September 26, 2011

சைக்கிள் முனி - என் பார்வையில்

இரா.முருகனின் சைக்கிள் முனி சிறுகதை தொகுப்பு.

தொகுப்பின் முதல் கதை சாயம். இதைக் கதை என்று சொல்வதைவிட ஒரு காட்சி விவரிப்பு என்று சொல்லலாம். கதை சொல்லி/காட்சியை விவரிப்பவருக்கு நிறைய கேள்விகள் எழுகிறது. சில கேள்விகளுக்கான பதிலை அவரே சொல்கிறார். மீதி கேள்விகள், பதிலில்லாமல் கேள்விகளாகவே இருக்கின்றன. மூன்று பக்கம் தாண்டியவுடனே ”ஆஹா மற்றுமொரு பி.ந.கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ? முதலுக்கு மோசமாகிவிடுமோ” என்ற பயம் வந்துவிட்டது எனக்கு. நல்லவேளையாக அப்படி எதுவுமில்லை:D

சில்லு அறிவியல் புனைகதை. பிறப்பை பதிவு செய்யும்போது தவறு நடக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பங்கள் கதை. ஒன்லைனராக நன்றாக இருக்கிறது. அநியாயத்துக்கு நீளம். வேகமும் குறைவு. மனதில் ஒட்ட மறுக்கிறது. (ஒப்பிடுதல் தவறுதானென்றாலும், இந்த மாதிரி ஏரியால வாத்தியார் நின்னு ஆடுவார்).

சைக்கிள் முனி என்ற கதையில் பாலன் என்ற சிறுவனுடன் முனி பேசுகிறது. உயிருடன் குழிக்குள் புதைக்கப்பட்டவரும் பேசுகிறார். நம்பகத்தன்மை சுத்தமாக இல்லை. பாலனின் வறுமையான குடும்பச்சூழல் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவனின் அக்கா எழுதும் கடிதம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. இதே போன்று தெய்வம் பேசும், அலுத்துக்கொள்ளும் இன்னொரு கதை தரிசனக் கதை. தெய்வத்தை முன்னிறுத்தி, மனதிற்கு தோன்றியதையெல்லாம் சோழி உருட்டி குறிகளாக சொல்லும் பூசாரி கதாபாத்திரம் ஈர்க்கிறது.

கருணை இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வாழ்ந்து, இறக்கப் போகும் ஒருத்தனின் இறுதி நேரங்கள். ஆண்களின் சந்தேக புத்தியையும், குறுகிய மனப்பான்மையையும் தொட்டுச் செல்கிறது. ஆரம்பத்தில் ரவியின் கதாபாத்திரம், பரிதாபத்தை ஏற்படுத்த தவறுவதால், முடிவில் பெரிய அதிர்ச்சியொன்று ஏற்படவில்லை.

தொகுப்பிலேயே சிறந்தக் கதை எதுவென்றால், முக்காலியைத்தான் சொல்வேன். பாங்காக்கில் குப்பைக் கொண்டிருக்கும் சாஃப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஆசாமி, தன் மேலதிகாரிக்கும், அவரின் உறவினர்களுக்கும் போடும் கூழைகும்பிடுகள் தான் கதை. ஒவ்வொரு வரியிலும் வலிக்க வலிக்க சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

தொகுப்பிலேயே மிக மோசமான கதை என்றால் அது ஒண்டுக்குடித்தனம் தான். பேச்சிலரான சரவணனும், அவனுடன் நட்பு பாராட்டும் பேய்களும் தான் கதை மாந்தர்கள். நகைச்சுவையோ, ஆழ்ந்த விவரிப்போ இல்லாமல் மேம்போக்காக போகிறபோக்கில் எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.

சிறுவயதில் மலையாளம் கற்றுக்கொள்ள முற்பட்டதை நகைச்சுவையோடு சொல்லுகிறது பாருக்குட்டி. ”அவன் சாயா குடிச்சு. அவள் பரிப்பு வடை தின்னு” என்று டீக்கடை சமாச்சாரங்களையே பாடாமாக்கி எங்களை எழுதச் சொல்லிவிட்டு, ‘பொடி மோளே’ என்று கூப்பிட தடி மோளான பாரு பொரிகடலை வாயோடு வெளியே வருவாள். இதுபோன்று குபீர் சிரிப்பை வரவழைக்கும் வர்ணனைகளோடு போகும் கதையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் ரகம்.

வாத்தியார் வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொல்கிறது. மூடநம்பிக்கைகளையும், எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளை, தங்களுக்கு சாதகமாக்கிகொள்ளும் மக்களின் மனோபாவங்களை எள்ளலோடு சொல்லும் கதை.

