December 30, 2010

பரிசு பெற்ற கதையும் பரிசும்

விளையாட்டாய் எழுத வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஒன்றும் பெரிசாக எழுதிக் கிழிக்கவில்லையென்றாலும் என் மனதிற்குப் பிடித்தவற்றை கிறுக்கி வைக்கிறேன். ஒரு சேமிப்புக் கிடங்காய். விளையாட்டாகவே தான் ஆதியும் பரிசலும் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பியது. அறிவிப்பு வந்தவுடன் வெளியான (நான் படித்த) நிறைய கதைகள் ஏதோவொரு வகையில் சஸ்பென்ஸ்/சயின்ஸ் ஃபிக்‌ஷனோடு சம்பந்தப்பட்டிருந்தது. சரி நாமலும் முயல்வோம் என ஆரம்பித்து, வேண்டாம் நமக்கு மொக்கை தான் சரிப்பட்டு வருமென பாதியில் டைவர்ட் பண்ணிய கதை இது. பதிவுலகம் சாராத நண்பர்களுக்கு படிக்க அனுப்பியபோது ஃப்ளோ நல்லாருக்கு என்று எல்லோரும் சொல்லவும் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். கதையை பதிவில் வெளியிட்ட போது எல்லோரும் ஓரளவுக்கு நல்லாருக்கு என்றே கமெண்டினார்கள். அதோடு அதை மறந்தும் விட்டேன். முடிவுகள் அறிவிக்கும் தேதி நெருங்கிய வேளையில் கூகிள் பஸ்ஸில் கூட கிண்டலாகத்தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

ஆறுதல் பரிசு என்று தெரிந்ததும் நிஜமாகவே சந்தோஷமாய் இருந்தது. போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும், இதுவரை தொடர்ந்து என்னை வாசித்து ஊக்கமளித்து விமர்சித்து வரும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள். ஆறுதல் பரிசான புத்தகங்கள் வந்துச் சேர்ந்துள்ளன. கிராவின் கோபல்ல கிராம மக்கள், கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு, பரிசலின் டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும். கிராவை இதுவரை நான் வாசித்ததேயில்லை. எனக்கு பரவலான/ஆழ்ந்த வாசிப்பறிவு கிடையாது. என்னைக் கவரும் தலைப்புகளைக் கொண்ட புத்தகங்களையே வாசிக்கிறேன். சில சமயங்களில் இவ்வகைத் தேர்வுகள் காலை வாரியதும் உண்டு. எளிமையான மொழி நடையில், கதைக்களத்தில் நம்மையும் உலவச் செய்யும், கதை மாந்தர்களோடு நம்மையும் உறவாடவைக்கும் படைப்புகளே என்னை பெரிதும் ஈர்க்கின்றன. இதுபோன்ற கதைகள் என் பால்யப் பருவத்தை ஏதோவொரு வகையில் கண்முன் கொண்டு வரவோ, நினைவொடைகளில் நீந்தவோச் செய்கின்றன. தன்னுடைய புத்திசாலித்தனத்தை, அதிமேதாவித்தனத்தை வலிந்து திணிக்கும் கதைசொல்லிகளின் கதைகள் என்னை கவர மறுக்கின்றன.

பரிசாய் பெற்ற கிராவின் புத்தகம், நண்பர்கள் பரிசளித்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பு என படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதோ இன்னும் கொஞ்சம் நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. இதெல்லாம் வாங்கனும்ன்னு எதுவும் பட்டியல் போட்டுவைக்கவில்லை. சென்ற முறை வாங்கிய புத்தகங்களில் இன்னும் பாதிக்கு மேல் படிக்காமல் வைத்திருக்கிறேன். இந்த முறை எப்படியெனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ஏனோதானோ என்றில்லாமல் பொறுமையாக வாங்கவேண்டும்.

34வது புத்தகக் கண்காட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல் வாரநாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரையும், விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணி முதல் இரவு 8.30 வரையும் நடைபெறுகிறது. மேலதிக விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

அனைவருக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டு எல்லாவிதத்திலும் உங்களுக்கு இன்பத்தைத் தர (நோ நோ. நான் எழுதறத நிறுத்த மாட்டேன்)வேண்டுகிறேன்.

December 27, 2010

Tees Maar Khan

தாயின் கருவிலிருக்கும்போதே திருட்டைப் பற்றிய சகலமும் கற்றுக்கொள்ளும் மகாத் திருடன் Tarbez Mirza Khan (a) Tees Maar Khan. போலீசார் கைப்பற்றிய ஜோஹரி பிரதர்ஸின் கலைப் பொக்கிஷங்களை திருடி, அவர்களிடமே ஓப்படைக்கும் பணியை மேற்கொள்கிறான். டெல்லிக்கு சரக்கு ரயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் கலைப் பொருட்களை, ஆஸ்கர் அவார்ட் வாங்கும் வெறியில் இருக்கும் ஹீரோ (அக்‌ஷய் கண்ணா), ஹீரோயின் கனவிலிருக்கும் தன் காதலி (காத்ரீனா கைஃப்) மற்றும் துலியா என்ற கிராமத்தின் ஒட்டுமொத்த ஜனங்களை வைத்து எப்படித் திருடுகிறான்? போலீசாரிடம் மாட்டினானா என்பது கதை.

