ஜனவரி 25 மாலை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் டிக்கெட் புக் செய்திருந்தோம். 6.45க்கு ட்ரெய்ன் என தகவல் தரப்பட நான் 5.15 மணிக்கே ஜூனியர் பார்வையில் படாமல் வீட்டை விட்டு எஸ்கேப் ஆக பிளான் செய்திருந்தேன். MTC இணையதளத்தில் அண்ணா நகரிலிருந்து எக்மோர் போக 75 நிமிடங்கள் ஆகும் எனப் போட்டிருந்தது. கடைசி நேரத்தில் அப்பா "எனக்கு நுங்கம்பாக்கத்தில் தான் வேலை. நானே உன்னை ட்ராப் செய்துவிடுகிறேன்" என சொல்ல, 5.30 மணிக்கெல்லாம் புறப்பட்டாச்சு. சரியாய் 50.50க்கு எக்மோரில் வண்டியை நிறுத்தி இறங்கிக்கோ என்றார்.
"ஏன்ப்பா. வேலை வந்துடுச்சா? நான் ஆட்டோல போகவா?"
"எக்மோர் ஸ்டேஷன் வந்துடுச்சு"
"யாரக் கேட்டு இவ்வளவு சீக்கிரம் வந்தது. MTC வெப்சைட்ல 75 நிமிஷம் ஆகும்ன்னு போட்ருந்தானே."
"அவன் ஊரெல்லாம் சுத்தி காமிச்சுட்டு வர அவ்வளவு நேரம் ஆகும்."
"கிர்ர்ர். நீயாவது சொல்லிருக்கலாம்ல. ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு?"
"எனக்கு என்னடி தெரியும். நீ உன் பிரெண்ட்ஸ் பார்க்க போறியோன்னு நினைச்சேன்"
ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு நினைச்சுகிட்டே போனா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பத்தின டீடெய்ல்ஸ் எதுவுமே போடல. பக்கத்துலயே ரூம்ல இருந்த இரண்டு அங்கிள்ஸ்கிட்ட எவ்வளவு பவ்யமா கேக்க முடியுமோ அவ்வளவு மரியாதையோட
"நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எப்ப சார் வரும்?"
"அது 5.30 மணிக்கே போய்டுச்சேமா"
நான் அப்படியே ஸாக் ஆயிட்டேன். அடக்கடவுளே. 5.45ன்னு சொல்றதுக்கு பதிலா 6.45ன்னு சொல்லிட்டானோ என நினைத்தபடியே "இல்ல 6.45க்குன்னு சொன்னாங்களே?"
"ஓ. டைம் சொல்லிக் கேளும்மா. அது ஸ்பெஷல் ட்ரெய்ன். இனிமேதான் வரும்."
அவரிடம் என்ன சொல்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போதே மக்களிடமிருந்து போன் வர எஸ்கேப்.
ரவானா ஹோகி என நான் ஸ்டாப்பை கதறிக்கொண்டிருந்த ஸ்பீக்கரைப் பார்த்து எரிச்சலுடன்
"இவங்களுக்கு வாயே வலிக்காதா?"
"ஹே அதுக்குதானடி சம்பளம் தர்றாங்க"
கிர்ர்ர்ர் என அவளை முறைக்க, அதற்குள் அங்கிள் ரொம்ப சீரியசாய்
"அது ரெக்கார்டட் வாய்ஸ்மா" என்றார். மற்ற நால்வரும் கோரசாய் "ஆணியே புடுங்க வேணாம் போ" என மனதிற்குள் சொல்லிக் கொண்டோம்.
ஒவ்வொருத்தராய் வந்து சேர 6.30 மணியாகிவிட்டது. ட்ரெய்ன் கிளம்பியும் கதவருகேயே நின்றுகொண்டிருந்த நண்பனை தமன்னாவுக்கு வெயிட்டிங்கா என கிண்டல் பண்ண, அதற்கு இன்னொரு தோழி, வழியனுப்ப வந்தவனை உள்ளாற ஏத்திவிட்ட வடிவேலு கதையாகப்போகுது என நக்கலடிக்க களைகட்ட ஆரம்பித்தது.
"கோவில்பட்டி எப்ப வரும்?"
"ஏன்?"
"இல்ல. என் கூட வேலை செய்றவருக்கு கோவில்பட்டி சொந்த ஊரு. லீவுல இப்ப அங்கதான் இருக்காரு. கோவில்பட்டி வந்ததும் கூப்பிட சொன்னாரு."
(கோவில்பட்டி விடியற்காலை 3மணிக்கு வரும்போல)
"எதுக்கு? ஸ்டேஷனுக்கு வந்து டாட்டா சொல்லுவாரா. ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி லூசுங்களோட ட்ராவல் பண்ண வைக்கற"
கிட்டத்தட்ட பத்தரை மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். சக பயணிகளின் வற்புறுத்தலால் தூங்கப்போனோம் (இந்த பெருசுங்க தொல்லை தாங்கமுடியலடா சாமீ). காலையில் ஐந்தரை மணிக்கு சூடா பஜ்ஜி, வடை சமோசா விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்துக்கு யார்ரா சாப்பிடுவா என்று யோசித்த எங்களுக்கு கொஞ்ச நேரத்திற்கு பிறகு புரிந்தது. 7 மணிக்கு போக வேண்டிய ட்ரெய்ன் 9 ஆகியும் முக்கிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய சோகம் ட்ரெய்னில் பாண்ட்ரி இல்லை. தண்ணி காலி. திங்க ஏதுவுமில்லை. 5 மணிக்கே பல்லை விளக்கினது எவ்வளவு பெரிய தவறு எனப் புரிந்தது. அதைவிட மாபெரும் தவறு பஜ்ஜி வாங்கி வைக்காமல் விட்டது. ரிடர்ன் ட்ரிப்பின் போது ஒரு மினி பேக்கரியே ஸ்டாக் வைத்தக் கதை அடுத்த பதிவில். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வள்ளியூரில் ட்ரெய்ன் நின்றுகொண்டிருந்தது. அப்போ எடுத்த புகைப்படங்கள் இவை. எங்க பார்த்தாலும் பச்சைப் பசேல்ன்னு ஊரே ஏசி போட்டுவிட்டால் போல் இருந்தது.


