June 29, 2009

தருமன் மாமா

சிலசமயங்களில் ஒருவருடைய சரித்திரத்தை சொன்னால கூட அவரைப் பார்த்ததாய் நினைவிருக்காது. வெகுசிலரை நினைவுப்படுத்த ஒரிரு வார்த்தைகளை போதும். சமீபத்தில் ஒரு பதிவால் சடாரென நினைவுக்கு வந்தவர் தருமன் மாமா. பதினெட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்றாலும் துளிக்கூட மங்காமல் புதிதாய் ப்ரிண்ட் போட்ட போட்டோ ஆல்பம் போல் தெளிவாய் நினைவுக்கு வருகின்றன. தருமன் மாமா பேசியவை, அவரைப் பற்றி அப்பாவும் ரவி அங்கிளும் சொன்னவை என எல்லாம் ஞாபகமிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தோம். நியூ ஹவுஸிங் போர்டில் குடியிருந்தபோது தான் தர்மன் மாமாவைத் தெரியும். அப்பாவிடம் பணிபுரிந்தவர். ஐந்தே முக்கால் அடி உயரம், கறுப்பு நிறம் எப்பவுமே (அ) நான் பார்க்கும் போதெல்லாம் சந்தனக் கலர் அல்லது லைட் வுட் கலரில் சஃபாரியும், கறுப்பு ஷூவும், தங்கக் கலரில் வாட்சும் அணிந்திருப்பார். அப்பாவிடம் வேலை செய்தவர்களில் பாதிப் பேரை மாமா என்றுதான் அழைப்போம். ரவி அங்கிள் மட்டும் விதிவிலக்கு. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு ஸார் என்றழைக்க பழகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்கு மேல் மாமாவுக்கு நைட் ட்யூட்டி வரும். சாயந்திரம் மாமா வீட்டுக்கு வந்தாலே தெரியும் அன்று மாமாவுக்கு நைட் ட்யூட்டியென. வரும்போது முகம் கொள்ளா சிரிப்பும் கைக்கொள்ளா இனிப்புமாக தான் உள்ளே வருவார். மாமா வாங்கி வரும் இனிப்புகள் ரேவல்கானின் பான்பசந்த் சாக்லேட்டும், மேங்கோ பைட் சாக்லேட்டும். ஒன்னு ரெண்டு இல்ல. ஒரு பாக்கெட் வாங்கிட்டு வருவார். அது எப்படின்னு தெரியாது. கரெக்டா அந்தக் கவரிலுள்ள சாக்லேட்டுகள் முடியும் தருவாயில் மாமாவிடமிருந்து அடுத்த பாக்கெட் வந்துவிடும் (இத்தனைக்கும் ஒரு நாளைக்கு இவ்ளோதான் என்ற அம்மாவின் கணக்கை எப்பவாவது தான் ஃபாலோ பண்ணுவோம். அம்மாக்குத் தெரிந்து ஒன்னு, தெரியாம பல என்றுதான் போய்க்கொண்டிருந்தது). மாமாவின் அந்த பளீர் சிரிப்பும் "என்ன பாப்பா நல்லா படிக்கிறயா?" என்ற சிரிப்பினூடே விசாரிக்கும் அக்கறையும் இன்னும் நினைவிலிருக்கிறது.

"உனக்கெதுக்குயா இந்த தேவையில்லாத வேலை?" என ஆரம்பிக்கும் அட்வைஸ்களை அடிக்கடி ரவி அங்கிள் தர்மன் மாமாவிடம் சொல்லக் கேட்டிருக்கேன். அப்போதிருந்த வயதில் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என புரிந்துகொள்ள இயலவில்லை. பின்னர் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் மாமா கொஞ்சம் விளம்பரப் பிரியர் எனத் தெரிந்தது. வேலையை சரியாக செய்துவிடுவார். அடிக்கடி மாமா செய்திதாள்களைக் கொண்டு வந்து மூலையில் அவர் நிற்கும் போட்டோவை காமிப்பார். "பாரு பாப்பா. மாமா போட்டோ பேப்பர்ல வந்திருக்கு". கடைசியாக மாமா வந்துபோனதிலிருந்து இரு வாரம் கழித்து அம்மா தான் எழுப்பி சொன்னார்கள். "வித்யா. தர்மன் மாமா செத்துப்போய்ட்டார்டி. பேப்பர்ல அவர் போட்டோ வந்திருக்குப் பார்" என்று. தனியாக இறந்து போனவர்கள் பட்டியலிலும், பிணக்குவியலுக்கிடையிலும் என இரண்டு போட்டோவாக வந்தது. அப்போதைக்கு இறப்பின் வலியை நான் உணர்ந்திருக்கவில்லை. அந்தநொடி என் கவலையெல்லாம் இனிமே யார் பான்பசந்த் சாக்லேட் வாங்கித்தருவார்கள் என்பதுதான். சிறிது சிறிதாக தெளிவு வர வர தர்மன் மாமாவின் மறைவுக்கு ரொம்ப வருந்தினேன். அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.

பான்பசந்த் சாக்லேட்டுகள் வருவதேயில்லையென்றாலும், உங்கள் நினைவுகள் மட்டும் வரத்தவறுவதில்லை மாமா. உங்களை ரொம்ப மிஸ் செய்தேன். ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது.

June 23, 2009

ஷங்கர் - எஹ்ஸான் - லாய்

டிஸ்கி : இந்தப் பதிவின் டிஸ்கிய முதலில் படிச்சிடுங்க:)