வித்யாசமாய் ஆரம்பிக்கிறது டைட்டில் சாங். சரி படமும் சூப்பரா இருக்கும்ன்னு எதிர்பார்த்தால் எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சன் டிவியில் பெஸ்ட் சீன்ஸ் என்றொரு நிகழ்ச்சி வரும். ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாமல் ஒரு படத்தில் வரும் சிறந்த சீன்கள் ஒளிப்பரப்பாகும். தீஸ் மார் கானும் அப்படித்தானிருக்கிறது. பாரீஸில் கைதாகும் கான் மும்பையில் தப்பிக்கிறார். அவரை ரெண்டே ரெண்டு டம்மி சிபிஐ ஆபிசர்கள் மட்டுமே தேடுகிறார்கள். அதுவும் மொத்தம் ரெண்டே சீனில். படம் தொடங்கும்போது வரும் கமிஷனர் அண்ட் கோ படத்தை முடித்து வைக்கவும் வருகிறது. அது சரி. ஃப்ரா கான் படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது 2ஜியில் ஊழலே நடக்கவில்லை என நம்புவதற்கு ஒப்பானது. முதல் இரண்டு படங்களான Main hoon na மற்றும் om shanthi om ஆகியவற்றில் நோ லாஜிக். அட்லீஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே ஒரளவிற்கு சுமாராக இருக்கும். இங்கு அதுவும் கிடையாது. பெரிய நடிகராம் ஆனா ஒத்தை கேமரா வச்சிகிட்டு ஷூட்டிங் நடக்குதுங்கறதைக் கண்டுக்கவே மாட்டாராம். காதுல பூ வைக்கலாம். பரவாயில்லை. ஒரு பூந்தோட்டத்தையே வைக்கிறாங்க. வெகு சில சீன்களே சிரிப்பை வரவழைக்கின்றன. உதாரணத்திற்கு மனோஜ் டே ராமலன்க்கான பெயர் விளக்கம். மற்ற சோ கால்ட் ஜோக்கெல்லாமே மொக்கையாய் இருக்கிறது.

அக்‌ஷய் குமார் அண்ட் கோ. எப்போப் பாரு அவரு உதிர்க்கும் பஞ்சும், அவர் அடிப்பொடிகளின் எசப்பாட்டும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக ஓவர் டோஸாகிவிடுகிறது. காத்ரீனா கைஃப். நம்ம தமிழ்ப்பட ஹீரோயின்கள் செய்த/செய்கின்ற வேலை. லூசுக் கேரக்டர். அதுவும் லூசு ஹீரோயின் கேர்க்டர்னா கேக்கவே வேணாம். செம்ம காட்டு காட்டிருக்காங்க;) ஏற்கனவே இருக்கிற கிறுக்குப் பட்டாளத்துக்கு மத்தில சல்மானும், அனில் கபூரும் கெஸ்ட் அப்பியரன்ஸ்.

படத்துல இப்பப் பாட்டு வரப்போகுதுன்னு சொல்லி ஒரு பாட்டு போடலாம். எல்லாப் பாட்டும் அப்படிப் போட்டா? கடுப்பாயிருக்கு. ஆனா ம்யூசிக் சூப்பர். ஹிந்தி மசாலா படத்துக்கு தேவையான இசை. விஷால் ஷேகர் அட்டகாசமா பண்ணிருக்காங்க. ஷீலா கி ஜவானியும், வல்லாரே வல்லா வல்லாவும் செம்மையா தாளம் போட வைக்குது. டைட்டில் சாங்கான தீஸ் மார் கான் பாட்டு ஷிரிஷ் குந்தர் (ஃபரா கானின் வூட்டுக்காரர்) இசையமைத்ததாம். குட். தமிழ்நாட்டுக்கு ஒரு டி.ஆர் மாதிரி வடக்குக்கு ஒரு ஷிரிஷ் குந்தர் போல. எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசைன்னு எல்லாத்திலயும் இவர் பேர்தான். ஆனா ஒன்னும் உருப்படியா இல்லைங்கறதுதான் மேட்டரே. சொதப்பலான திரைக்கதை. திருட்டை வைத்து ஒரு ஜாலியான காமெடி குடுக்கலாம் என ஆரம்பித்து, படத்திற்குள் படம் என ஸ்பூஃபிற்குத் தாவி, தீடிரென கிராமத்திற்கு நல்லது செய்யலாமென முடிவெடுத்து, எமோஷன் வேண்டாமென பழையபடி ஸ்பூஃபிற்குத் தாவி, மீண்டும் எமோஷன் ட்ராமாவைக் கையிலெடுத்து, எந்த எழவும் வேண்டாமென ஹாப்பி எண்டிங் என முடிக்கிறார்கள். இதே கதையை ப்ரியதர்ஷன் ரசிக்கும்படிக் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். நல்லவேளையாக இதில் காதல் கருமாந்திரத்தை உள்ளே கொண்டுவரவில்லை. இன்னொரு நல்ல விஷயமாக படத்தை ரெண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டார்கள்.

