January 22, 2010

கலிங்கா & கெபாப் கோர்ட்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


கலிங்கா

எங்கள் வீட்டில் எல்லாரையும் விட நான் அதிகம் காரம் சேர்த்துக்கொள்வேன். அது ஏனென்று தெரியவில்லை. ஆனால் ரகுவிற்கு காரம் மிதமாய் இருக்கனும். ஜூனியர் கிட்டத்தட்ட என்னை மாதிரி. மிளகு அப்பளத்தை ரவுண்டு கட்டுகிறான். ஆந்திரா சமையலில் மட்டும்தான் காரம் தூக்கலாக இருக்கிறது. காலேஜ் நாட்களில் மதனப்பள்ளியிலுள்ள நண்பர்கள் வீட்டிற்கு மூன்று நாள் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது ஹர்ஷா வீட்டில் போட்ட புளியோதரை காரசாரமாக நன்றாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த சௌராஷ்ட்ரிய நண்பன் ஒருவனுக்கு முகம் சிவந்து மூக்கில் எல்லாம் தண்ணி கொட்டியது. இதைப் பார்த்து ஆண்ட்டி சொன்னது "நீங்கள்ல்லாம் கஷ்டப்படுவீங்கன்னு தான் காரம் ரொம்ப கம்மியா போட்டேன்". சரி ஹோட்டலுக்கு வருவோம். ரொம்ப எதிர்பார்த்து போன இடம் கலிங்கா. தி ரியல் டேஸ்ட் ஆஃப் ஆந்திரா என்கிறார்கள். அப்படித் தெரியவில்லை. முருங்கைக்கீரை சூப்பும், வெங்காய பக்கோடாவும், உருளை ரோஸ்ட்டும் ஆர்டர் செய்தோம். சூப் நன்றாக இருந்தது. ஸ்டார்டர் இரண்டுமே பிலோ ஆவரேஜ் தான். மெயின் கோர்ஸிற்கு ஹைதரபாத் முட்டை பிரியாணியும், கல்தோசையும், கொத்தி வங்காய கூர்ரா (கத்திரிக்காய் மசாலா) ஆர்டர் செய்தோம். கத்திரிக்காய் மசாலா சுடச்சுட புளிப்பும் காரமுமாய் நன்றாக இருந்தது. மற்றவை எல்லாம் ஒ.கே. சாப்பாட்டைவிட இண்டீரியரும் சர்வீசும் நன்றாக இருந்தது.

கெபாப் கோர்ட்

வேளச்சேரியில் இந்த பேரைப் பார்த்தவுடனே போகனும்ன்னு நினைச்சது. கெபாப்ஸ் என்றுமே என் பேவரைட். ரெஸ்டாரெண்ட் நல்ல ஸ்பேஷியசாகவும், கம்ப்ஃர்டபிள் சீட்டிங்குடன் நன்றாக இருக்கிறது. கூடவே மெனுவும். ஒரே ஒரு நெருடல் "Exotic Indian delicacy" மெனுவில் சைனாவுக்கு என்ன வேலை என தெரியவில்லை. Strictly stay away from the chinese menu:)

மெனுவின் இன்னொரு ஸ்பெஷல் அம்சம் லக்னோவி உணவுகள். மிக்ஸ்ட் வெஜிடிபிள் ஷோர்பாவும் (சூப் மாதிரி), வெஜிடபிள் கெபாப் ப்ளாட்டரும் ஆர்டர் செய்தோம். சூப் நன்றாக இருந்தது. அஸார்டட் கெபாபில் 75% பனீர் கெபாப்ஸ். ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத சுவையில். நன்றாகவே இருந்தது விலையைப் போல் (350 ரூபாய். கெபாப் மட்டும். டூ மச்).

அடுத்து மெயின்கோர்சிற்கு லக்னோவி உல்டா தவா பரோட்டாவும், Dhania Naan, மலாய் கோஃப்தாவும் ஆர்டர் செய்தோம். மூன்றும் தனித்தனியே நன்றாக இருந்தது. கோஃப்தா சரியான காம்பினேஷனாக அமையவில்லை. ஆனால் டேஸ்ட் - ரிச் & க்ரீமி:) Dhania Naan என எதிர்பார்த்ததை புஸ்ஸென்றாக்கும் விதமாக கொத்தமல்லி தூவிய பட்டர் naan. கிர்ர்ர்ர்ர். ஆனால் முதலுக்கு மோசமில்லை.