அதிர வைக்கும் கிதாரிஸ்ட், டெக்னிக்கலி ஸ்ட்ராங் கீபோர்ட் ப்ளேயர், வசீகரிக்கும் குரலுடைய ஒருவர். மூவரும் ஒன்று சேர்ந்தால் - Breathless. இந்த ட்ரையோ தான் ஷங்கர் மகாதேவன் - எஹ்ஸான் நுரானி - லாய் மெண்டோன்ஸா.
இப்போது ஹிந்தி திரையுலகில் சூப்பர் ஹிட் மியூசிக் டைரக்டர்ஸ். லாய் ஏ.ஆர். ரஹ்மானிடம் கீ-போர்ட் பிளேயராக இருந்தபோது ஷங்கர் மகாதேவனோடு பழக்கமேற்பட்டது. பின்னர் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த எஹ்ஸானோடு சேர "தொட்டதெல்லாம் துலங்கும்" என்ற வகையில் வெற்றிப் படிக்கட்டில் சர்ரென ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷங்கர் மகாதேவன் பெரியளவில் பேசப்பட்டது 1998 வெளிவந்த Breathless என்ற அவர் ஆல்பத்தின் பின் தான்.
ஜாவேத் அக்தரின் வரியில் அவர் பாடிய டைட்டில் சாங் சூப்பர் ஹிட். மூச்சு விடாமல் பாடப்பட்ட பாடல் எனக்கூறப்பட்டாலும் வேகமாக, சுத்தமான உச்சரிப்பில் பாடியதால் அப்படியிருந்தது என ஜாவேத் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

1998 Dus என்ற படத்திற்க்கு சந்தீப் சௌதாவுடன் சேர்ந்து இசையமத்தார்கள். "ஹிந்துஸ்தானி" என்ற அந்த பாடல் 1999 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது இந்தியாவை உற்சாகப்படுத்த யூஸ் ஆனது. 1999ஆம் ஆண்டு கே.கே என்ற பாடகருடன் இணைந்து Rockford என்ற படத்திற்கு இசையமைத்தார்கள்.

மில்லினியம் ஆண்டில் இவர்களின் தனிப் பயணம் ஆரம்பமானது. "Mission Kashmir" வியாபார ரீதியில் பெரிய வெற்றியில்லையென்றாலும் பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவும் சுனிதி சௌஹான் வாய்ஸில் பும்பரோ பாட்டு சூப்பர் ஹிட்.
சுப் கே சே சுன்
பாடலும், இவர்கள் மூவரும் தோன்றிய ரிந்த் போஷ் மால் பாடலும் நன்றாக இருக்கும்.

2001ல் "Dil Chahta hai" படம் இவர்களுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. எல்லா பாடல்களும் பெரியளவில் ரீச்சானது. இந்தப் படத்திற்காக இவர்களுக்கு RD Burman அவார்டும், Star Screen அவார்டும் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
ஜானே க்யோன்

டைட்டில் பாடலான தில் சாக்தா ஹை


2003ஆம் ஆண்டு வெளியான Kal Ho Na Ho, Kuch Na Kaho ரெண்டும் பெரிய ஹிட். Kal Ho Na Ho படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. Its the time to disco பெரிய டான்ஸ் பீவரை உருவாக்கியது.

அதேபோல் Kuch Na Kaho படத்தில் வரும் இந்தப் பாட்டு சூப்பர் ஹிட்.


அதற்க்குப் பின் அவர்கள் இசையமைத்த Bunty Aur Babli (அப்பா, பையன், மருமகள் மூவரும் கெட்ட ஆட்டம் போட்ட பாட்டு சூப்பர் ஹிட்), Kabhi Alvida Na Kehna, Don, Saalam-e-ishq, Jhoom Barabar Jhoom, Johny Gaddar, Tare Zameen Par, Rock on என வரிசையாக ஹிட்கள்.

தமிழில் இவர்கள் முதலில் இசையமைத்த படம் ஆளவந்தான். லேட்டஸ்டாக யாவரும் நலம்.

இப்போது ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் My Name is Khan படத்துக்கும் இவர்கள் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியிருக்கிறது. தமிழில் இவர்கள் மேலும் நிறைய படங்கள் இசையமைக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. கண்டிப்பாக ரசிக்கத்தக்க இசையைத் தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்ப்போம்.

June 21, 2009

அப்பாவும் நானும்

பெண் குழந்தைகளென்றாலே அப்பாவிடம் பாசமாக இருக்கும் விஷயம் தெரிந்த ஒன்று தான். அப்பாவைப் பற்றி பேசும்போது இந்த டயலாக்கையும் மீறி "எங்கப்பா தான் தி பெஸ்ட்" என்ற கர்வம் எல்லாப் பெண்களுக்குமே இருக்கும். நானும் விதிவிலக்கல்ல. தந்தை என்பவர் குழந்தைகளிடம் கண்டிப்போடுதான் இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக அப்பா ரொம்பவே பிரெண்ட்லி. எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோவக்காரர். அவர் உத்யோகம் அப்படி.

அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பப் பிண்ணனியில் M.A வரை அவர் படித்ததை நினைத்து இன்றளவும் நான் வியப்பதுண்டு. இதெல்லாம் சொல்லி வளர்த்தனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பவே இருந்தது. தான் பட்ட கஷ்டங்களைப் பிள்ளைகள் படக்கூடாதென்பதில் ரொம்பவே உறுதியா இருந்தார். We were also not demanding kids though:) படிப்பு சம்பந்தமாக எது கேட்டாலும் உடனே கிடைக்கும். அப்பாவின் வாசிப்பு பழக்கம் ஒரளவுக்கு எனக்கும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆங்கிலப் பேப்பர்களை வாசிக்க சொல்வது, அதில் வரும் கிராஸ்வோர்ட்க்கு விடை கண்டுபிடிக்க டிக்ஷ்னரியை புரட்டுவது என அப்பா சூப்பரா ஆங்கிலம் கற்றுத் தருவார். என்னோட ஒரளவுக்கு சுமாரான ஆங்கிலத்துக்கு அவரே குரு.

அப்பாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம். எங்க போய்ட்டு வந்த? ஏன் லேட்டு? யாரது போன்ற எந்த கேள்விகளும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையை எனக்கே தந்திருந்தார். +2 முடித்தபின் டீச்சர் ட்ரெய்னிங் தான் என வற்புறுத்திய உறவுகளிடம் "என் பொண்ணை என்ன விட அதிகமாத்தான் படிக்க வைப்பேன்" என சொல்லி பொறியியல் படிக்க வைத்தார். படிப்பு முடித்தவுடன் கல்யாணம் என வற்புறுத்திய அம்மாவை அப்பா மூலம் தான் சமாளிக்க முடிந்தது. ஆனால் நான் கேட்ட மூன்று வருடங்களை அப்பாவால் சாங்ஷன் பண்ண முடியவில்லை. ஒரு வருடத்துக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது.

எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ம்ம்ம் திரும்பவும் சின்னப்பொண்ணா மாறி உன் அரவணைப்பிலேயே இருக்கனும்ன்னு தோணுதுப்பா. தந்தையர் தின வாழ்த்துகள்ப்பா:)

டிஸ்கி : அப்பாவின் பிறந்தநாள் ஜூன் 18. அன்று சில காரணங்களால் பதிவிட இயலவில்லை. டூ இன் ஒன் பதிவாக தந்தையர் தினத்துக்காகவும், தந்தையின் பிறந்தநாளுக்காகவும் இன்று:)

June 17, 2009

கையேந்தி பவன்கள் - ஒரு மினி ஆராய்ச்சிக்??!! கட்டுரை

நான்கு சக்கர தள்ளுவண்டியில் ரோட்டோரங்களில் உணவு விற்கும்... ஹலோ இப்படியெல்லாம் கையேந்தி பவன்க்கு (கை.ப) விளக்கம் குடுத்தா நீங்க டென்ஸனாயிடுவீங்க தானே. நான் அதெல்லாம் பண்ணப் போறதில்ல. போன மாதம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது கை.ப பற்றிய பேச்சு வந்தது. சில பேர் கை.பவில் சாப்பிட்டாலே வயிற்றுப் பிரச்சனைகள் வருமென்ற ரேஞ்சில் பேசிக்கொண்டிருந்தார்கள். கை.பகளின் தீவிர ரசிகையான என்னை இந்த வார்த்தைகள் ரொம்பவே காயப்படுத்திவிட்டன. கை.பக்களை எப்படி அணுகவேண்டுமென்பதையும், நட்சத்திர ஹோட்டல்களை விட அவை பெஸ்ட் என நான் எண்ண என்னக் காரணம் என்பதையும் யோசித்ததின் விளைவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை (நிஜமாவே ஆராய்ச்சி பண்றவங்க மன்னிச்சுக்கோங்கப்பா)

நிறைய பேருக்கு பானிபூரி கடைகள், பக்கோடா விற்கும் கடைகள் எல்லாமே கையேந்தி பவன் என்ற நினைப்பு. அது தவறு. அவை எல்லாம் ஸ்ட்ரீட் புட்களில் (street food) பாஸ்ட் புட் (fast food) கேட்டகிரியில் வரும். அண்ணா நகரிலுள்ள கார்த்திக் டிபன் செண்டர், தி.நகரிலுள்ள பிரில்லியண்ட் டுட்டோரியல் அருகிலிருக்கும் சப்தகிரி எல்லாம் கை.பக்களுக்கு ஒரு படி மேல். அவை அட்வான்ஸ்டு வெர்ஷன்ஸ்:) டிபிக்கல் கை.பக்கள் மாலை ஆறு ஆறரை மணிவாக்கில் ஆரம்பித்து நள்ளிரவு வரை செயல்படும். உணவுகள் ரொம்ப சல்லிசான விலைக்கு கிடைக்கும். ஏ.சிக்கான கரண்ட் பில், வெயிட்டர் சம்பளமென எதுவும் உங்கள் தலையில் விடியாது:)

பொதுவாக கை.பக்களில் கிடைக்கும் உணவுகள் என்னன்னு பார்த்தா
இட்லி
தோசை (பொடி, ஊத்தப்பம், முட்டை)
ஆம்லெட்
ஹாஃப் பாயில்
பரோட்டா (பிளெயின்/கொத்து)
அசைவ உணவுகள் (சிக்கன்/மட்டன் பிரியாணி)
இவற்றிற்கு தொட்டுக்க சாம்பார்/சிவப்பு சட்னி/தேங்காய் சட்னி/குருமா/சால்னா.

நான் வெறும் சைவ கை.பக்களை மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளேன் (என்னைப் பொறுத்தவரை முட்டையும் சைவம் தான். ஹி ஹி).

#கை.பக்களில் சாப்பிடால் வயிற்று பிரச்சனை வராது. ஆனால் தயவு செய்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் நீரை குடிக்க வேண்டாம். Corporation water is the culprit. அப்ப அதே தண்ணில தான் சமைக்கிறாங்கன்னு கேப்பீங்கதானே. சமைக்கும் போது தண்ணி கொதிநிலைக்கு உட்படுத்தப்படுவதால் உணவுகளில் பிரச்சனை இல்லை. கை.பக்களில் சாப்பிடுவதற்கு முன் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கிக்கொள்வது உத்தமம்.

#அடுத்ததாக கை.பக்கள் அமைந்திருக்கும் இடம். சாக்கடைப் பக்கத்திலோ, புழுதிப் பறக்கும் சாலைகளிலிருப்பதை தவிர்ப்பதும் நலம். ஓரளவுக்கு சுத்தமான, கொஞ்சமே கொஞ்சம் ரோட்டிலிருந்து உள்வாங்கியிருக்கும் கை.பக்கள் நலம் பயக்கும்.

மேற்கூரிய இரண்டு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு கை.பக்களின் அட்வாண்டேஜ்களைப் பார்ப்போம்.

#உணவகங்களில் பரிமாறப்படும் உணவு பிரெஷ்ஷானதா என்பதில் சந்தேகமே. அதாவது உணவுகளின் மூலப் பொருட்கள் (இட்லி/தோசை மாவு, Base gravies) ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி வைத்திருப்பார்கள். நீங்கள் சாப்பிடும் பனீர் தோசையோ, க்ரீன் பீஸ் மசாலா தோசையோ நேற்றைய மிச்சமான கிரேவியை உட்டாலக்கடிப் பண்ணி செய்ததாக இருக்கும். ஆனால் கை.பக்களில் பிரிட்ஜ் வசதி கிடையாது. கவனித்திருப்பீர்களேயானால் வண்டியில் இருக்கும் உணவு பொருட்கள் தீரும் வரை கல்லா கட்ட மாட்டார்கள். அந்த வகையில் கிடைக்கும் அயிட்டங்கள் பிரெஷ் எனக் கொள்ளலாம்.