தீஸ் மார் கான் - மரண அடி:(

December 24, 2010

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்

நவம்பர் தொடங்கி ஜனவரி வரை ஏதோவொரு வகையில் ஃபெஸ்டிவ் சீசன் என்ற மூட் இருந்துக்கொண்டே இருக்கும். டமால் டூமில் என வெடிக்கும் வெடிகள் தீபாவளியின் வரவைச் சொல்வது போல் வீட்டின் வாயிலில் கலர்கலராய் ஒளிவீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் க்றிஸ்துமசின் வரவைச் சொல்லும்.

பள்ளிக் காலம் தொட்டு க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அளவில்லா குதூகலத்தைத் தருகின்றது. காஞ்சிபுரத்தில் நான் படித்த பள்ளி க்றித்துவ அமைப்பால் நடத்தப்பட்டது. வெள்ளுடை சிஸ்டர்ஸ் தான் சகலமும் அங்கே. அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் தான் ஆரம்பிக்கும். டிசம்பர் முதல் வாரத்திலேயே பள்ளியின் நுழைவாயிலிலும், ஜீசஸ் சிலை இருக்கும் இடத்திலும், சிஸ்டர்களின் கான்வெண்டிலுமாக மூன்று ஸ்டார்கள் ஒளிர ஆரம்பித்துவிடும். க்றிஸ்துமஸிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மரம் டெகரேட் செய்து, பெரிய குடில் அமைத்து, பொம்மைகள் வைப்பார்கள். கிட்டத்தட்ட கொலு போல. ப்ரெக்னெண்டாக இருக்கும் மேரி மாதா சிலை க்றிஸ்துமஸன்று குழந்தை யேசுவோடிருக்கும்;) ஒவ்வொரு க்றிஸ்துமஸின் போதும் யேசுவின் பிறப்பைப் பற்றிய நாடகமிருக்கும். ஒரிரு வருடங்கள் narrator ஆக இருந்த ஞாபகமிருக்கிறது. அப்புறம் பாட்டு டான்ஸென ஒரு மணிநேரம் வண்ணமயமாக கடந்துச் செல்லும். எல்லோருக்கும் கேக் விநியோகிக்கப்பட்ட பின் ப்ரார்த்தனைகள், ஸ்தோத்திரங்கள் என கொண்டாட்டங்கள் தற்காலிக முடிவிற்கு வரும்.

அங்கிருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கு க்றிஸ்துமஸ் என்றில்லை எந்தவொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இரண்டே வருடங்களில் மீண்டும் வேறு பள்ளி மாறினேன். அங்கு எல்லா நாட்களும் கொண்டாட்டம் தான். சீனியர் வகுப்பிலிருந்ததால் ஆர்கனைசிங் கமிட்டியில் மெம்பராகும் வாய்ப்பும் கிடைத்தது. தீபாவளி பெரிதாக ஒன்றுமிருக்காது. க்றிஸ்துமசும் பொங்கலும் க்ராண்டாக செலிப்ரேட் செய்யப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்னரே Choir டீமிற்கு (ஹி ஹி. நானும் பார்ட் ஆஃப் தி டீம்) ஜாக்குலின் மற்றும் செலினா மிஸ்ஸிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். வருடா வருடம் ஆரம்ப பாடல் மட்டும் மாறும். முதலில் ஒரு பாடல். பின்னர் நடனம். அடுத்து ஜிங்கிள் பெல்ஸ் பாடல். மீண்டுமொரு நடனம். ஆசிரியர்களும், கெஸ்ட்டுகளும் கலந்து கொள்ளும் சில விளையாட்டுக்கள். கடைசியாக We wish you a merry christmas பாடல். ஒரிரு நிமிடப் ப்ரேயர். க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும். ரிகர்சலின் போது ஆசிரியர்களை அழவிடுவது அலாதியானது. வேணுமென்றே நோட்ஸ் மாற்றிப் பாடுதல், சின்க் தவறவிடுதல், ஹைப் பிட்சில் சொதப்புதல் என நிறைய கலாட்டா செய்வோம். எப்பேற்ப்பட்ட மூடில் இருந்தாலும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் பீட்ஸ் கொண்டது ஜிங்கிள் பெல்ஸ் பாடல். பாடுவதோடில்லாமல் ஃபுட் டேப்பிங், ஆர்ம் ஸ்விங்கிங் போன்ற எளிமையான நளினமான மூவ்களையும் தரவேண்டும். இம்மாதிரியான charolsக்கு உச்சரிப்பு தெளிவாகவும் அதே சமயம் ஸ்டைலிஷாகவும் இருக்க வேண்டும் என்பது செலினா மிஸ்ஸின் நம்பிக்கை. அவர் எதிர்பார்க்கிற ரிசல்ட் வரும் வரை விடமாட்டார். என்னதான் டார்ச்சர் செய்தாலும் விழாவின் போது கரெக்டாகப் பாடி அப்ளாஸ் வாங்கும் எங்கள் டீம்.