கடைசியாக உள்ளே தள்ளிய கேரட் ஹல்வாவும், ரப்டியும்(இதுவும் லக்னோ ஸ்பெஷல்) சூப்பர்.


மேலதிக தகவல்கள்

உணவகம் - கலிங்கா; கெபாப் கோர்ட்
இடம் - 100 Feet Bye Pass Road, வேளச்சேரி. கீழே கலிங்காவும் முதல் மாடியில் கெபாப் கோர்ட்டும் உள்ளது
டப்பு - கலிங்கா நினைவில்லை. கெபாப் கோர்ட் 1200 ரூபாய் இருவருக்கு (கெபாப்ஸே 300 ரூபாய் என்பதை கவனத்தில் கொள்க).

பரிந்துரை - கலிங்கா - வேண்டாம்; கெபாப் கோர்ட் - ஒரு தடவை வொர்த் ட்ரையிங்

January 20, 2010

அளவுக்கு மீறினால்...

இப்போதைய பரபரப்பான காலத்தில் குண்டூசி விற்கக்கூட அட்ராக்டிவான விளம்பரம் தேவைப்படுகிறது. டிவி, பத்திரிக்கை, ஹோர்டிங் போர்டுகள், ஆஃபர், ஸ்டால்கள், ஸ்பான்சர் என பல வகையில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இது நுகர்வோர் பொருட்களுக்கு மட்டும்தான் என்ற நிலை மாறி அனைத்து துறைகளும் தத்தம் இருப்பைக் காட்டிக்கொள்ள விளம்பரம் தர ஆரம்பித்துவிட்டன.

தினசரிகளிலும் டிவி சேனல்களிலும் இப்போது நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சினிமா படங்களுக்கான விளம்பரங்கள் தான் ஜாஸ்தி. விளம்பரங்கள் மட்டுமில்லாமல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை க்ரியேட் பண்ண/கூடச் செய்ய டாக் ஷோ, கெஸ்ட் ஷோ என நிறைய ப்ரோமோ நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த ப்ரோமோ நிகழ்ச்சிகளின் நோக்கமான க்ரியேட்டிங்க் எக்ஸ்பெக்டேஷன் சில/பல சமயங்களில் எதிர்மறையாய் போய்விடுகிறது.

முதலில் டிவி விளம்பரங்களுக்கு வருவோம். சன் டிவியை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்க வேண்டாம். சன் குழும சேனல்களில் சோப் விளம்பரத்தைவிட அதிக தடவை விஜய் தான் வருகிறார். திரும்ப திரும்ப காட்டும்போது அடப்போங்கடா என்ற ஃபீலிங் வருகிறது. இது இல்லாமல் கலைஞர், விஜய், ஜெயா போன்ற சேனல்களில் ஒளிபரப்பப்படும் ட்ரெய்லர்கள் அடுத்த ரகம். இதில் சில ட்ரெய்லர்களைப் பார்த்தாலே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படும். சில சமயங்களில் ட்ரெய்லரே இப்படின்னா படம் எப்புடி இருக்கும் என்ற பீதி ஏற்படும்.

அடுத்து ரிலீசான படங்களிலிருந்து சில சுவாரஸ்யமான சீன்கள் போடுவார்கள். சில சீன்கள் நிஜமாவே சூப்பராக இருக்கும். சில சீன்களை பார்த்தால் அஞ்சு நிமிஷ சீனையே பார்க்க முடியலயே. இரண்டரை மணி நேரம் படம் எப்படி பார்ப்பது என்ற பயம் ஏற்படும். பாடல்கள் ஒளிபரப்பப்படுவது இன்னொரு வகையான விளம்பரம். இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். இன்பாஃக்ட் விஜய் படங்கள் கொஞ்சம் ஓடுவது இதனால்தான்.

இப்போ தான் இருக்கு பாடாவதி பிரச்சனை. ஒரு படம் ரிலீசாவதற்கு முன்னால் அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அத்தனை பேரையும் சோபாவில் உட்கார வைத்தோ அல்லது முளைப்பாரி சுற்றி கும்மியடிப்பதுபோல் செமி சர்க்கிளாக நிற்க வைத்தோ பேட்டி/கல்ந்துரையாடல் என்ற பெயரில் உளறவிடுவது. அந்த மாதிரி நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை இந்தப் படத்துக்காக உசிர கொடுத்து நடிச்சோம். எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள். பேட்டி எடுக்குற பிரகஸ்பதி கண்ண சிமிட்டிக்கிட்டே ஹீரோயின் கிட்ட ஹீரோவப் பத்தியும், ஹீரோகிட்ட ஹீரோயினோட பெர்பாஃமன்ஸ் பத்தியும் கேணத்தனமா ஏதாவது கேட்டு வைக்கும். முக்கியமா ஹீரோக்கோ இல்ல ஹீரோயினுக்கோ ஏதாவது டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்னும்போது கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்.

