வருவதுப் போன்று வானம் இருண்டு, குளிர்ந்த காற்று வீசியது. சுடச்சுட வெஜ் க்ளியர் சூப் (சூப்பில் நிறைய க்ரன்ச்சி காய்கறிகள்), வெஜ் ட்ராகன் ரோல் (பொரித்த ஸ்ப்ரிங் ரோல்ஸ்) மற்றும் வெஜ் ஷீக் கெபாப் ஆர்டர் செய்தோம். மூன்றுமே மிக நன்று (Both quantity and quality).

மெயின் கோர்ஸிற்கு கார்லிக் நான், பட்டர் நான் மற்றும் தால் மக்கனி ஆர்டர் செய்தோம். ரொம்ப நேரம் வெயிட் பண்ண வேண்டியிருந்தது. நடுவில் ஒரு பூனைக்குட்டி வந்து எண்டெர்டெயின் செய்தது. ஜூனியருக்கு பூனைக்கு அப்பளம் குடுக்கவேண்டுமென ஆசை. முயற்சி செய்தும் பார்த்தான். ஓடிவிட்டது. Back to food. தால் மக்கனி மிக மிக அருமையாக இருந்தது. Bread இரண்டுமே நன்றாக இருந்தது. டெசர்டில் காரமல் கஸ்டர்டும் கேரட் அல்வாவும் சாப்பிட்டோம். இரண்டுமே ஆவரேஜ்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Baseera
உணவு - North Indian/Chinese/Continental - Veg & Non-Veg
இடம் - ECR, ப்ரார்த்தனா ட்ரைவ் இன் தாண்டி, வெட்டுவாங்கனி
டப்பு - ஆவரேஜை விட கொஞ்சம் அதிகம். ஆனால் உணவின் சுவை, லொகேஷ்னுக்கே கொடுக்கலாம். (A complete meal (veg) for 2 costs 700+taxes)

Spoilers : வாரயிறுதியில் ரொம்பக் கூட்டம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோ. வருண பகவானின் கருணை கண்டிப்பாய் தேவை.

பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம்
.