May 17, 2011

பழிக்கு பழி

கொலைப்பட்டினியோடிருக்கும் பத்து சிங்கங்களிருக்கும் குகையின் வாசலில் நிற்கும் ஆடு போல் DK கல்யாண மண்டப வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அவசியம் உள்ளே போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். கண்களை மூடி ஒரு தடவை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டேன். மனதைரியத்தை வரவழத்தைக்கொண்டு உள்ளே நுழைந்தேன். வராந்தா போன்றிருக்கும் அமைப்பில் சிதறிய அன்ன உருண்டைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவயதுப் பெண்கள். ”இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போய்டல. அப்படியே திரும்பி ஓடிடு” என என் மூளை எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே “ஹேய் ஸ்வேதா. வா வா வா. என்ன அங்கேயே நின்னுண்டிருக்கே. உள்ளே வா. அப்பாம்மா வர்லையா?” எனக் கேட்டபடியே என் பதிலை எதிர்பார்க்காமல் சச்சு மாமி என் கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். என்னைக் கொண்டுபோய் அவள் நிறுத்திய இடத்தில் சங்கர் மாமா உட்கார்ந்திருந்தார்.

”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.

“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.

“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”

“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”

“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.

“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”

“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”

“BTSல தான வேலை பார்க்கிற?”

“ஆமாம்”

“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.

மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.

“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.

“7 இயர்ஸ் ஆய்டுத்து”

“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”

“சிட்டி ஆஃபிஸ்”

“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.

“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”

“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.

"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.

ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.

“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’

“தேங்ஸ்டி.”

“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”

“கொலவெறில இருக்கேன். போய்டு.”

“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”

“அடியேய்ய்ய்ய்ய்”

“சும்மா சொல்லுடி”

“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.

கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.

“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"

"யெஸ் வேலு.”

“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”

“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"

"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."

"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”

“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."

ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.

Name : Mahadevan Keshava Krishnan

வாடி வா.......

May 4, 2011

Mash - Resto'cafe

பீச் வியூ. நிறைய அரட்டை. கொறிக்க லைட்டான உணவுகள். கேட்க நல்லாருக்குல்ல? அனுபவிக்கப் போக வேண்டிய இடம் பெசண்ட் நகர் பீச் ரோடில் இருக்கும் Mash. கஃபேவுமில்லாமல் ரெஸ்டாரெண்ட் கணக்கிலும் வராமல் ஒரு eat out. அதிகபட்சமாய் முப்பது பேர் அமர்ந்து உணவருந்தலாம். Sizzlers, burgers, sandwiches, crepes, hot dogs என முழுக்க முழுக்க காண்டினெண்டல் மெனு. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான ஸ்டார்டர்ஸ். ஆப்ஷன்ஸ் குறைவாக இருந்தாலும், மெனு ரசனையாக இருக்கிறது.

மினர்ஸ்டோன் சூப், வெஜ் க்ராக்கெட்ஸ், Honey glazed potato cubes மூன்றுமே நன்றாக இருந்தது. கடைசியாக சொன்ன ஐட்டம் செம்ம க்ரிஸ்பி. ஆனால் மூன்றுக்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிடுகிறது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.



Alfredo மற்றும் Arabitta சாஸ்களைக் கொண்டு செய்த பாஸ்தாக்கள் ரொம்ப நன்றாக இருந்தன. ஃப்ரெஷ்ஷான மிளகின் காரத்தோடு க்ரீமி அண்ட் யம்மி:)


டெசர்ட்டாக சாப்பிட்ட Choco mud pie ஆவரேஜ் தான்.


மேலதிக தகவல்கள்

உணவகம் : Mash
உணவு : Continental Veg/Non-Veg
இடம் : பெசண்ட் நகர் பீச்சின் எதிர்புறம் (போலீஸ் பூத்தைத் தாண்டி ஜாவா க்ரீன் காஃபி ஷாப் அருகில்).
டப்பு : 500 + taxes for 2

பரிந்துரை : அரட்டைக்கு நல்லதொரு hangout. சாப்பாடும் மோசமில்லை. முயற்சிக்கலாம்.

May 2, 2011

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

கண்மனி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். பாயிண்ட் டு பாயிண்ட், கிரிவலம் ஸ்பெஷல், தோல் பையை ஒரு குலுக்கு குலுக்கி சில்லறை தேடும் சோடா புட்டி அணிந்த கண்டக்டர், சின்னப் பசங்களோ, வயதானவர்களோ யார் உட்கார்ந்திருந்தாலும் எழுப்பிவிட்டு, தன் பெருத்த சாரீரத்தை தன் சீட்டிலடைத்து நான்காய் எட்டாய் மடிக்கப்பட்டிருக்கும் கோடு போட்ட பேப்பரில் கோழி கிறுக்கலாய் எண்களைப் பதியும் கள்ளக்குறிச்சி வண்டி கண்டக்டர், பஞ்சரான வண்டிக்கு டயர் மாத்த உதவி தேடும் திருச்சி வண்டி ட்ரைவர், கட்டைவிரலை சுண்டுவிரலின் ஆரம்பத்திற்கு முட்டுக்கொடுத்து, நான்கு விரலைக் காட்டி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் ஸ்டாஃப் என எப்போதோ என் வாழ்க்கையில் கடந்து சென்ற நபர்களின் மறுபக்கத்தை, அவர்களின் அன்றாட வாழ்வை, டிப்போ என்ற ஒரு தனித் தீவில் அவர்கள் படும்பாட்டை உள்ளது உள்ளபடி மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது நெடுஞ்சாலை நாவல்.