அடுத்ததா நம்ம கிரியேட்டிவ் மண்டை வருவாரு. பேட்டி எடுக்கறவங்க தன் இண்டலிஜன்ஸ் காமிக்க இது அந்தப் படத்தோட காப்பியாம்பாங்க. இவரும் சிரிச்சுக்கிட்டே அப்படி ஒரு படம் வந்துதாம்பாரு (முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). அதெப்பெடி எல்லா டைரக்டர்களும் சொல்லி வச்சா மாதிரி "வித்யாசமான சப்ஜெக்ட்"ன்னு சொல்றாங்கன்னு தெரியல. ஹீரோ செட்டுல காமன் மேன் மாதிரி நடந்துகிட்டார். டீ தான் சாப்பிட்டார். ரிக்ஷாவுல தான் வந்தார்ன்னு ஹீரோக்கு ஜைன் ஜக் போடுவாங்க (அசல் வரட்டும். சரணுக்கு இருக்கு). இதெல்லாம் செஞ்சாரே கொஞ்சமாச்சும் நடிச்சாரான்னு கேளுங்க. ம்ஹூம். ஏதாவது எக்குத்தப்பா சொன்னா அடுத்த படத்துக்கு கால்ஷீட் கிடைக்காதுல்ல.

படத்திற்கு பிரமாண்டம் அவசியம் தான். சில சமயங்களில் மட்டும். பெரிய மாளிகை போன்ற செட்டோ, வெளிநாட்டு பாடலோ பார்க்கும்போது மக்கள் தங்கள் ஏக்கங்களை தீர்த்துக் கொள்வார்கள். அதுவும் அவசியமென்றால் செய்யலாம். அதை விடுத்து ஹீரோ போட்ட கண்ணாடி 4 கோடி, ஷூவுக்கு 3 கோடி என்றெல்லாம் செலவு செய்வது எதற்கு (செல்வா ஆயிரத்தில் ஒருவன் ஆப்பு வச்சிருச்சு. அடுத்த படத்துலயாவது பார்த்து பண்ணுங்க)? சன் ரைஸ் காமிக்கிறதுக்கு ரொம்ப மெனெக்கெட்டோம். அதுக்கே ஒரு 4 கோடி போச்சும்பார்கள். எவன் அப்பன் வூட்டு காசோதானே?

இந்த அலப்பறை பண்றானுவளேன்னு தியேட்டர் போனா கிர்ர்ர்ர்ர். ஹீரோ சுழட்டி சுழட்டி அடிக்கும்போதே நமக்கும் தலைவலி வந்துருது. இவ்ளோ கோவம் ஏன்னு யோசிப்பீங்கதானே. போன வாரம் ஒரு கருமத்த பார்த்து தொலச்சேன். இத்தனைக்கும் பாதி படம் கூட பார்க்கல. ரெண்டு வருஷம் எடுக்க இந்தப் படத்துல என்ன இருக்கு (சீயான் இப்படியே தேடிப்போய் மாட்டுங்க. விளங்கிரும்)? ஹீரோயின் ஒரு பாட்டுல போட்ட செருப்பு 3 கோடியாமாம். படதுவக்க விழா அழைப்பிதழ் 15,000 ரூபாய். படத்த ஒழுங்கா எடுங்கப்பு. கிராமத்தயெல்லாம் அப்புறம் தத்து எடுக்கலாம்.