அதே போல் இந்தப் பாட்டையும் கேளுங்கள்.


பின்னர் காலேஜில் Christ Mom Christ Child விளையாடுவதோடு சரி (Day Scholar கேங் எல்லாம் பொங்கலுக்கு இதை விளையாடியது தனிக் கதை). மணமணக்கும் ரம் ப்ளம் கேக், பால் பாயாசம், வெனிலா/மேங்கோ ஃப்ளேவர்டு கஸ்டர்ட் என ஷீலா ஆண்டியின் கை வண்ணத்தில் ஒரிரு வருடங்கள் க்றிஸ்துமஸ் கொண்டாடியதுண்டு. இம்முறை அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் க்றிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு முறை படியேற அவர்கள் வீட்டு வாயிலைக் கடக்கும்போது காணக் கிடைக்கும் டெக்கரேட் செய்யப்பட்ட க்றிஸ்துமஸ் மரமும், ஸ்டாரும் என் பழைய நினைவுகளை கிளறிக் கொண்டே இருக்கின்றன. குட் ஓல்ட் டேஸ்..

பதிவர்கள் அனைவருக்கும் க்றிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...

December 22, 2010

ஐய்யோ...அம்மா...கொல்றாளே..

கோபம் அழுகை
துக்கம் சந்தோஷம்
அனைத்தையும் நொடியில் வெளிபடுத்துகிறாய்
என் மீதான காதலைத் தவிர.
*************

காலை எழுந்தவுடன் படிப்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என
பாரதி சொல் பின்பற்றிக்கொண்டிருந்தேன்.

இப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் காப்பி
பின் காதல் கொடுக்கும் உன் பேச்சு என்றாகிவிட்டேன்.
*************

சத்தமே எழுப்பாமல் பின்னிருந்து அணைக்கிறாய்
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் அலறித் துடிக்கிறது இதயம்
****************

செல்போன்
ரூம் சாவி
பைக் கீ
பர்ஸ்
எல்லாம் இருக்கா என்கிறாய்.
ம் என்றவள் என்னை மறந்து
அங்கேயே விட்டுவிட்டு வருகிறேன்.
*****************

உன்னிடத்தில் சுலபமாய்
மனதை தொலைத்துவிட்டேன்
வெட்கம் தொலைக்க வெட்கமாயிருக்கிறது.
******************

மனம் கொள்ளா கோபம்
விழி கொள்ளா கண்ணீர்
அனைத்தும் சட்டென அடங்கிவிடுகிறது
உன்னிரு விழி பார்க்கையில்.
******************

உன் குற்றத்தையும்
என் கோபத்தையும்
மரித்துப் போகச் செய்கின்றன
நம் பிரிவு
******************

December 20, 2010

ஈசன்

நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து என்றிருக்கும் அரசியல்வாதி. அவர் கட்டி வைத்திருக்கும் சாம்ராஜ்யத்திற்கு ஒரே வாரிசு. நேர்மையாக இருக்க விரும்பும் அசிஸ்டெண்ட் கமிஷனர். குடி கும்மாளம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் வாரிசிற்கு தொழிலதிபர் மகளோடு காதல் ஏற்படுகிறது. சின்ன மோதலுக்குப் பின் அரசியல்வாதியின் சாணக்கிய மூவ்களால் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்படுகிறது. இதைக் கொண்டாட செல்லும் அரசியல்வாதியின் மகனை யாரோக் கடத்துகிறார்கள். வாரிசை மீட்கக் களமிறங்குகிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர். கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? அசிஸ்டெண்ட் கமிஷனர் வாரிசைக் கண்டுபிடித்தாரா? விடைத் தருகிறான் ஈசன்.

எந்த விமர்சனமும் படிக்காமல் ரிலீஸான மறுநாளே படத்திற்கு புக் செய்திருந்தோம். சசிக்குமாரை மட்டும் நம்பி. சசிக்குமார் ஏமாற்றவில்லை. அதே சமயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவுமில்லை. மிகச் சாதாரணமான பழிவாங்கும் கதைதான். அதைக் கொடுத்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. நகரத்து இளசுகளின் பார்ட்டி கலாச்சாரம். பப், டிஸ்கோத்தே, கேட்டமின், ப்ரைவேட் பார்ட்டி என கெட்டு சீரழிகிறார்கள் படத்தில் (நிஜத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது). ஈசிஆரில் இரவில் நடக்கும் drunk and drive விபத்துகளும், காலை வேளைகளில் கஃபேக்களிலும், இரவில் பப்பிலும் கூடும் இளைஞர்களிம் ஈசி கோ வாழ்க்கைமுறையுமாக ஒரு ட்ராக் ஓடுகிறது. அடாவடி அரசியல்வாதியும், அவர் அல்லக்கையும், இவர்களின் கட்டப்பஞ்சாயத்து வேலைகளுமாக இன்னொரு ட்ராக். முதல் பாதி இவை இரண்டு மட்டும்தான். சரி காதலை மையமாக வைத்து அரசியல்வாதியும், தொழிலதிபரும் விளையாடப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் இடைவேளையில் சடாரென ஈசனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

