பள்ளி இறுதிக் காலத்திலிருந்தே நகைகளின் மீதான ஆர்வம் போய்விட்டது. இன்றுவரை மருதாணியின் மீதான் க்ரேஸ் குறையவேயில்லை. மெஹெந்தியை விட மருதாணியே அழகாக இருக்கிறதென்பது என் கருத்து. முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும், லட்சக்கணக்கான டிசைன்களில் பலவித வண்ணங்களில் மெஹெந்தி போடப்பட்டாலும் விரல்களுக்கு தொப்பி போட்டது போல வைக்கப்படும் நம்மூர் ஸ்டைல் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.
மருதாணி வளர்ப்பது முதல் வைப்பது வரை பெரிய கலை. என் பாட்டிக்கு மருதாணி செடி வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு நல்லதில்லையென்ற நினைப்புண்டு. எனக்கும் அம்மாவிற்கும் நினைத்த நேரத்திற்கு மருதாணி வைத்துக்கொள்ள வீட்டில் செடியில்லன்னா எப்படி என்று தோன்றும். காஞ்சிபுரத்தில் நல்ல அடர்த்தியான மருதாணிச்செடி வளர்த்தோம். இலைகள் ரொம்ப திக்காக இருக்கும். மருதாணி இலை பறிப்பது நேரம் முழுங்கும் வேலை. நண்பர்களோடு கதையடித்துக்கொண்டே ஒவ்வொரு இலைகளாக பொறுமையாக பறிக்கலாம். ரொம்ப அவசரமென்றால் அப்படியே நீட்டக் கிளைகளை ஒடித்துக்கொண்டு போய் இலைகளை மட்டும் பின்னர் உருவிக்கொள்ளலாம். எப்படிப் பறித்தாலும் மருதாணி சீக்கிரமே துளிர்த்துவிடும் (வளர்க்கும் மண்ணைப் பொறுத்து).
சிலச் செடிகள் இலையை உருவிப் பறிக்கும்போதே கைகளில் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும். சிலது பறித்து அரைக்கும்போது வண்ணம் கொடுக்கும். சில இலைகள் என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்தாலும் அசரவே அசராது. இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஆரஞ்சிலே நின்று கடுப்பேற்றும். இன்று வரை எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்து, கிச்சன் சுத்தப்படுத்திய பின்னரே மருதாணி அரைப்பார்கள். காஞ்சிபுரம், வாலாஜா வீடுகளில் அம்மிக் கல் இருந்தது. கொஞ்சம் கொட்டைப் பாக்கு சேர்த்து அரைப்பார்கள். மருதாணி வைத்தால் சளி பிடிக்குமென்பவர்களுக்காக கொஞ்சம் யூக்லிப்டஸ் ஆயில் சேர்ப்பார்கள். மருதாணி கிடைக்காத இடங்களில்/அவசரத்திற்கு குங்குமம், மைதா இன்னும் ஏதோ வஸ்துவெல்லாம் சேர்த்து பசை மாதிரி ரெடி செய்வார்கள். ஆனால் அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மி. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அதே மாதிரி பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பெயிண்ட் வாசனைபோல் இருக்கும்.
அடுத்து மருதாணி வைக்கும் படலம் ஆரம்பமாகும். முதலில் வாண்டுகளுக்கு வைத்துவிட்டு பின்னர் பெரியவர்கள் வைத்துக்கொள்வார்கள். சின்ன மக்கில் தண்ணி எடுத்து வைச்சுப்பாங்க. முதலில் சுண்டு விரலிலிருந்து ஆரம்பித்து கட்டை விரலில் முடியும். சின்னதாய் உருண்டை உருட்டி கைகளில் வைத்து அழுத்தி அப்படியே முழு விரலையும் மூடிவிடுவார்கள். எனக்கு விரலின் கால் பாகம் வைப்பது புடிக்கும். அம்மா, பெரியம்மா, அக்காவிற்கெல்லாம், முக்கால்வாசி விரல்கள் மூடும்படி வைப்பார்கள். விரல்கள் முடித்த பின்னர் உள்ளங்கையில் ஒரு சிறிய வட்டம். காம்பஸ் வைத்து வரைந்தாற்போல் தத்ரூபமாக இருக்கும். பின்னர் அதைச் சுற்றி சின்ன பொட்டுகள் ஏழோ எட்டோ கைக்குத் தகுந்தாற்போல் முளைக்கும். அவ்வளவுதான்.