January 18, 2010

காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்

பொங்கல் பொங்கித் தின்னு, கட்டு கட்டா கரும்பு கடிச்சு (விக்னேஷ்வரி அழாதீங்க) டயர்டா படுத்தா, மறுநாள் அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி ஒரே அடம். காலம் காலமா தொடர்ந்து செய்யற இந்த சேவையை??!! இந்த வருடமும் பண்ணியாச்சு. தீபாவளில காசு கரியாகற மாதிரி இல்லாம பொங்கல் போது வசூல் சூப்பரா இருக்கும். அதுவும் காணும் பொங்கல் அன்னிக்கு கால்ல விழுந்தா காசு. ஸ்ட்ரிக்ட்லி ஃபார் லேடீஸ்:)

எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும். கல்யாணத்துக்கு முன்னால குளிச்சோமா, போட்டத தின்னோமான்னு ஜம்முன்னு போச்சு. கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்) பாதி வேலைய பண்றது (அ) ஒத்தாசை பண்றது. மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே காய்கறி நறுக்கறது, தேங்காய் கீறறதுன்னு எடுபுடி வேலைலயே ஓட்டிக்கிட்டிருக்கேன். க.முல பொங்கலன்னிக்கு தலைவாழை இலைல சர்க்கரைப் பொங்கல், தயிர் பச்சடி, வடை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், பரங்கிக்காய் பொரியல், சௌசௌ கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், தாளிச்ச மோர் மெனுவப் போட்டுடுவாங்க (வாழை இலைல ரசம் சாதம் சாப்பிடற கலைய இன்னும் கத்துக்காம கஷ்டப்படறது வேற விஷயம்). க.பில கிடைக்கிற காயெல்லாம் போட்டு கூட்டுக்கு ஏதோ ஒரு உறவுபோல சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பச்சடி, ரசம், வடை. மூணு வருஷமா மாமியாரும் உங்கம்மா வீட்டு வழக்கமென்னன்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் சொல்லிட்டே இருக்கேன். மறைமுகமா அதெல்லாம் மறந்துரு. இனி இதான் பொங்கல் மெனுன்னு சொல்றா மாதிரியே இருக்கு.

காலைல 4 மணிக்கே எந்திரிச்சு காலைக்குள்ள சமையல முடிச்சு, பொங்கப் பானைல பாலோடு அரிசி, பருப்பு, வெல்லம் போட்டு பொங்கும்போது குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல்ன்னு சவுண்டு விடறது வழக்கம். திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. கீழே ஒரு நியூஸ்பேப்பர பரத்தி வச்சு அதுல சக்கைய சேமிச்சு??!! பின்னால கொளுத்தி அதுல பிஞ்சு மக்காச்சோளத்த வாட்டி திம்பது வழக்கம். இது க.முல. க.பில பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அதை குப்பைத்தொட்டியில போடும்போது, இப்படி நடந்துகொள்வது, நம்ம மரியாதைய காப்பாத்திக்கவா? இல்ல அவங்களுக்கு தர்ற மரியாதையா? இல்ல நல்ல பொண்ணு இமேஜான்னு தெரியல. என் இயல்பு தொலைவதெதனால்ன்னும் தெரியல. இந்த தடவை தை மாசம் மதியம் தான் பொறந்ததால ஆற அமர மாமியாரோட அரட்டை அடிச்சுகிட்டே பொறுமையா சமையல் முடிச்சு பொங்கல் பொங்கி சாப்பிட்டப்போது மனி சாயந்திரம் 4.30. எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. மறுநாள் காணும் பொங்கல்.