நாவலின் பிரதான கதாப்பாத்திரங்களான அய்யனார், தமிழரசன், ஏழைமுத்து ஆகிய மூவரும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்கள் (Casual Labour/ சி.எல் என நாவல் முழுக்க அடையாளம் காட்டப்படுகிறார்கள்). இம்மூவரின் மூலமாக தற்காலிக தொழிலாலர்களின் பணியிடப் பிரச்சனைகள், நிரந்தரமாக அவர்கள் படும் கஷ்டங்கள், ஒரு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் என நிறைய விஷயங்களை கண்முன் விரிவாக வரைகிறார் குணசேகரன். நாவலை முடிப்பதற்குள் விழுப்புரம் பெரியாரில் வேலைப் பார்த்த மாமாவும், விருத்தாச்சலத்தில் தனியாரில் கண்டக்டராய் பணிபுரிந்த பெரியப்பாவும் எண்ணிலடங்காமல் எண்ணத்தில் வந்தார்கள்.

நாவல் வீடு, நாடு என இரண்டு பாகங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான வீடு பகுதிதான் நாவலின் பிராதனப் பகுதி. பணி நிரந்தரம் தாமதமாவதால், திருமணமும் தள்ளிப் போவதை எண்ணி வருந்தும் அய்யனாருக்கு டெப்போவில் டெக்னிகல் வேலை. ஏ.இ தள்ளிவிடும் வேலைகளை நிரந்தரமாகவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மறுபேச்சுபேசாமல் செய்யும்போதும், யாரையோ பழிவாங்க மேற்கொண்ட நடவடிக்கையால் தானும் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் இருக்கும் நாட்களில், ஏற்கனவே பார்தத கொளுத்து வேலைக்குப் போகும்போதும், சக சி.எல்களான தமிழ் மற்றும் ஏழைக்காக இறக்கப்படும்போதும் வெவ்வேறு முகம் காட்டி, நகமும் சதையுமாக கண் முன்னே உலவுகிறார் அய்யனார். வீட்டில் மனைவிக்கும் தாயிற்குமான பிரச்சனையை சமாளிக்க திணறும் சராசரி ஆணாக ஏழைமுத்து. ஓரளவிற்கு வசதியான குடும்ப பின்புலம் கொண்ட ஆளாக கண்டக்டர் தமிழரசன். டூட்டி போனத் தடத்தில், பள்ளி செல்லும் பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் தமிழரசன். அதுவரை கனக்கச்சிதமாக கணக்கு வழக்குகளை காட்டுபவர், காதல் மயக்கத்தில் கணக்கில் குழம்புகிறார். டூட்டியிலிருக்கும்போது ஒரு முறை செக்கிங்களிடம் மாட்டி வேலையிழக்கிறார். அதே போல் பால்யப் பருவ காதலியால் ஏழைமுத்துவின் வேலையும் போய்விடுகிறது. இச்சம்பவங்களுக்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றது? அவற்றை எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிகாலை நெடுஞ்சாலைப் பயணம் போல் அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நாவல் தொடங்கும்போது வலிந்து திணிப்பதைப் போல் தோற்றமளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவரணைகள் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், போகப் போக பழகிவிடுகிறது. நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.

நூல் : நெடுஞ்சாலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
விலை : 230 ரூபாய்

போதுமென்றளவிற்கு ஏற்கனவே அழுதிருந்தாலும், ஏனோ நெடுஞ்சாலையால் ஏற்பட்ட நினைவுகள் அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத, மனதைப் பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது. நான் பிறந்த ஊர், ஓரிரு முறை விடுமுறையை கழித்த இடம் என்றளவிற்குத் தான் விருத்தாசலத்துடன் எனக்கான தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் தவறிய என் பெரியம்மாவிற்கும் விருத்தாச்சலத்திற்குமான தொடர்புகள் எழுத்திலடங்காதவை. அம்மா வழியில் கிட்டத்தட்ட எங்கள் தலைமுறை முழுக்கப் பிறந்தது விருத்தாச்சலத்தில் தான். பெரியம்மாவிற்கு பொருளாதார வசதிகள் இல்லையென்றாலும், அத்தனை பிரசவங்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது உடல் உழைப்பு மறக்கவே முடியாத ஒன்று. பெரியம்மா இன்று இல்லையென்றாலும் அம்மா வீட்டு வரவேற்பறையில் பளிச்சிடும் பீங்கான் பொம்மைகள் பெரியம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.