இன்னார் தான் ஹீரோ/ஹீரோயின் என அடையாளம் காட்ட முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. அதிலும் தனித்து முத்திரைப் பதிக்கிறார் சமுத்திரக்கனி. அசிஸ்டெண்ட் கமிஷனர் சங்கைய்யா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். போலீஸ் வேடம் ஏற்றவுடனே ஹீரோயிஸம் காட்டாமல் தன் கையாலாகாததனத்தை நொந்துக் கொள்ளும்போது நடிப்பில் மிளிர்கிறார். இவர் உயரமும் குரலும் மிகப் பெரிய பலம். அரசியல்வாதியாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். பேச்சிலேயே நரித்தனத்தைக் காண்பிக்கிறார். பிள்ளை என்று வரும்போது ஒரு விதமான குரலிலும், மற்றவர்களிடம் அதிகாரத் தொனியிலும் பேசி கவர்கிறார். இவரின் அல்லக்கையாக வரும் நமோ நாராயணன் சூப்பர் (நாடோடிகள் படத்தின் போஸ்டர் பார்ட்டி்). ”தெய்வமே” என்ற ரிங்டோனும், போலீஸ் வண்டியில் ஏறியதும் சமுத்திரக்கனியின் காரெக்டரை நக்கலடிப்பதும், மனுஷனுக்கு அடிப்படைத் தேவையான ஏசி இல்லையான்னு கேட்டதுக்கு அடிச்சிட்டாருங்கைய்யா எனும்போதும் க்ளாப்ஸ் அள்ளுகிறார். வைபவ் ரோமியோ கேரக்டருக்கு ஓக்கே. அபிநயா தான் ஹீரோயின் என பில்டப் செய்திருந்தார்கள். மொத்தமே முக்கால்மணிநேரம் கூட வரவில்லை. ஆனாலும் கண்களாலேயே சிரித்து மனசை கொள்ளையடிக்கிறார். கடைசி காட்சியில் அவர் அப்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மடமடவென காஃபியை குடிக்கும்போது குடுக்கும் எக்ஸ்பிரஷன் மனதை தொடுகிறது ஈசனாக வரும் அந்தப் பையனும் ரொம்ப எதார்த்தமாக செய்திருக்கிறான்.

நாம் அன்றாடம் கடந்து போகும் சில செய்திகளின் பிண்ணனி தெரியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. படம் தொடங்கி சில காட்சிகளிலேயே ஈவ் டீசிங்கினால் இறக்கும் அந்தப் பெண், நிலத் தகராறால் கொல்லப்பட்டு கள்ளக்காதலால் கொலை என செய்தி வரும்போதும், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை என்பதன் உண்மையான பிண்ணனியும் அதிர வைக்கின்றன. அசிஸ்டெண்ட் கமிஷனரின் வசனங்களுக்கு இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து போலீஸ்காரர்கள் மேஜர் இஞ்சூரியா ஸ்பாட் அவுட்டா என்றெல்லாம் பேச மாட்டார்கள். சில இடங்களில் வசனங்களுக்கு தியேட்டரில் ரொம்ப நேரம் க்ளாப்ஸ். உதாரணத்திற்கு “அரசியல்வாதி பிஸினெஸ்மேன் ஆகலாம். பிண்னெஸ்மேன் என்னிக்குமே அரசியல்வாதியாக ஆக முடியாது”. “நான் உங்க புள்ளை இல்லையான்னு கேட்ட. நாந்தான் உங்கப்பன்னு சொல்லத் தாண்டா அடிச்சேன்”.

இசை ஏற்கனவே பார்த்துவிட்டோம். “இந்த இரவுதான் பாடலை” வேஸ்ட் பண்ணிவிட்டார்கள். மொக்கையான கொரியோகிராஃபி:( அதே சமயம் ஜில்லா விட்டு சாங் நன்றாக வந்திருக்கிறது. நல்லவேளையாக நாங்கள் படம் பார்த்த போது சுகவாசு பாட்டுக்கு கத்திரி போடப்பட்டிருந்தது. பிண்ணனி இசை சில இடங்களுக்கு சரியாக பொருந்தினாலும் பல இடங்களில் தேவையில்லாமல் டெம்ப்போவை ஏற்றிவிடுகிறது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் ஸ்பீட் தான். படம் செம்ம ஸ்லோ. சில இடங்களில் அந்தக் குறை தெரியாமல் காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலும் அந்தக் கிராமத்து திருவிழா காட்சிகள், அபிநயா கலந்துக்கொள்ளும் பார்ட்டி காட்சிகள், க்ளைமேக்ஸ் காட்சிகள் இழுஇழு என இழுக்கிறார்கள். க்ளைமேக்சும் ரொம்ப சினிமாட்டிக். இன்னும் கொஞ்சம் வேகமாக திரைக்கதை நகர்ந்திருந்தால் பெரிய ஹிட்டடித்திருக்கும் படம். இப்போவும் மோசமில்லை. பொறுமையிருப்பவர்கள் பார்க்கலாம்.