பொங்கலன்று பண்ண சர்க்கரைப் பொங்கல், சாம்பார், பொரியல், கூட்டு, சாதம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து தனியா வச்சிருவாங்க. இதுல சாம்பார், பொரியல், கூட்டு எல்லாத்தையும் போட்டு ஒன்னா கொதிக்க வெச்சு எரிச்ச கூட்டு ஆக்கிடுவாங்க (சாம்பார மட்டும் ரிப்பேர் பண்னி நைட் சாப்பிடற மேட்டர் ஒன்னு இருக்கு. அப்புறமா வேற பதிவுல அதப் பத்தின ரெசிபி தர்றேன்). அப்புறம் வெறும் சாதத்தில மஞ்சள் தூள், குங்குமம் போட்டு பிசைஞ்சு கலர் கலரா சாதம் பண்ணிப்பாங்க. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும். க.முல காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாவில் வசித்த வீடுகளில் தோட்டமிருந்தது. அதனால தோட்டதிலேயே கோலம் போட்டு (நான் இப்பவும் வேடிக்கப் பார்த்து) மஞ்சள் கொத்தின் இலைய பரப்பி வச்சு கணு வைக்கனும். முதல்ல சர்க்கரைப் பொங்கல். அப்புறம் மஞ்சள் சாதம். அப்புறம் சிகப்பு சாதம். எரிச்ச கூட்டு. இப்படி எல்லாத்தையும் வரிசையா, அழகா "காக்கா பிடி வெச்சேன். கணுப் பிடி வெச்சேன். காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்"ன்னு சொல்லிக்கிட்டே வைக்கனும் (சத்தியமா ஏன்னு தெரியாது). அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). முந்தின நாள் வாங்கின மஞ்சள் கிழங்கை பெரியவங்க கிட்ட (இதுவும் லேடிஸ் ஒன்லி. கல்யாணமானவங்கன்னா வூட்டுக்காரர் செய்யலாம்) கொடுத்து நெத்தில, கன்னத்துல எல்லாம் தேய்க்க சொல்லி கால்ல விழுனும் (நோ. காசு இப்ப தரமாட்டாங்க). அப்பால குளிச்சிட்டு வந்து மறுபடியும் கால்ல விழுந்தா துட்டு மாமே. துட்டு. "என்னா மாமா. ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வெறும் 100 ரூபாயா தர்றது"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்டியல ரொப்பிடுவோம். ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த வருஷம் கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய், ஒரு டிசைனர் சல்வாரோட நின்னுடிச்சு. க.பில இந்த டெக்னிக் வொர்க் அவுட் பண்றதுக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. ஏதோ அவங்களா பார்த்து கொடுத்து தான் உண்டு.

க.மு பொங்கலுக்கும் க.பி பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் மாறாம நடந்துக்கிட்டே இருக்கு. அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்:)

January 12, 2010

கலெக்ஷன் டல்லடிக்குதே??!!

வேட்டைக்காரன் பாடல்களை முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். கரிகாலன், சின்னத் தாமரை பாடல்களில் விஜயின் கெட்டப்பை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானது உண்மை. பார்த்துக்கொண்டிருந்த அம்மா சொன்னது "இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?"
**********

சட்டக் கல்லூரி மாணவன் அடிவாங்கிய சம்பவத்தின் போது வேடிக்கை பார்த்தார்கள் என வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்த தமிழக மீடியாக்கள் ஒரு எஸ்.ஐ உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது மற்றவர்கள் காட்டிய அலட்சியத்தை கண்டுக்கவேயில்லை. அது சரி பொங்கலுக்கு நமீதாவையோ தமன்னாவையோ பேட்டி எடுக்கனுமில்ல. காவல் துறை மந்திரி ஒரு கண்டன அறிக்கையோ/துக்கம் தூக்கலாக இருக்கிறதென்ற அறிக்கையோ கூட விடவில்லை. அது சரி முறுக்கிக்கொ(ல்லு)ள்ளும் மூத்தவரை சமாதானப் படுத்துவாரா இல்லை பெண் சிங்கம் ப்ரிவ்யூ பார்ப்பாரா. அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை. 5 லட்சமோ பத்து லட்சமோ அரசு நிதியில் இருந்து கொடுக்கலாம். இறந்தவர் குடும்பம் அதை கையில் வாங்குவதற்குள் செத்தவருக்கு பத்தாவது வருச திவசம் வந்துடும். அப்புறம் அந்த குற்றவாளி பெண் எஸ்.ஐ பாரதி கண்ட புதுமை பெண். வாழ்க பெண்ணியம்.
***********

ரொம்ப நாள் கழித்து கிண்டி சிறுவர் பூங்காவிற்கு ஜூனியருடன் சென்றிருந்தோம். அவுத்துவுட்ட குதிரை மாதிரி ஒரே ஒட்டம். பின்னால் ஓடி நாக்குத் தள்ளிவிட்டது (மதியம் ரத்னா கஃபேவில் மீல்ஸ் முடித்தவுடனே). மான் இருந்த இடத்துக்கு சென்று "மான் தாப்பித்தியா (சாப்பிட்டியா)". வான்கோழியிடம் "ஆச்டிச் மந்து தாப்பித்தியா?" (ஆஸ்ட்ரிச் மருந்து சாப்பிட்டியா?). நீர் நாய் இருந்த இடத்தில் "ம்மா நாய் ஜோஜோ". ஆமாண்டா ஜோ குளிக்கிது என்றேன். "ம்மா தோப்(சோப்) காணோம்" என்றான் இரண்டு கையையும் விரித்து காமித்தான். Felt great. நிறைய குழந்தைகள் விளையாடுமிடங்கள் சரியான பராமரிப்பு இல்லாத உடைந்த நிலையில் இருக்கிறது. கவனித்தால் புண்ணியமாய் போகும்.
***********