இனிமேதான் இருக்கு சாமர்த்தியமே. அதென்னவோ மருதாணி வச்சு முடிச்சப்புறம் தான் முதுகு அரிக்கும், மூக்கு அரிக்கும், தண்ணி தாகம் எடுக்கும், முடி கலைஞ்சு மூஞ்சில வந்து விழும், கண்ணுல தூசி விழும், இல்லாத இம்சையெல்லாம் க்யூ கட்டி நிற்கும். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் மருதாணி கலையாமல் பாதுகாப்பாய் தூங்கி பாதி இரவில் எழுப்பி/தூக்கத்திலேயே கைகளில் எலுமிச்சை சாறு கொஞ்சம் தடவி, காலையில் எழுந்தவுடன் கைகளில் இருக்கும் காய்ந்த கலவையை சுரண்டி எடுக்கும்போதே தெரிந்துவிடும் பத்திருக்கா இல்லையான்னு.
சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். என் அக்காக்கு கருப்பாகவே இருக்கும். பித்தம் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லி சொல்லியே நாலு நாளைக்கு காஃபியைக் கட் பண்ணிடுவாங்க பெரியம்மா. எனக்கு எப்பவுமே நல்ல சிவப்பாகவும் எப்போதாவது ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். காலேஜ் படிக்கும்போதெல்லாம் மருதாணியின் நிறத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் உண்டு. மருதாணி கலைச்சவுடனே கையக் கழுவக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு மணிநேரத்துக்கு தண்ணி படாம பாதுகாத்தா இன்னும் கொஞ்சம் கலர் கூடும். அப்புறம் கையக் கழுவும்போது தான் ஒரிஜினல் கலர் என்னன்னு தெரியும். அன்னிக்கு முழுக்க மருதாணியோட வாசம் மூக்கச் சுத்திக்கிட்டேயிருக்கும். மருதாணி வச்சு எடுத்தன்னிக்கு ப்ரெஷ்ஷா உறையூத்துன கெட்டித் தயிர சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா. ம்ம்ம்ம். சொர்க்கம் தான் போங்க. நல்ல தரமான மருதாணியின் கலர் குறைய எப்படியும் மூணு வாரமாகும். அதுவரைக்கும் அநாட்டிய பேரெலிகள் கூட சும்மா சும்மா அபிநயம் பிடிச்சு பார்த்துப்பாங்க:))
முன்னமெல்லாம் எங்கவீட்ல எதாவது விசேஷம்னாலே மருதாணிச் செடிதான் முதல் வெட்டு. கல்யாணம், தீபாவளி, பொங்கல்ன்னு இப்படி எதுக்கெடுத்தாலும் மருதாணி வச்சுப்போம். அப்புறம் செடி இல்லை, இலை கிடைக்கலன்னு ஆரம்பிச்சு வெறும் கல்யாணத்துக்கு மட்டுமே மருதாணி வைக்கிற நிலைமை வந்திடுச்சு. இந்த மாதத் துவக்கத்தில் மாமா பெண்ணின் கல்யாணம் நடந்தது. கடைசியாக என் வளைகாப்பிற்கு மருதாணி வைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு இப்போதான் வைத்துக்கொண்டேன். ஆசையாசையாய் இரண்டு கைகளிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொண்டேன். இப்போது தான் கலர் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் என் இரு கையையும் பிடித்துக்கொண்டு “அம்மாக்கு உவ்வா இக்கா. மந்து போடவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.