வாயு குறுநாவல். அதிர்ச்சியளிக்கும்/முகம்சுளிக்க வைக்கும்/(சோ கால்ட் கலாசாரத்தினால்) பிறருடன் பேசத்தயங்கும் விஷயங்களை சர்வசாதரணமாக எழுதிச் சென்றிருக்கிறார் ஆசிரியர். குசு விடும் போட்டி, அதையொற்றி நகைச்சுவைக்காக எழுதப்பட்ட சில வரிகள் என ஆங்கில கலாசாரத்தையொட்டி எழுதப்பட்ட கதை. ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்தது போலிருக்கிறது. தமிழில் படிக்கிற உணர்வே இல்லை. உதாரணத்திற்கு கதையில் ஒரு கதாபாத்திரம் “புனித மலம்” எனக் கத்துகிறது. மொழிப்பெயர்க்கப்பட்ட கதையில் கூட இப்படி நேரடி தமிழாக்கம் செய்வார்கள் என்று தோணவில்லை. அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.

முதன்முறையாக இரா.முருகனின் எழுத்துக்களை வாசிக்கிறேன். தொகுப்பில் பொதுத்தன்மை நகைச்சுவை மட்டுமே. மற்றபடி சிறுகதை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களன்/பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் தலைக்கு சாயம் பூசிக்கொள்ள வந்தவன் இறந்து போவதைப் படித்துவிட்டு பக்கங்களை புரட்டினால் ஏதோவொரு கிராமத்தில் முனி பேசுகிறது. ஹுயுமனாய்ட்கள் வேலை செய்து முடித்தவுடன், பங்காரம்மா கழுநீர் கொண்டு செல்ல வருகிறாள். இந்த அதீத வேறுபாடுகள் படிக்கும்போது அயற்சியேற்படுத்தவில்லையென்றாலும், ஒருமாதிரியான சலிப்பைத் தருகிறது. விவரணைகள் சவசவ என்றில்லாமல், சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிப்போவது ஒரு பெரிய ஆறுதல். யதார்த்தை மீறிய கதைகள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. இயல்பாய், நம்பகத்தன்மையுடன் இருக்கும் கதைகள் (முக்காலி, பாருக்குட்டி) அதிகம் கவனம் ஈர்க்கின்றன.

சைக்கிள் முனி
இரா.முருகன்
கிழக்கு பதிப்பகம்

September 15, 2011

கைதிகள்

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதுமே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தான். ஒருமணிநேரம் கஷ்டப்பட்டது வீணாகப் போய்விடுமோ என்ற கவலையோடு அம்மா குழந்தையை தட்டிகொடுக்க ஆரம்பித்தாள். விரித்துப் போட்டிருந்த முடியை அள்ளி முடிந்துக்கொண்டு கதவை திறந்தேன். வெளியே நின்றவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு நல்லாருக்கீங்களாம்மா என்று கேட்டார். மையமாய் தலையாட்டிவிட்டு என்ன கேட்பது எனத் தெரியாமல் நின்றேன். அவரே தொடர்ந்தார்.

“அய்யா இருக்காங்களா?”

“குளிச்சிட்டிருக்காங்க. நீங்க??”

“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”

“ஓ. உள்ள வாங்க”

“பரவால்லம்மா. அய்யா வரட்டும்”

“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.

வாங்க ராஜன்.

அய்யா தொந்தரவு பண்ணிட்டேனா.

அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா?

இது ஒத்து வருமா பாருங்கய்யா.

(சிறிது நேர அமைதிக்குப் பின்)

இந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.

ஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா? எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.

அப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.

முடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும்? கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.

நியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.

அம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.

இப்பதான் வர்றியா?

ஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.

சாப்ட்டியா?

இல்ல.

தாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா?” என்றேன்.

அதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி?

இல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க?

ஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.

வெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.

“ஆர்டர் கொடுத்தாச்சா அவருக்கு?”

“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.

“யாருப்பா? காலைல வந்தாரே அவரா? என்னாச்சு?”

“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்‌ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”

“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா? அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா?”

“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”

அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற?” என்றேன். மறுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.

“நீ உடனே கிளம்பி வா”

“Is everything alrite? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”

“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”

“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா?”

“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”

அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.

அதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.

“என்ன ஆச்சு? இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க? உடம்புக்கு முடியலையா? ஹாஸ்பிட்டல் போவோமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.”

“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”

“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”

“வாட்?”

“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”

“ஸ்டாப் ஜோக்கிங்.”

“Do u think i am? bloody hell"

"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன ஆச்சு?”

“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me? இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.

நன்றி அதீதம்