அண்ணாநகர் பக்கம் செல்வோர் பார்க் ரோடில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே இருக்கும் பானி பூரி/ மசாலா பூரி ட்ரை பண்ணுங்கள். பானி பூரி செம ஹாட். காரம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கே மூக்கிலும் நாக்கிலும் தண்ணி கொட்டுது. தயிர்/பருப்பு//நெய் வகையறாக்கள் மசாலா பூரி சாப்பிடலாம். கட்லெட்/சமோசா/பூரி போட்டு என நிறைய ஆப்சன்கள். பேல் பூரியும் கிடைக்கிறது. இவர்களுடைய ப்ராஞ் வண்டி SBOA ஸ்கூல் அருகிலிருக்கும் ICICI பேங்க் வாசலில். டோண்ட் மிஸ்.
***********

போன வருடத்தைவிட இந்த வருடத்துக்கான பொங்கல் கலெக்ஷன் கொஞ்சம் டல்லடிக்குது. தம்பி காசிற்கு பதிலாக சல்வார் எடுத்துக்கொடுத்தது கலெக்ஷனை பெருவாரியாக குறைத்துவிட்டது. மற்ற அண்ணன்மார்களும் மணியார்டர், பெரியம்மாவிடம் குடுத்தனுபுதல் என செய்ததால் அப்பிடி இப்பிடி குறைஞ்சிருச்சு. நேரில் பார்த்திருந்தால் கழுத்தில் கத்தி வைத்து வசூல் செய்யலாம். ஆளுக்கொரு மூலையில். என்னத்த செய்ய? அடுத்த வருஷம் சரிபண்ணிடனும்.

அனைவருக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

January 8, 2010

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.


விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க


எச்ச

ரி

ர்ரீ



க்கா



ம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.


அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே


யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா


அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே


இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி


சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.

January 6, 2010

3 Idiots

முன்னாபாய் தந்த ஹிரானியிடமிருந்து ஹிலேரியசாய் மற்றொன்று. மாதவன் விமானத்தை நிறுத்துவதில் தொடங்கி படம் முடியும் வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். அப்படியே அழுத்தமாய் ஒரு மெசேஜும் சொல்கிறார்கள். ஃபர்ஹானும், ராஜுவும் சதுர் என்ற மற்றொரு நண்பனின் தகவலின் அடிப்படையில் தங்கள் தோழனான ரான்ச்சோவை தேடி ஷிம்லா பயணிக்கிறார்கள். அங்கு ரான்ச்சோ என்ற பெயரில் வேறொருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். ரான்ச்சோவை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை வெகு சுவாரசியமாக பிளாஷ்பேக்குடன் சொல்லியிருக்கிறார்கள்.

ரான்ச்சோவாக ஆமிர். ஃபர்ஹானாக மாதவன். ராஜ் கேரக்டருக்கு ஷர்மான். மூவருமே அசத்தலான சாய்ஸ். பாடி லேங்குவேஜிலேயே கல்லூரி மாணவர்கள் இமேஜைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். இவர்கள் மட்டுமில்லாது படத்தில் வரும் அனைவருமே சரியான தேர்வு. தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். போமன் இரானியைத் தவிர இந்த கேரக்டரை வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியாது. கரீனா பாட்டி. ம்ம்ம். லேபில் மெஷினுக்கான ஆமிர்கானின் விளக்கம் சூப்பர்ப். புத்தகத்திலிருந்து வாந்தியெடுப்பதால் பயனில்லை. உணர்ந்து படிக்கவும், செயல்படுத்தி பார்ப்பதும் அவசியம் என்ற மெஸேஜ் படம் முழுவதும். ஆனால் அவ்வளவு நகைச்சுவையோடு.