#பெரிய பெரிய ஹோட்டல்களின் கிச்சனைப் பார்த்தீங்கன்னா இன்னொரு தடவை அங்கே போக யோசிப்பீங்க. அங்கிருக்கும் சுத்தங்களை ஒப்பிடும்போது 70% கை.பக்கள் படு ஹைஜீனிக். தட்டின் மேல் வாழை இலையோ/மைக்கா பேப்பரோ போட்டு பரிமாறுவார்கள். (வாழை இலையே பெஸ்ட்.)

#நம் டேஸ்டுக்கு ஏற்றார் போல் உணவு கிடைக்கும்.
"அண்ணா பெப்பர் தூக்கலா, ஒரு கல் உப்பு ஜாஸ்தியா போட்டு ஒரு டபுள் ஆம்லெட்."
"பாஸ் எண்ணைய் கம்மியா விட்டு கொஞ்சாம் முறுகலா ஒரு தோசை"
"அக்கா ஊத்தப்பத்துல கொஞ்சம் வெங்காயம் போடறீங்களா?"
"சார் இந்தப் பரோட்டாவ மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் கல்லுல போட்டுத் தாங்களேன்."
"கொத்துப் பரோட்டால முட்டை போடாம சால்னா மட்டும் போட்டுப் பண்ணித்தாங்களேன்"

மேற்கூறிய எந்தவொரு டயலாக்கையும் ஏதாவதொரு உணவகத்தில் சொல்லிப் பாருங்கள். ஊரப் பார்க்கப் போ என விரட்டிவிடுவார்கள்.

#முக்கியமான விஷயம். பர்ஸ் பத்திரமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் ஒருத்தருக்கும் 25 அல்லது 30 ரூபாய் தாண்டாது. 2 இட்லி,ஒரு தோசை, ஒரு ஹாஃப் பாயில் எல்லாம் சேர்த்தால் கூட 20 ரூபாய் தாண்டாது. வயிறு நிறைய சாப்பிடலாம்.

#எந்த நேரத்திலும் உணவு கிடைக்கும். 9 மணிக்கெல்லாம் இட்லி ஓவர் என சொல்லும் சரவணபவன் போலில்லாமல் 12 மணிக்குக் கூட (அதிர்ஷடமிருக்கும் பட்சத்தில்) சுட சுட இட்லி கிடைக்கும்.

#ரெகுலர் கஸ்டமருக்கு பெரிய ஹோட்டல்களில் தரப்படும் மரியாதை கை.பக்களில் எப்போதுமே கிடைக்கும். உடனுக்குடன் கேட்டவை கிடைக்கும். சட்னி, சாம்பார் முதற்கொண்டு. கொலைப் பசியோடு இருக்கும்போது ஆர்டர் பண்ண அயிட்டம் வரும் வரைக்கும் பக்கத்து டேபிள்காரரின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவஸ்தையிருக்காது.
அடுத்த கப் சாம்பாருக்கு அரை மணிநேரம் வெயிட் பண்ண வேண்டிருக்காது.

மினி கட்டுரைங்கறதால இத்தோடு நிறுத்திக்கிறேன் (இதுக்கு மேல ஒன்னியும் இல்லங்கறது வேற விஷயம்).

டிஸ்கி : கட்டுரை முழுக்க முழுக்க ஆராய்ச்சியாளரின் சொந்தக் கருத்தும்/அனுபவமுமே. மாற்றுக் கருத்து தெரிவிக்கும் போட்டிக் கட்டுரையாளர்களுக்கு அடுத்த ரெஸ்டாரெண்டில் ஆகும் பில்லை செட்டில் செய்யும் தண்டனை வழங்கப்படுமென்பதை மிக மிக மிகப் பணிவம்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்:)

June 15, 2009

என்ன எழுதனும்? யாருக்கு சொல்லனும்?

ம்ம் என்ன எழுதலாம்? (நீ எது எழுதினாலும் மொக்கையாதான் இருக்கப்போகுது)
பிளாக் எழுத வந்த கதைய சொல்லலாமா? (திராபை மூவின்னு கிழிச்சு தொங்கவிட்ருவாங்க பரவாயில்லையா?)
சமூக அக்கறைக் கொண்ட பதிவு ஏதாவது (ஹூக்கும்)
பதிவர்கள் யார்கிட்டவாவது நம்ம பிளாகப் பத்தி எழுதச் சொல்லி கேட்டுப்பார்க்கலாம் (செல்ஃப் டேமேஜே மேல்)
சரி எதுவுமே எழுதத் தோணல. நன்றி மட்டும் சொல்லிடலாம். (இது தான் பெஸ்ட்)

ரொம்ப நேரமா யோசிச்சதன்??!! விளைவு தான் மேல நீங்க படிச்ச டயலாக்.
2007ல எழுத ஆரம்பிச்சு இப்பதான் 100வது பதிவு. குழந்தை, நேரமின்மை என்ற காரணங்களோடு சரக்கில்லை என்பது இன்னொரு முக்கியமான காரணம். பதிவுலகம் நிறையப் பாடங்களைக் கற்றுகொடுத்திருக்கிறது. நூறாவது பதிவாக ஸ்பெஷலாக எழுத எதுவும் தோணவில்லை. அதோடில்லாமல் வீட்டில் நிறைய வேலைகள். சரி நன்றி சொல்லி பதிவு போட்டுடலாம்ன்னு வந்துட்டேன். முதல்ல கொஞ்சமே கொஞ்சமாய் நேரத்த போனாப்போவுதுன்னு கொடுக்கிற ஜூனியருக்கு நன்றிகள் பல. மனிதர்களின் மனங்களைப் படிக்க உதவும் என் கணவருக்கு அடுத்தது. அப்புறம் போனாப்போகுதுன்னு என் இம்சையப் படிச்சு பாராட்டுற??!! உங்களுக்கும் டேங்யூ. டேங்யூ. இன்னும் நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் இம்சிக்கனும்னு ஆசையாயிருக்கு. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......

June 10, 2009

என்னா வில்லத்தனம்?