ஈசன் - தவறு செய்தவர்களை நின்று நிதானமாக கொல்கிறான்..

December 14, 2010

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: கர்நாடக சங்கீதத்தில் எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் மன்னிக்கவும்.


விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க


எச்ச

ரி

ர்ரீ



க்கா



ம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.


அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே


யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா


அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே


இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நாட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நாட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி


சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.


பி.கு : மீள்பதிவு. இன்னும் சில நாட்களில் டிசம்பர் சீசன் ஆரம்பிக்கப்போவதையொட்டி என் பங்கிற்கு:)

December 9, 2010

ஈசன் - பாடல்கள்

ஈசன்...

டைரக்டர்/நடிகர்/தயாரிப்பாளர் சசிக்குமாரின் அடுத்தப் படம். சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க என இயக்குனராய், நடிகராய், தயாரிப்பாளராய் நல்லப் படங்களைக் குடுத்த சசிகுமார் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஈசன். விக்ரம் தயாரிப்பதாய் சொன்னப் படம் பின்னர் சசிக்குமாரே டேக் ஓவர் செய்துக்கொண்டார். சமுத்திரக்கனி, அபிநயா, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கதிர். இசை ஜேம்ஸ் வசந்தன்.


மெய்யான இன்பம் இந்த போதையாலே..

பரபரப்பான சென்னை மெல்ல மெல்ல அடங்க ஆரம்பிக்கும் வேளையில் வெளியே சுற்றியிருக்கிறீர்களா? ஒரு பக்கம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் கையேந்தி பவன்கள். இன்னொரு பக்கம் ஆயிராமாயிரம் மனிதர்களை விழுங்கியிருந்தாலும் சலனமே இல்லாமல் நின்றுக்கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள். பாதி ஷட்டரை கீழிறக்கிவிட்டு வரவை எண்ணிகொண்டிருக்கும் கடைக்காரர்கள், அங்குமிங்குமாய் ஒரு சில மனிதர்களே தென்படும் கடற்கரைகள் என சென்னை இரவு நேரத்தில் அழகாய் தெரியும். சில சமயம் ஆபத்தாகவும். சென்னையின் இரவு வாழ்க்கையை அனுபவிக்கும் நண்பர்கள் பாடும் பாடல். சுக்வீந்தர் சிங், பென்னி தயாள் மற்றும் சுனந்தன் (இவர் வேறெதாவது பாடல் பாடியிருக்கிறாரா? குரல் பிரேம்ஜியைப் போலவே இருக்கிறது) பாடியிருக்கும் பாடல். நல்ல பீட்களோடு முதல் முறை கேட்கும்போதே நல்லாருக்குல்ல என எண்ண வைக்கிறது.

என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்றுப் போடு இரவிலே


அழகான வரிகள். பகல் முழுவதும் இயல்பு தொலைத்து இயங்கிக்கொண்டிருக்கும் நாம் நம்மை மீட்டெடுப்பது இரவில்தானே.

சுகவாசி சுகவாசி...

சித்ராவும் மால்குடி சுபாவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் அநேகமாக க்ளப் பாடலாக வருமென நினைக்கிறேன். சுமார் ரகமாகத் தான் தெரிகிறது. வழக்கமான க்ளப்/ஐட்டம் நம்பர். வரிகளும் ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாகத் தெரியவில்லை. இந்த மாதிரிப் பாடல்களில் நேற்று என்பது இல்லை, நாளை இனிமே தான் வரும், வாழ்வை அனுபவி போன்ற ஒரே மாதிரியான வரிகள் கடுப்பைக் கிளப்புகிறது.

ஜில்லா விட்டு ஜில்லா வந்த

ஒரு பாலியல் தொழிலாளி தன் கதையை சொல்லும் பாடல். சோகத்தைச் சுமக்கும் நாட்டுபுறப்பாடல். தஞ்சை செல்வி என்பவர் பாடியிருக்கிறார். அருமையான குரல். சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க பாடலின் மூலம் வேல்முருகன் என்ற பாடகரை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்தில் தஞ்சை செல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

உசுரல்ல நானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சி
வயிறு எங்கே கேட்டிச்சி


என்ற வரிகள் மனதை தைய்க்கின்றன.

கண்ணில் அன்பைச் சொல்வாளே..

அழகான மெலடியாக வந்திருக்க வேண்டிய பாட்டு. காதலியைத் தாயாய் நினைத்து உருகும் பாட்டு. என்னவோ மிஸ்ஸிங் என்ற நினைப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பாட்டில். என்ன எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிலருக்குப் பிடிக்கலாம்;)

Get Ready to rock

சுப்ரமணியபுரத்தில் படத்தில் வராமல் ஒரு பாடலிருக்கும் “தேநீரில் சிநேகிதம்” என. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பென்னி தயாள் பாடியிருக்கும் பாடல். பெரிதாய் ஈர்க்கவில்லை. மோசமுமில்லை. ஒரு வேளை படத்துடன் பார்க்கும்போது பிடிக்குமோ என்னவோ.

ட்ரைலர்..