Salt water is good conductor of electricity தொடங்கி, சமத்கார் பலாத்கார் ஆசிரியர் தின உரை, குஜ்லி கி ரொட்டி என அனைத்தும் ROTFL வகையறா. அதுவும் ஆஸ்பத்திரியில் ஷர்மானிடம் ஆமிர் அவிழ்த்துவிடும் பொய் மூட்டையும், மாதவனின் ரியாக்ஷனும் சிம்ப்ளி க்ரேட். அந்த சீனியர் மரணம், ஆமிரின் பிளாஷ்பேக், கரீனாவின் அண்ணனைப் பற்றிய உண்மை, ஷர்மானின் இண்டர்வ்யூ காட்சிகள், மாதவனுக்கும் அவர் அப்பாவிற்கும் நடக்கும் உரையாடல் என நிறைய இடங்களில் மனம் கணக்க வைக்கிறார். எல்லாரையும் விட சதுராக வரும் ஓம் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.

பாடல்கள் அத்தனையுமே அருமை. டைட்டில் சாங், ஆல் இஸ் வெல் என எல்லாமே நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த சீனியர் கிதார் இசைத்துக்கொண்டே சோகமாக பாடும் பாடல் வரிகள் நச்.

Give me some sunshine.
Give me some rain.
Give me a chance to grow up once again.

ஒளிப்பதிவும் அருமை. சிம்லா, லடாக்கின் மொத்த அழகையும் கேமிரா அள்ளிக்கொடுக்கிறது. அதுவும் சிம்லா மலைகளின் மீது கார் போகும்போது பசுமையான காட்சிகள், உடனே கரடுமுரடான பாறைகள் என காட்டுவது வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் தொடர்ந்து வரும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்துகிறது (பின்ன. எப்பதான் நானும் இயம், இசம்களை கண்டுபிடிக்கறது? எப்ப எலக்கியவாதி ஆகறது?).

மிஸ் பண்ணக்கூடாத படம்.

3 Idiots - Brilliant.

டிஸ்கி : சனி இரவு புக் செய்திருந்த வேட்டைக்காரனை விடுத்து ஞாயிறு மதியம் இதற்கு வர சம்மதித்த ரகுவுக்கு சலாம்.

தமிழில் வரும் பட்சத்தில்

எதிர்பார்ப்பு : சூர்யா என் சாய்ஸ். நாசர் வைரசாக நடிக்கலாம்.

பயம் 1 : வைரசாக பிரகாஷ் ராஜ்
பயம் 2 : இந்தப் படம் சேரன் கண்ணில் படாமல் இருத்தல் நலம். கல்லூரியின் ஏதாவது ஒரு தூணில் சாய்ந்துகொண்டு முதுகைக் காட்டி, குலுங்கி குலுங்கி அவர் அழுவதைப் பார்க்க எனக்கு தைரியம் இல்லை.
பயம் 3 : இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.

January 4, 2010

ரகோத்தமன் பார்வையில் ராஜிவ் படுகொலை...

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புத்தகம் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி திரு. ரஹோத்தமன் அவர்கள் எழுதியுள்ள "ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்". A to Z ஏற்கனவே நிறைய விஷயங்களை அலசியாயிற்று. இன்னும் என்ன புதுசாய் என்ற எண்ணமே புத்தகத்தை படிக்க தூண்டுகிறது. வெள்ளிகிழமையன்று புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகத்தை சனிக்கிழமை இரவு இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்தேன். புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பான நடை.

ஆசிரியர் சொல்வதைப் பார்த்தால்,விடுதலைப் புலிகளின் (சதித்)திட்டமும் அதனை அவர்கள் செயல்படுத்திய விதமும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஏற்கனவே கார்த்திகேயனின் புத்தகத்தில் இதைப் பற்றி மேலோட்டமாக படித்திருந்தாலும், இங்கு சொல்லப்பட்ட விதம் அட்டகாசம். முக்கியமாக தொடர்பு (contacts) ஏற்படுத்திக்கொள்ளும் விதம். நளினியை தங்கள் வசப்படுத்தியது, மரகதம் சந்திரசேகரின் மகன் மூலம் ராஜிவுக்கு மாலையிட முயற்சி செய்தது என சில விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதே போல் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து என்னென்ன பேருந்துகள், எத்தனை மணிக்கு, எந்தெந்த ஊருக்கு போகிறதென்ற விவரம் சிவராசனின் டைரியில் குறித்து வைக்கப்பட்டிருந்ததாக ரஹோத்தமன் குறிப்பிட்டுள்ளார். வந்தோம் கொன்றோம் சென்றோமென்றில்லாமல் க்ளீன் எக்ஸிக்யூஷன். ஹரிபாபுவின் கேமரா மட்டும் இல்லாவிட்டால் சி.பி.ஐ இந்தளவு துரிதமாக முன்னேறியிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகமே. கிட்டுவின் சவால் முறியடிக்கப்படாமலே போயிருக்கலாம்.