ஆனந்த தாண்டவம் படத்திலிருந்த கனா காண்கிறேன் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தீடிரென்று அப்பா "ஏய் இந்தப் பாட்டுல ராமாயணத்தை உல்டா பண்ணிருக்காண்டி" என்றார்.
"உல்டா பண்ணலப்பா. அதே கான்சப்ட் தான்ப்பா"
"இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".
வீட்டில் சிரிப்பு சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆயிற்று.
********

குலதெய்வம் கோவிலுக்குப் போய் நான்கு வருடங்களாகிவிட்டது. வருடா வருடம் ஏதாவது ஒரு தடங்கல் வந்துக்கொண்டேயிருக்கிறது. கோவிலில் இருக்கும் உரல்களில் மாவிடித்து அதில் விளக்கு செய்து அம்மனுக்குப் படைப்பது வழக்கம். எனக்கு நினைவு தெரிந்து பெரியம்மா, அம்மா, அத்தை என எல்லாரும் கர்ம சிரத்தையாக அதை செய்ய, நான் அண்ணாக்களெல்லாம் பொழுதுபோக்க உலக்கையடிப்போம். இந்த முறை பெரியம்மாவால் முடியாததால் வேறு சிலர் மூலம் அரிசி இடித்ததாக அண்ணா சொன்னார். காசு கொடுத்தால் கோவிலில் இருக்கும் பெண்கள் சிலரே மாவிடித்து தருவதாக சொன்னார். இங்கயும் அவுட்சோர்சிங்?
**********

குரூப்பாக தாம்பரத்திலுள்ள அடையார் ஆனந்த பவன் ரெஸ்டாரெண்ட் சென்றிருந்தோம். கடைசியாக எல்லோரும் கேட்டிருந்த பாதாம் மில்க் வந்தது. ஆர்வமாக கிளாஸை எடுத்த அண்ணா ஸ்ட்ரா வழியாக குடிக்க முயற்சித்து "என்னாடா ஸ்ட்ரா குடுத்திருக்காங்க. வரவே மாட்டேங்கது." என சலித்துக் கொண்டே சர்வரை அழைக்க முற்பட்டார். அதற்கு மேல் அடக்கமுடியாமல் நாங்கள் அனைவரும் வெடித்து சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். எங்கள் சிரிப்பிற்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டிருந்தவரின் தலையில் தட்டி, கிளாசில் இருப்பது ஸ்ட்ரா இல்ல. பிளாஸ்டிக் ஸ்பூன் என்றதும் அசடு வழிந்தார். கண்ணில் நீர் வர புரையேற சிரித்தோம்.
*********

வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அனுப்பலாமென்றிருக்கோம். காலை 9 முதல் 11 மணி வரை தினமும் இரண்டு மணி நேரம். வீட்டிலிருந்து 5 நிமிடம் நடந்தால் பள்ளி. ரகுவுக்கு காலை அவனோடு விளையாடுவது மிஸ்ஸாகுமேங்கற கவலை. எனக்கோ காலையில் ஜூனியரை எழுப்பி, உணவுகொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமேங்கற கவலை. ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)
**********

சில வாரங்களுக்கு முன்பு காலை 8 மணியளவில் வீட்டிற்க்கு விருந்தினர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வந்துவிட்டார்கள். அது நொல்லை, இது நொட்டை என ஒரே அதிகாரம். அத்தோடில்லாமல் எங்கள் லைஃப்ஸ்டைலை வேறு குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு. 2 வயது வாலு வீட்டில் இருக்கும்போது கிச்சனே ஹாலில் தான் இருக்கும்:) அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன் (அமித்து அம்மா குழந்தையிருக்கும் வீடு என்றொரு பதிவெழுதியிருந்தார். அதுதான் நினைவுக்கு வந்தது). பொங்கி வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவர்களை முடிந்த அளவு உபசரித்து அனுப்பி வைத்தோம். நினைத்த மாதிரியே மேலிடத்தில் பத்தவைத்துவிட்டார்கள். மேலிடம் அதைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.
*********

June 8, 2009

என்ன திடிர்னு?

வெளிச்சக் கற்றைகளினூடே நாட்டியமாடும் துரும்புகளை ரசிப்பதும்
கூந்தலுக்கு வலிக்காமல் போடப்படும் பின்னல்களும்
காரணமே இல்லாமல் இதழோரம் நிரந்தரமாய் குடியிருக்கும் சின்னப் புன்னைகையும்
கண்ணாடி முன் செலவழிக்கப்படும் நேரங்களும்
நான்கு முறையாவது உடை மாற்றுவதும்
அழுக்கேறிய பேருந்து ஜன்னல்களில் எழுதப்படும் இனிஷியல்களும்
அடிக்கடி முணுமுணுக்கப்படும் "நெஞ்சினிலே"க்களும்
உறக்கமில்லா இரவுகளும்
சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் கோலங்களும்
தழையத் தழைய புடவை கட்டி
கண்ணுக்கு மையிட்டு
தலை நிறைய பூ சூடிக்கொள்ளும்போதும் தான் தெரிகிறது
உன் காதல் மெல்ல மெல்ல என்னை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறதென்று.
"என்னடி தீடிர் மாற்றம்?" என கண்ணடித்துக் கேட்கும் தோழியிடம் எப்படி சொல்வது?
காதல் மட்டும் சொல்லிவிட்டா வருகிறதென்று.

June 4, 2009

என்னைத் தெரியுமா?

இந்த 32 கேள்விகளுக்கு பதில் (சாய்ஸ்ல எதையும் விடக்கூடாதா?) சொல்லும் வேலையை கேபிள் சங்கர் மற்றும் விக்னேஷ்வரி கொடுத்திருக்காங்க. கொடுத்த வேலையை செவ்வனே செய்ய முயற்சி செய்திருக்கிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றவர்கள் வைத்தது. கண்டிப்பா ரொம்பவே பிடிக்கும். பெயருக்கு ஏத்த மாதிரியே படிப்புல நான் குயின்:)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
முணுக்குன்னா அழற ஆளில்லை நான். ஓரளவுக்கு எமோஷனலி ஸ்ட்ராங். 20 மாதங்களுக்கு முன் விடியற்காலை 5 மணியளவில் ஜூனியரின் அலறல் (ட்ரிப்ஸ் ஏத்த நரம்பு தேடிக்கொண்டிருந்தார்கள்) கேட்டு கதறி அழுதது தான் கடைசி. அழுவதற்க்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை அழகாய் போய்க்கொண்டிருக்கிறது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப. காலேஜில் சீனியர்ஸ்க்கு ரெக்கார்ட் எழுதி கொடுக்கிற அளவுக்கு அழகாய் இருக்கும்:)