December 7, 2010

துணுக்ஸ் 07-12-2010

சமீபகாலமாக பதிவுகலில் என் நடமாட்டம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. காரணம். பஸ். பஸ் ஓட்றதுல அதில நேரம் செலவிடறதனால பதிவுகள் எழுத முடியறதில்ல (அப்படியே எழுதிட்டாலும்). நிறைய கதைகள்???!!!! அரையும்குறையுமா எழுதி வச்சிருக்கேன் (நீ முழுசா எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்ங்கறீங்களா?). சீக்கிரமே பட்டி டிங்கரிங் வேலைப் பார்த்து பதிவேத்தனும். இன்னும் கொஞ்ச நாட்களில் முன்போல் பதிவுலகில் இயங்க முயற்சிக்கிறேன்.
*************

இரண்டுப் பிரபல பதிவர்கள் என்னை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்கூல்/காலேஜ் காலத்திலேயே படிச்சதில்ல. ஒரு பிரபல வளரும் இலக்கியவாதி புக் பேரெல்லாம் சொல்லி, படிங்க நல்லாருக்கும். படைப்புகளை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்பங்கன்னு சொல்றாங்க (அங்க அனுப்பிச்சு அவங்க காறித்துப்பி என்னை அசிங்கப்படுத்தறதப் பார்க்கிறதுல அம்மிணிக்கு அம்புட்டு சந்தோசம்). இன்னொரு பிரபலம் இப்போல்லாம் பதிவே எழுதறதில்ல. பஸ்லயே சுத்திக்கிட்டிருக்காங்க. அவங்க என்னாடான்னா ஒரு படுபயங்கரமான எழுத்தாளர் பேர சொல்லி அவர் எழுதின புத்தகத்தை வீட்டுக்கே வந்து கொடுக்கிறேன்னு கொலை மிரட்டல் விடறாங்க. என்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பது தெரிந்தும் இப்படி ஒரு பாதகச் செயலை செய்யத் துணிந்த அந்தப் பதிவர் மீது மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய நிபுணர்களிடம் ஆலோசனை செய்துக்கொண்டிருக்கிறேன். ராஜி பீ கேர்ஃபுல்.
************

தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான கோதாவுல நானும் குதிச்சிருக்கேன். கீழ்கண்ட இடுகைகளை விருதுக்கு என் சார்பா பரிந்துரைத்திருக்கிறேன். அப்படியே நீங்களும் உங்க பொன்னான வாக்குகளை அள்ளித் தெளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வலியின் மொழி
செக்கர் வானம்
மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்
*****************

சென்ற சனிக்கிழமையிலிருந்து மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. நசநசன்னு மழை. ரோடுகள் கேக்கவே வேணாம். பெசண்ட் நகர் வண்ணாந்துறை ரோடு நல்ல காலத்திலேயே குண்டும் குழியுமாய் பல்லிளிக்கும். இப்போ கேக்கவே வேணாம். மழைநீர் தேங்கி எங்கு பள்ளமிருக்குன்னு தெரியவே மாட்டேங்குது. டெட் ஸ்லோ/இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு போவது உத்தமம். பாண்டிச்சேரியிலும் சரியான மழையாம். ரெயின்போ நகர் என்ற ஏரியா மிதக்கிறது என்கிறார்கள். சென்ற மழைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் தந்தார்களாம். அதெப்படி மத்தவங்களுக்கு தராம விடலாம்ன்னு மத்தவங்க மறியெலெல்லாம் பண்ணிருக்காங்க. அதனால இந்த தடவை ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தருகிறார்களாம். இதற்குப் பதிலாக வெயில் காலத்திலேயே நீர் நிலைகளை சரியாக தூர் வாரி, கால்வாய்களின் அடைப்பு நீக்கி, சரியான வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தால் இந்தளவு பொருட்செலவு ஏற்பட்டிருக்காது. அது சரி கொள்ளை அடிக்கறதுல கொஞ்சம் பொதுமக்களுக்கும் கொடுத்து ஓரளவு புண்ணியம் தேடிக்கிறாங்க போல. இது சம்பந்தமா நான் முன்னமே எழுதியிருந்த (உருப்படியான ஒரே) பதிவு.
*****************

ரங்ஸுடன் வண்டியில் சென்றுக்கொண்டிருக்கும்போது நடந்த உரையாடல்

“வித்யா, ரோடெல்லாம் பள்ளமும் மேடுமா இருக்குன்னு சொல்றாங்க சரி. அதென்ன குண்டும் குழியுமா?”

“மொதல்ல ஒழுங்கா வண்டிய ஓட்டு. சில்லறை பொறுக்க வைக்காத. கேள்வியெல்லாம் அப்புறம் கேக்கலாம்”

“தெரியாதுன்னா சொல்லிடு. சும்மா இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம்.”

”எனக்கா தெரியாதா. குழின்னா பள்ளம். குண்டுன்னா வீங்கினாப்புல இருக்கிறது. அதாவது மேடா இருக்கிறது. அதான் அப்படி சொல்றாங்க”

“அப்படியிருக்காது. குன்றும் குழியுமா இருக்குங்கறதுதான் இப்படி சேஞ்ச் ஆயிருச்சின்னு நினைக்கிறேன்.”