புத்தகத்தின் மூலம் ரஹோத்தமன் வருத்தப்படுவது/கோவப்படுவது நிர்வாகத்தின் எல்லாம் மட்டங்களில் தென்படும் மட்டமான அலட்சியப்போக்கு.

"நமது நிர்வாகத் தளங்களில் புரையோடிப் போயிருக்கும் அலட்சிய மனோபாவம், பொறுப்பற்ற தன்மை, எதிலும் மேம்போக்கான அணுகுமுறை, உயரதிகாரிகளின் திடுக்கிடச் செய்யும் சில முடிவுகள், அரசியல் சூழ்ச்சிகள், ரகசிய பேரங்கள் போன்றவற்றை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்ததை மிக முக்கியமாகக் கருதுகிறேன்."

"மாபெரும் ஜனநாயக தேசம் என்று மார் தட்டிக்கொள்கிறோம். அடிப்படை ஒழுக்கங்களில் பெரும்பாலும் கோட்டை விட்டுவிடுகிறோம்."


சத்தியமான வார்த்தைகள். ஒரு சிட்டிங் பிரதமருக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் என்ன பயன்? அரசியல்வாதிகளின் செயல்பாடும் ஆத்திரத்தை வரவழைக்கிறது. ஐந்து லட்ச ரூபாய் நிதி கொடுத்த ஒரே காரணத்திற்காக யாரையோ மாலையிட அனுமதிப்பதில் தெரிகிறது காசு/பதவி மேல் அவர்களின் மோகம். வைகோவிற்கு முன்னரே இது தெரியும் என கைகாட்டுகிறார் ஆசிரியர். இது உண்மையானால் (உண்மைதான் என நம்பத்தோன்றுகிறது) வைகோ மாபெரும் தவறிழைத்திருக்கிறார். ராஜிவ் காந்திக்காக சொல்லவில்லை. அவருடன் உயிரிழந்தோர், அதன் பின்னான குழப்பங்கள், வீண் நேர மற்றும் பண விரயங்களைத் தவிர்த்திருக்கலாமே.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கருதப்படுகிறது. அதேபோல் தாமதிக்கப்பட்ட உத்தரவுகள் அர்த்தமற்றதாகவே போகிறது. ஒரு இரவு முழுவதும் கமாண்டோக்களை வைத்துக்கொண்டு சிவராசன் மற்றும் சுபா பதுங்கியிருந்த வீட்டை ரவுண்ட் அப் செய்தும் மேற்கொண்டு உத்தரவு வராததால் ஒன்றும் செய்ய இயலாத கையாலாகத்தனத்தை வெறுப்புடன் குறிப்பிட்டுள்ளார். இதே தாமதம் தான் மும்பையில் பல உயிர்களை காவு வாங்கியது. நான் தான் அதிகாரி என் உத்தரவுகள் தான் செல்லும் என்ற மனோபாவம் மாறினாலொழிய இதுபோன்ற காட்சிகள் எத்தனை ஆண்டுகளானாலும் மாறாது.

எல்லாவற்றையும் விட புத்தகமெங்கும் விரவிக்கிடப்பது சிறப்பு புலனாய்வுப் படையின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் மீதான கோவம். பல இடங்களில் நமக்கேன் வம்பு என்ற மனோபாவத்துடனே அவர் செயல்பட்டது போலத் தெரிகிறது. இப்படியான மனநிலையில் எந்தளவு நியாயமான விசாரணை நடக்குமென்பது கேள்விக்குறியாகிறது. அதேபோல் ரா, ஐ.பி போன்ற அமைப்புகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை (அப்படிப்பட்ட தோற்றமேற்படுவதே அசிங்கம்) சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐ.பிக்கு கிடைத்ததாக சொல்லப்படும் வீடியோ கேசட் புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் துரிதமாக விசாரணை முடிந்திருக்கும். நீ தான் காரணம் என ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டும் போக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இறந்தவர்களின் பட்டியலில் சரி பாதி பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாவது பேரைப் பார்த்தவுடம் இனம் புரியாத வலி மேலோங்கி நீர்த் திரை கண்களை மறைத்தது. பல பேரின் அஜாக்கிரதையால் ஐ'ம் மிஸ்ஸிங் யூ மாமா