4).பிடித்த மதிய உணவு என்ன?
மெக்சிகன், இட்டாலியன், ஜப்பானீஸ் சுஷி, கொரியன், சைனீஸ் என அடுக்குவேன் என நினைக்காதீங்க.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மோர் மிளகாய் தாளித்துக் கொட்டிய கொஞ்சூண்டு மோர் விட்டு பிசைந்த பழையது, தொட்டுக்க பூண்டு தொக்கு.
இஞ்சி துவையலும் தயிர் கீரையும்
பூண்டு ரசமும் சுட்ட அப்பளமும்
வெங்காயமும் மிளகும் நிறைய போட்ட ஆம்லெட்
தேங்காய் அரைத்து கொட்டி, மணத்தக்காளி வத்தலை பொரித்துப் போட்ட வத்தக்குழம்பில் சரியாக 3 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கப்பட்ட கல்தோசை/ஊத்தப்பம்
அரிசி உப்புமா (காந்தல்)
கேழ்வரகு கூழ் தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய்.. Oops விட்டா நான் தனியா வலைப்பூ ஆரம்பிக்கிற அளவுக்கு அடுக்குவேன். Next?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ம்ம் கொஞ்சம் கஷ்டம். என்னை நானாகவே இருக்க விடுகின்ற நட்பினைத் தான் அதிகம் விரும்புவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்கப் பிடிக்கும். கடலலையில் கால் நனைக்கப் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களையும் அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸையும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : நிறைய இருக்கே. ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் சாதக பாதகங்களை கம்ப்ளீட்டா அலசி ஆராய்வது.
பிடிக்காத விஷயம் : ம்ம் இது ரொம்பவே கம்மி. அடிக்கடி எட்டிப்பார்க்கும் கோவம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது : என் மேல் அவர் கொண்டுள்ள அன்பும் பாசமும்.
பிடிக்காத விஷயம் : குறிப்பிட்டு சொல்லும்படி எதுவுமில்லை. நான் அவரை அவராகவே ஏற்றுக்கொண்டிருப்பதால் குறைகளென்று எதுவும் தெரியவில்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நெருங்கிய நண்பர்கள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு வெள்ளை குர்தா பைஜாமா.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் (லவ்லி பாட்டு)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு - கம்பீரத்தின் நிறம்

14.பிடித்த மணம்?
மதுரை மல்லி. ஜான்சன் பேபி சோப் வாசனை:)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீபா
ஆகாயநதி
மயில்

இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணத்தில் அழைத்திருக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
சங்கர் - வாரத்துல ஏழு நாள் தான்னாலும் 70 படம் பார்ப்பார் போல. நிறைய மொக்கை படங்களில் இருந்து காப்பாற்றுவதால்.
விக்னேஷ்வரி - என்னை மாதிரியே ஃபுட்டி:)

17. பிடித்த விளையாட்டு?
பள்ளி நாட்களில் த்ரோ பால். இப்போ ஜூனியரோடு:)

18.கண்ணாடி அணிபவரா?
வெயில் காலங்களில் கூலர்ஸ்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லா விதமான படங்களும். திராபையா இல்லாம இருக்கனும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். மழையில் நனையப் பிடிக்காது. ஆனால் சூடாக ஒரு கப் டீயுடன் அமர்ந்து ரசிக்கப் பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் (முடிச்சாச்சு)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஜூனியர் தான். வேறு வேறு போஸ்களில்:)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : ஜூனியரின் சிரிப்பு, மனதுக்குப் பிடித்த பாடல்கள்.
பிடிக்காதது : ஹார்ன் இரைச்சல், அதிக சத்ததில் டீவி, அரசியல் கட்சிப் பிரச்சாரங்கள்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மலேசியா, சிங்கப்பூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நேரம் தவறுதல், Negligince

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போனதில் நந்தி ஹில்ஸ், ஜெய்ப்பூர். போக விரும்புவது கூர்க்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதை செய்தாலும் அவரிடம் சொல்லிவிடுவதுண்டு

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
Life is beautiful as always:)

June 3, 2009

கைலாஷ் கேர்

டிஸ்கி 1: நான் ஏக் காவ் மே ஏக் கிஸான் வகையறா. எனக்கு ஹிந்தி லோடா லோடா ச்சே தோடா தோடா தான் வரும்.

டிஸ்கி 2: இந்தப் பதிவு முழுக்க முழுக்க மீஜிக் ஓரியண்டட். பாடல்களின் முழு அர்த்தம் மாலும் நஹி ஹை:)

கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் ECE டிபார்ட்மெண்டில் நடந்த கான்பரென்ஸ் முடிவில் கல்ச்சுரல்ஸ்க்கு அரேஞ்ச் செய்திருந்தார்கள். என் தோழி ECE டிபார்ட்மெண்ட் என்பதால் அவள் வற்புறுத்தலுக்கிணங்க அந்த ப்ரோக்ராமைப் பார்க்க சென்றிருந்தேன். ஜூனியர் பையன் ஒருவன் கிட்டாரோடு வந்து உட்கார்ந்து "அல்லா கே பந்தே ஹஸ் தே" என்று கர்ணக் கொடூரமாய் பாட ஆரம்பித்தான். "ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா?" என அவளை கலாய்த்துக் கொண்டிருந்தபோது என் வகுப்பு நண்பன் ஒருவன் "வித்யா அந்தப் பாட்டு ரொம்ப நல்லாருக்கும். பாடறவன் சொதப்பிட்டான். Will try to get u the audio soon." என்றான். சொன்ன மாதிரியே இரண்டு நாட்களில் இந்தப் பாடலை மட்டும் சிடியில் பதிந்து கொடுத்தான். கேட்டவுடன் அசந்து போனேன். மனசை அறுக்கும் அமானுஷ்யமான அதே சமயம் ரொம்ப மெஜெஸ்டிக் வாய்ஸ். கைலாஷ் கேர். 2003ல் வெளிவந்த "Waisa be hota hai II" படத்தில் அவர் பாடிய இந்தப் பாட்டு அவருக்கு ஒரு வெளிச்சத்தைத் தேடி தந்தது.
அர்த்தம் புரியவில்லையென்றாலும் அந்தக் குரலும் இசையும் ரொம்பவே பிடித்திருந்தது. கைலாஷ் கேர் சுஃபி (sufi) பாடகர் என்று நண்பன் கூறினான். (Sufism பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள ஏதேனும் லிங்க் கிடைக்குமா?)