ஸ்டேஷனில் இறங்கி அங்கிள் வீட்டில் கொட்டிகிட்டு ஏசி ரூம் வந்தால் கண்ண கட்டுது. இருந்தும் ஊர் சுத்தனும்ங்கற உயர்ந்த லட்சியத்தோட, கடமையுணர்ச்சியோட கிளம்பி எங்களுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருந்த ட்ரைவரிடம் மத்தூர் தொட்டிப்பாலம் பார்க்கனும் என்றோம். அதெல்லாம் நல்லாருக்காது. திற்பரப்பு அருவி போய்ட்டு அப்படியே பத்மநாபபுரம் அரண்மனை பார்க்கலாம்ன்னாரு. நாங்கதான் அறிவாளி ஆச்சே. இன்னிக்கு ஜனவரி 26. அரண்மனை மூடியிருப்பாங்க என்ற இணையத்தகவலை சொன்னதும் அப்படியான்னாரு. அப்பவே உசாராயிருக்கனும். நாகர்கோவிலிலிருந்து ஒரு மணி நேர பயணம். திற்பரப்பு அருவி அன்புடன் (ஹுக்கும்) வரவேற்றது.

போட்டோவுல என்னாமா தண்ணி கொட்டுதுன்னு பார்த்தீங்கல்ல. இப்ப நிஜ அருவியப் பாருங்க.


அருவியப் பார்த்து காண்டாகி கிளம்பிவிட்டோம். அருவிக்கு வந்து சும்மா போனா நல்லாருக்குதுன்னு ஆளுக்கொரு வாழைக்காய் பஜ்ஜியும், பழம்பூரியும் (நேந்திரம் பழ பஜ்ஜியாம். டக்கரா இருந்தது) அமுக்கிவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு கிளம்பினோம். ட்ரைவர் :"இங்கன" என ஆரம்பித்தார். நேரா பொண்ணு வீட்டுக்கு வண்டிய விடுங்க சாமின்னு ஒருசேர பெரிய கும்பிடு போட்டோம். அங்க போய் மதியம் செம லஞ்ச் சாப்பிட்டோம் (வடை, பாயாசம், அப்பளம், 3 பொரியல், அவியல், எரிசேரி, பருப்பு, சாம்பார், ரசம், மோர்ங்கற மெனுவ சொன்னா நீங்க வயித்தெரிச்சல் படமாட்டீங்க தானே). தூக்கம் கண்ண சுழுட்ட அடுத்த நாங்க கிளம்பின இடம் கன்னியாகுமாரி. சூர்ய அஸ்தமனம் அடுத்த பதிவில்...