டைரக்டர்/நடிகர்/தயாரிப்பாளர் சசிக்குமாரின் அடுத்தப் படம். சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க என இயக்குனராய், நடிகராய், தயாரிப்பாளராய் நல்லப் படங்களைக் குடுத்த சசிகுமார் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஈசன். விக்ரம் தயாரிப்பதாய் சொன்னப் படம் பின்னர் சசிக்குமாரே டேக் ஓவர் செய்துக்கொண்டார். சமுத்திரக்கனி, அபிநயா, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கதிர். இசை ஜேம்ஸ் வசந்தன்.

மெய்யான இன்பம் இந்த போதையாலே..
பரபரப்பான சென்னை மெல்ல மெல்ல அடங்க ஆரம்பிக்கும் வேளையில் வெளியே சுற்றியிருக்கிறீர்களா? ஒரு பக்கம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் கையேந்தி பவன்கள். இன்னொரு பக்கம் ஆயிராமாயிரம் மனிதர்களை விழுங்கியிருந்தாலும் சலனமே இல்லாமல் நின்றுக்கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள். பாதி ஷட்டரை கீழிறக்கிவிட்டு வரவை எண்ணிகொண்டிருக்கும் கடைக்காரர்கள், அங்குமிங்குமாய் ஒரு சில மனிதர்களே தென்படும் கடற்கரைகள் என சென்னை இரவு நேரத்தில் அழகாய் தெரியும். சில சமயம் ஆபத்தாகவும். சென்னையின் இரவு வாழ்க்கையை அனுபவிக்கும் நண்பர்கள் பாடும் பாடல். சுக்வீந்தர் சிங், பென்னி தயாள் மற்றும் சுனந்தன் (இவர் வேறெதாவது பாடல் பாடியிருக்கிறாரா? குரல் பிரேம்ஜியைப் போலவே இருக்கிறது) பாடியிருக்கும் பாடல். நல்ல பீட்களோடு முதல் முறை கேட்கும்போதே நல்லாருக்குல்ல என எண்ண வைக்கிறது.
என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்றுப் போடு இரவிலே
அழகான வரிகள். பகல் முழுவதும் இயல்பு தொலைத்து இயங்கிக்கொண்டிருக்கும் நாம் நம்மை மீட்டெடுப்பது இரவில்தானே.
சுகவாசி சுகவாசி...
சித்ராவும் மால்குடி சுபாவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் அநேகமாக க்ளப் பாடலாக வருமென நினைக்கிறேன். சுமார் ரகமாகத் தான் தெரிகிறது. வழக்கமான க்ளப்/ஐட்டம் நம்பர். வரிகளும் ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாகத் தெரியவில்லை. இந்த மாதிரிப் பாடல்களில் நேற்று என்பது இல்லை, நாளை இனிமே தான் வரும், வாழ்வை அனுபவி போன்ற ஒரே மாதிரியான வரிகள் கடுப்பைக் கிளப்புகிறது.
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
ஒரு பாலியல் தொழிலாளி தன் கதையை சொல்லும் பாடல். சோகத்தைச் சுமக்கும் நாட்டுபுறப்பாடல். தஞ்சை செல்வி என்பவர் பாடியிருக்கிறார். அருமையான குரல். சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க பாடலின் மூலம் வேல்முருகன் என்ற பாடகரை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்தில் தஞ்சை செல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
உசுரல்ல நானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சி
வயிறு எங்கே கேட்டிச்சி
என்ற வரிகள் மனதை தைய்க்கின்றன.
கண்ணில் அன்பைச் சொல்வாளே..
அழகான மெலடியாக வந்திருக்க வேண்டிய பாட்டு. காதலியைத் தாயாய் நினைத்து உருகும் பாட்டு. என்னவோ மிஸ்ஸிங் என்ற நினைப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பாட்டில். என்ன எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிலருக்குப் பிடிக்கலாம்;)
Get Ready to rock
சுப்ரமணியபுரத்தில் படத்தில் வராமல் ஒரு பாடலிருக்கும் “தேநீரில் சிநேகிதம்” என. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பென்னி தயாள் பாடியிருக்கும் பாடல். பெரிதாய் ஈர்க்கவில்லை. மோசமுமில்லை. ஒரு வேளை படத்துடன் பார்க்கும்போது பிடிக்குமோ என்னவோ.
ட்ரைலர்..