அதற்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்வதேஸ் படத்தில் உதித் நாரயணனோடு "யூஹி சல்லா சல்லா ஹி" பாட்டு.

2005ஆம் ஆண்டு "Mangal Pandey" படத்தில் டைட்டில் "சாங்கான மங்கள மங்கள ஹோ" பாட்டை "மங்கள்" "அக்னி" "ஆத்மா" என மூன்று வெர்ஷனில் பாடியிருப்பார். அவருடைய rustic வாய்ஸ் நன்றாக செட்டாகியிருக்கும். இசை ஏ.ஆர்.ரகுமான்.

தமிழ் படத்தில் அவர் முதன்முதலில் பாடியது மஜா படத்தில் வரும் "போதுமடா சாமி" என்ற பாட்டு. தமிழ் உச்சரிப்பு ரொம்ப சுமார் என்றாலும், பர்ருவாயில்லே பாடகர்களோடு ஒப்பிடும்போது மன்னிச்சு விட்டுடலாம்.

2006ஆம் ஆண்டு Kailasa என்ற அவருடைய முதல் ஆல்பம் வெளிவந்தது. ஆல்பம் சூப்பர் ஹிட். 9 பாடல்கள்.

Sufi ஸ்டைலில் Teri deewani



Peppy நம்பரான tauba tauba



Kaise mein kahoon ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை.

2007ஆம் ஆண்டு Kailasa Jhoomo re என்று பெயரிடப்பட்ட அடுத்த ஆல்பம்.
இதில் babam bam
Get this widget
Track details eSnips Social DNA

saiyyan, jhoomo re மூன்றும் கிளாசாக இருக்கும்.

Delhi - 6 படத்தில் Arziyan பாடலும், தாம் தூம் படத்தில் உய்யாலாலோ (திரைப்படத்தில் இடம்பெறவில்லை) பாட்டும் பாடியிருக்கிறார்.

June 2, 2009

வயித்தெரிச்சல்??

எல்லாருடைய வயித்தெரிச்சலும் சாபமும் நல்லா பலிச்சது. கடைசியாக (ஒரு மாதத்திற்க்கு மேலாகிவிட்டது) போன ரெண்டு ரெஸ்டாரெண்ட்களும் அவ்வளவாய் திருப்தியளிக்கவில்லை. அந்த ரெண்டு உணவகங்களைப் பற்றி கீழே.

Cedars

ஏற்கனவே இந்த ரெஸ்டாரண்ட் பற்றி பீட்டரிக்கிறேன்:)
இந்த முறை தம்பி ஸ்பான்சர் என்று முடிவானதும் எங்கு போகலாம் என்ற அலசல்களுக்கிடையே முடிவானது இது. Worth a try என சொல்லி சனிக்கிழமை மதிய உணவுக்குப் போய் இறங்கினோம். டமால். முதல் விக்கெட். சனிக்கிழமைகளில் பஃபே கிடையாது ala carte தான் என்றார்கள். சரி வந்தது வந்தாச்சு. மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம் என நம்பி உட்கார்ந்தான் தம்பி. ட்ரிங்க்ஸ்க்கு ரகுவும், தம்பியும் lyche coolerம் நான் jaleb (dates & rose flavoured drink)ஸ்டார்டர்க்கு nuts crusted cottage cheeseமற்றும் fried potato catalina (Baby potatoes roasted with red and green peppers flavoured with cumin & paprika)ஆர்டர் செய்தோம். என்னோட ட்ரிங் மகா கேவலமாய் இருந்தது (ரெண்டாவது விக்கெட்). லிட்சி கூலர் நல்லாருக்குன்னு ரகுவும், கேவலமாருக்குன்னு தம்பியும் சொன்னாங்க. ஸ்டார்டர் ரெண்டுமே அட்டகாசம்.

மெயின் கோர்ஸில் நான் ஆர்டர் செய்த pizza roma (thin crust) சூப்பராகவும்,ரகு ஆர்டர் செய்த falafel with pita breads (கொண்டக்கடலையில் செய்த வடை) சுமாராகவும்,தம்பி ஆர்டர் செய்த garlic flavored chicken with pita bread படுமோசமாகவும் இருந்தது.Omm ali என்ற mixed nuts puddingல் முடிந்தது.தம்பிக்கு சாப்பாடு சொதப்பியதில் பயங்கர டென்ஷன். அதை விட பில்லைப் பார்த்து இன்னும் வெறியாகிட்டான். எங்கள் நேரத்தை நொந்தபடி திரும்பினோம்.

La Terrase

பாண்டியில் Rendezvous (Continental) உணவகத்துக்கு போகனும்ன்னு ரொம்ப நாள் பிளான். ஆனால் சில காரணங்களால் போக முடியாம இருந்தது. இந்த தடவை நேரமும் சூழ்நிலையும் செட்டானபோது அந்த ஹோட்டலை ரெனவேஷன்காக மூடிவிட்டார்கள்:(
ரகுவும், நாத்தனார் கணவரும் எனக்கு சர்ப்ரைஸ் தர எண்ணி La Terrassse அழைத்துக்கொண்டு போனார்கள். இந்தியன்/வியட்நாமீஸ்/காண்டினெண்டல் என்ற போர்ட் பார்த்தாவது உஷாராகியிருக்கனும். ப்ச்ச். தீஞ்ச வாடையுடனான பிரெஞ்ச் ஆனியன் சூப், உப்பு சப்பில்லாத மஷ்ரூம்/சீஸ் ஆம்லெட்டுகள், அசட்டுத் தித்திப்புடனான கீரீன் பீஸ் புலாவ், tug of war நடத்தத் தகுதியான பரோட்டா என எல்லாமே சூப்பர் சொதப்பல். வியட்நாமீஸ் ஸ்னாக்ஸ் என chaiyo என்ற ஒன்றை ஆர்டர் செய்தார்கள். தாம்பரம் மார்க்கெட்டில் சாயந்திர வேளைகளில் சூடாக கிடைக்கும் மினி சமோசா (ஒன்னு ஒரு ரூபாய்) இந்த சைய்யோவை விட இலட்சம் மடங்கு டக்கராக இருக்கும். அன்று இன்னொரு டென்ஷன் என் மொபைல் அடிக்கடி நெட்வொர்க் இழந்து நண்பர்களுடனான பேச்சை பாதியில் வெட்டிவிட்டது. யாரும் எதுவுமே சாப்பிடவில்லை. ரெஸ்டாரெண்ட் ஓனரிடம் எகிறிவிட்டு ஹோட்டலுக்கு எதிரில் உள்ள பானிபூரிக் கடையில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம்:(