“ஹைய்யோ. எப்படிப்பா இப்படியெல்லாம்? தமிழ் எழுத்துக்கூட்டி படிக்கவே கஷ்டப்படுவியே. சூப்பரான எக்ஸ்ப்ளனேஷன். பேசாம நீ கூட ப்லாக் எழுதலாம்”

“ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது”

மீ தி ஙே!!!

December 3, 2010

பெசண்ட் நகரில் கடற்கொள்ளையன்

நீண்ட தொப்பி, அழுக்கான உடை, கருப்பு கோட், மண்டை ஓடு பொறித்த கிழிந்த/நைந்த கொடி, வாள் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும் கடற்கொள்ளையர்களை விவரிக்க சொன்னால். கடறகொள்ளையனில்லாத கடலா? பெசண்ட் நகரிலும் ஒரு கடற்கொள்ளையன் இருக்கிறான். கடலில்லை. கடற்கரையில்:)

Once Upon a Pirate. பெசண்ட் நகரிலிருக்கும் இந்தியன், சைனீஸ், தந்தூர் (நல்ல வேளை காண்டினெண்டல்ன்னு போர்ட் போட்டு ப்ரெட் பட்டர் ஜாம் பரிமாறல)உணவுகளைப் பரிமாறும் உணவகம். பிஸ்டல்ஸ், ரம் பாட்டில், ட்ரெஷர் பாக்ஸ், கை விலங்குகள், நங்கூரம், சிம்னி விளக்குகள், கிளி் பொம்மைகள் என தீம் அட்டகாசமாய் இருக்கிறது. Above all வெயிட்டர்களின் ட்ரெஸ் கோட் பைரட்களைப் போலவே.



இரண்டு முறை சென்றதின் ரெவ்யூ. அட்டகாசமான மெனு. வெஜிடேரியனிலும் நிறைய ஆப்ஷன்ஸ் இருப்பது ப்ளஸ். வெஜ் வாங்டன் (Wontons) க்ளியர் சூப்பும், ஸ்ப்ரிங் ரோலும் ஆர்டர் செய்தோம். ரெண்டுமே அட்டகாசம். அதுவும் சூப்பில் நிறைய காய்கறிகள் (Crunchy and yummy). ஸ்ப்ரிங் ரோல்ஸும் எண்ணைய் அதிகமில்லாமல் போர்ஷனும் பெரிதாக இருந்தது. இரண்டாம் முறை சென்றபோது Hot & Sour soup, crispy fried vegetables, fried wontons, paneer tikka சாப்பிட்டோம். சூப்பும், க்ரிச்பி ஃப்ரைட் வெஜிடபிள்ஸும் ஆவரேஜ். மற்றவை எல்லாம் குட்.


மெயின் கோர்ஸிற்கு கார்லிக் நான், பட்டர் நான், Thai Fried rice, Punjabi Subji Makhanwale ஆர்டர் செய்தோம். ரைஸ் ஆவரேஜ் தான். மற்ற அனைத்துமே நன்றாக இருந்தது. இரண்டாம் முறை ரைஸைத் தவிர்த்துவிட்டு கார்லிக் நான், தந்தூரி ரொட்டி, கட்டக் ரொட்டி (நல்ல க்ரிஸ்பியாக, அப்பளத்துக்கும் ரொட்டிக்கும் இடையேயான கன்சிஸ்டென்சியில் நன்றாக இருந்தது), chow mein நூடுல்ஸ், வெஜிடபிள் சாஃப்ட் நூடுல்ஸ், thai fried நூடுல்ஸ், ஸ்டஃப்டு கேப்சிகம் க்ரேவி, புத்தாஸ் வெஜிடபிள்ஸ் ஆகியவை ஆர்டர் செய்தோம். Quantity & டேஸ்ட் நன்றாக இருந்தது.


Neat dessert menu. ஒவ்வொரு டெசர்ட்டுக்கும் பைரட் லேங்குவேஜில்??!! ஒரு பெயர். நாங்கள் Date pancake, Fried icecream மற்றும் chocolate souffle சாப்பிட்டோம். Fried icecream சுமார் ரகம் தான். Outer layer ரொம்ப திக்காக இருந்தது (இதுவரையில் நான் சாப்பிட்ட நான்கைந்து இடங்களில் Cascade மட்டுமே நல்ல fried icecream சர்வ் செய்கிறார்கள்). மற்றவை சூப்பர்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Once Upon a Pirate
உணவு/Cuisine - Veg/Non-veg Indian and chinese. பஃபே உண்டு.
இடம் - எல்லியட்ஸ் பீச் ரோட், பெசண்ட் நகர். முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில்.
டப்பு - 700 + taxes (Complete வெஜ் மீல் 2.5 பேருக்கு. ஹி ஹி ஜூனியரையும் சேர்த்து)

பரிந்துரை : கண்டிப்பாக செல்லலாம். வித்யாசமான தீம். சுவையான உணவு. After all this pirate does not loot ur purse;)