Showing posts with label 49O. Show all posts
Showing posts with label 49O. Show all posts

April 15, 2009

ஈழமும் ஓட்டு வங்கியும்

எவ்வளவோ போராட்டங்கள். எவ்வளவோ பேரணிகள். எவ்வளவோ தீக்குளிப்புகள். தீர்வே இல்லையா என கதறும் சொந்தங்கள். நம் சொந்தங்கள். ஆனால் அதிகாரவர்க்கம் அழுத்தமாய் மௌனம் காக்கின்றது. இல்லையேல் அவ்வப்போது கொஞ்சம் கண்துடைப்புகள். சீக்கியர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு டைட்டலருக்கும், சஜ்ஜானுக்கும் போட்டியிட வாய்ப்பளிப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிதம் போராட்டம் என சொந்தங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழர்களின் குரல் காதில் விழவில்லையா? இல்லை கேட்காததுபோல் நடிக்கிறார்களா? இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் நாளைக்கு நமக்கும் நடக்கும். நடக்காதென்பதிற்க்கு யார் உத்திரவாதம்?


பதவியை துறந்தால் தீர்வு வந்துவிடுமா? சிலர் பேசும் பேச்சுக்கு நான் பதவியில் இருப்பதால் தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் முதல்வர். தமிழ் உணர்வாளர்களென தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவுக்கோ, வைகோவுக்கோ இப்போது எம்.பி சீட் தான் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை.


நம்மால் ஏதும் செய்ய இயலுமா? நாம் ஏன் இந்த சுயநல அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கக் கூடாது? ஓட்டு வங்கிகளாக இருந்தது போதும். இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். ஒட்டு மொத்த அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமேனும் பயத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நம் கையிலிருக்கும் ஆயுதம் 49O. ஏற்கனவே இம்முறையினில் வாக்களிப்பதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார். இது சாத்தியமா என தெரியவில்லை. நடைமுறைப் படுத்தலாம் என்றால் நாம் ஏன் 49Oவை ஆயுதமாக உபயோகிக்கக்கூடாது? அவ்வாறு செய்து மறுபடியும் தமிழகத்துக்கு தேர்தல் நடக்குமேயானால் ஈழப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கட்சிக்கே ஓட்டு என அறிவித்தால் நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு தீர்வுகாணமாட்டார்களா? இதுவும் நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.

Make a wise decision. Vote for YOUR future.

December 10, 2008

49ஓ

உங்கள் தொகுதியில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் அதே சமயம் உங்கள் வாக்கினையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கான வழி தான் இந்த 49ஓ.


49ஓ என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஓட்டுச் சீட்டு முறைப்படி வாக்களிக்கும்போது, யாருக்குமே வாக்களிக்க விருப்பம்யில்லையெனில், செல்லா வோட்டு போடுவார்கள். ஆனால் இய்ந்திரத்தின் மூலம் வாக்கைப் பதியும்போது அப்படி செய்ய முடியாது. கண்டிப்பாக யாருக்காவது வோட்டு போட்டுத்தான் ஆகவேண்டும். இந்த இடத்தில் தான் 49ஓ காட்சிக்கு வருது (வாக்குச்சீட்டு முறையின்போதும் இந்த விதி அமலில் இருந்தது). வோட்டுச்சாவடிக்கு சென்று உங்கள் identification சரிபார்த்த பின், அங்கு இருக்கும் ஆபிஸரிடம் (presiding) சென்று என் வாக்கினை 49ஓவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொன்னால் அவர் ஒரு படிவம் தருவார். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் பெருவிரல் ரேகையை அதில் இட்டு, ஆபிஸரும் கையெழுத்து போட்டால் முடிந்தது. நீங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதே சமயம் உங்கள் வோட்டும் misuse செய்யப்படவில்லை என நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.


இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒன்றுமில்லை. உங்கள் வோட்டு கள்ளவோட்டாக மாறவில்லை. அவ்வளவே. நிறைய பேரிடம் ஒரு தப்பான தகவல் பரவி வருகிறது. அதென்னவென்றால் "ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வாக்காளருக்கு கிடைத்த ஓட்டு எண்ணிக்கையைவிட அந்த தொகுதியில் பதிவான 49ஓ வாக்குகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் அறிவக்கப்படும். ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் மறுபடியும் களத்தில் இறங்கக்கூடாது. கட்சிகள் அனைத்தும் புது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்." ஆனால் இதுபோல் தேர்தல் கமிஷனின் விதியில் குறிப்பிடப்படவில்லை. ஹூம் இது மட்டும் நடைமுறைக்கு வருமேயானால், அரசியல்வாதிகளின் குடுமி மக்கள் கையில்.


நான் இரு முறை முயற்சி செய்து ஒரு முறை 49ஓ முறைப்படி என் வாக்கினைப் பதிந்தேன். முதல் தடவை காலேஜ் படிக்கும்போது பூத் ஆபிஸரிடம் சென்று படிவம் கேட்டதுக்கு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். form இல்லை போ என்றார். கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு, அப்புறம் போய் ஒரு சுயேச்சைக்கு வோட்டுப் போட்டுட்டு வந்தேன். அடுத்த தடவை விடக்கூடாது என்று, ஆபிசரை மிரட்டி (form தரலைன்னா chief election commissionerக்கு புகார் அனுப்புவேன் என்று) கடமையை நிறைவேத்தினேன்.


மக்களுக்கு வோட்டு போடாமல் (எந்த வேட்பாளருக்கும்) இருக்கும் உரிமையை 49ஓ விதி வழங்குகிறது.


டிஸ்கி : என்னோட முந்தைய பதிவின் பின்னூட்டத்தில ஜீவன், ஜமால், அமித்து அம்மா, பூர்ணிமா போன்றோர் 49ஓவப் பத்தி கேட்ருந்தாங்க. அவங்க நிஜமாவே தெரியாமா கேட்ருந்தா இது விளக்கப் பதிவு. சும்மானாச்சுக்கும் விளையாட்டுக்கு கேட்ருந்தாலும், பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடிடுச்சேன்னு நான் சந்தோஷப்படுவேன்:)