இதெல்லாம் படிச்சு நீங்க சந்தோஷப்படுவீங்க தானே. விடமாட்டேன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். அடுத்த லிஸ்டில் Bella Ciao - Italian, Mainland China, Kattumaram என வரிசையாக இருந்தாலும் நேரம் தான் இல்லை போய் வர. இந்த லேபிலிள் அடுத்த பதிவு பாண்டிச்சேரியின் ஸ்ட்ரீட் புட்ஸ் மற்றும் கையேந்தி பவன்கள் ஏன் பெஸ்ட் என்ற மினி ஆராய்ச்சிக் கட்டுரையும்??!!! இடம்பெறபோகிறது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.

June 1, 2009

ஆடாத ஆட்டமெல்லாம்

ஆகாயநதி தொடர்பதிவுக்கு (சங்கிலிப்பதிவு என்பதே சரி என்று யாரோ எழுதிப் படித்த ஞாபகம்) அழைத்திருக்கிறார். என்னையும் மதிச்சு??!! கூப்பிட்டதால இதோ நானும் வத்தி சுத்தறேன்.

என்னுடைய பள்ளிப்பருவங்கள் ரெண்டு ஊர்களில் கழிந்தது. ஆறாம் வகுப்பு வரை காஞ்சிபுரம். அதற்குப் பின் முழுவதும் வாலாஜாப்பேட்டை. இரண்டு இடங்களிலும் எனக்கு அருமையான நண்பர்கள். காஞ்சிபுரத்தில் சரியாக கலெக்டர் ஆபிஸ் பின்னால் இருக்கும் ஹவுசிங் போர்ட் குடியிருப்பு. சித்திரை வருடப் பிறப்புக்கு முன்னமே முழுஆண்டுத் தேர்வை முடித்துவிடுவார்கள். 3 சக்கர சைக்கிளில் இருந்து இரண்டு சக்கர சைக்கிளுக்கு பிரமோட் ஆனது மே மாதத்தில் தான். என் மாமா பொண்ணு தான் ட்ரெய்னர். ஒரளவுக்கு கற்றுக்கொண்டதும் தனியே ரொம்ப தூரம் போய் திருப்பத் தெரியாமல் புதிதாய் போட்ட தார் ரோட்டில் விழுந்து வாரியது இன்னும் நினைவிலிருக்கிறது. கை கால் முட்டிகள் பேந்து சரியான அடி. கலெக்டர் ஆபிஸ் அருகிலிருக்கும் ஆயுதப் படை போலீஸ் பயிற்சி நிலையத்திலிருந்த அங்கிள் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்.

எல்லா ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும். காலாண்டு, அரையாண்டு என்றாலும் பரவாயில்லை. முழு ஆண்டுத் தேர்வுக்கு பயிற்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்த வகுப்பு போகும்போது இது எதற்கு. லீவு விட்டவுடன் கர்ம சிரத்தையாக இரண்டே நாட்களில் இதை எழுதி முடித்துவிட்டு மூலையில் போட்டால், பள்ளி திறப்பதற்கு முதல் நாள் தான் கவனிக்கப்படும். விடுமுறை தினங்களில் பாட்டு கிளாஸ், ஹிந்தி டியூஷன் ஆகியவை கொஞ்சம் டிலே செய்யப்படும். வழக்கமாக விடியற்காலையில் ஆரம்பிக்கப்படும் வகுப்புகள் விடுமுறை தினங்களில் மாலைக்கு ஷிப்ட் செய்யப்படும். 2 மணியிலிருந்து 5 மணி வரை வகுப்புகள். அதற்குப்பிறகு ஆரம்பிக்கும் ஆட்டம் படுசுவாரசியம். அழகான நாட்கள் அவை.

வாலாஜாப்பேட்டை வந்தபிறகு மெல்ல மெல்ல விளையாட்டுகள் குறைந்தது (Bloody Society??!!). கேரம் போர்ட்டே கதியென கிடந்த நாட்களும், த்ரோ பால் பிராக்டிஸ் செய்த நாட்களும் இன்றும் நினைவிருக்கின்றன. விளையாடுவது குறைந்ததும் கொஞ்சமே கொஞ்சமாய் புத்தகங்கள் அறிமுகமாகின. அதற்குள் அடுத்த கட்டமான பொதுத்தேர்வு, எண்டரன்ஸ் கோச்சிங்க என விளையாட்டு என்பதே மறந்துவிட்டது. கல்லூரி நாட்களில் மே மாதங்கள் நண்பர்கள் வீட்டில் அரட்டைக் கச்சேரி, சினிமா, சீட்டுக்கட்டு, எப்பவாச்சும் படிப்பு என தான் கழிந்தது. வேலையில் சேர்ந்த பின் கேக்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைக்கூட அலுவலகம் வரவழைத்த டேமஜர் கிட்ட சம்மர் வெகேஷன் என வாயத் தொறக்கமுடியுமா? அதையும் மீறி ஒரு மே மாதத்தில் ஊட்டி ட்ரிப் போனோம். லவ்லி டேஸ்:)

இப்போ ஜூனியரால எல்லா நாளும் விடுமுறை நாள் போல சந்தோஷமாகக் கழித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தி நான்கு மணி நேரமும் எனக்கு வேலை வைக்கிறான். வளர வளர சேட்டைகளும் ஜாஸ்தியாகிறது (ஆஹா பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சு:))

இனி வரும் வருடங்களும் சந்தோஷமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில்:)