Showing posts with label எண்டபி தொடர். Show all posts
Showing posts with label எண்டபி தொடர். Show all posts

March 12, 2010

ஆப்ரேஷன் எண்டபி - 2

இஸ்ரேலியர்களை/யூதர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்குமிடங்களிலெல்லாம் தவறாது இருக்கும் குறிப்பு 'The most intelligent race'. யூதர்கள் அறிவாளிகள், தந்திரமானவர்கள், குயுக்திக்குப் பேர் பெற்றவர்கள் என பல விஷயங்கள் அவர்களைப் பற்றி. அப்படிப்பட்டவர்கள் தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டுமென்ற பாலஸ்தீனியர்களின் கோரிக்கையை ஏற்பார்களா? 48 மணி நேரம் அவகாசத்தை நீட்டிக்கச் செய்தது அதிரடியாய் களமிறங்கி பயணக்கைதிகளை மீட்பதற்கு தான். இஸ்ரேல் ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் டான் ஷார்மன் ஒரு திட்டத்தை முன்வைத்தார். என்ன திட்டமெனில், ஒருத்தனையும் ரிலீஸ் பண்ண வேண்டாம். வீடு புகுந்து அடிப்போம் என்றார்.
ஏதன்ஸ் - எண்டபி - விமானக் கடத்தப்பட்ட பாதை
இதற்கிடையில் எண்டபியில் தீவிரவாதிகள் குத்துமதிப்பாக ஒரு சர்வே நடத்தினார்கள். யூதர்கள் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க முன்வந்தாரகள். அதன்படி 105 யூதப் பயணிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிட்டார்கள். விமானத்தின் கேப்டன் மைக்கேல் பேகோஸ் 'இங்கு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் யூத பயணிகளின் உயிருக்கு என் குழு தான் பொறுப்பு. அவர்களில்லாமல் விமான ஊழியர்கள் குழு செல்லாது' என மறுப்புத் தெரிவித்து போக மறுத்தார். அவருடன் மீதமிருந்த பதினோரு விமான ஊழியர்களும் எண்டபி விமானநிலையத்திலேயே தங்கிவிட்டனர். யூதர்கள் அல்லாத பயணிகளை விடுவித்ததன் மூலம் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் வெற்றிக்கு மறைமுகமாக உதவ வழிவகுத்திவிட்டனர்.

மீண்டும் இஸ்ரேலுக்கு வருவோம். மளமளவென்று வேலைகளைப் பார்த்தார்கள். இஸ்ரேலின் உளவுத்துறையான, உலகிலேயே மிகச்சிறந்த உளவுத்துறை என குறிப்பிடப்படும் மொஸாட்-ன் அறிவுறுத்தல் படி, இஸ்ரேல் ராணுவத்தின் சிறப்பு பிரிவான செய்யட் மட்கல் (Sayeret Matkal) வீரர்கள் கமாண்டர் யோனடன் நேடன்யாஹு தலைமையில் பயணிகளை மீட்க தயாரானார்கள். இந்த மீட்பு நடவடிக்கைக்காகவே நான்கு C-130 வகையைச் சார்ந்த ஹெர்குலஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. விமானம் தரையிறங்குமிடத்திலிருந்து பிணைக்கைதிகளை அடைத்து வைத்திருக்கும் அறை வரை பிரச்சனையின்றி செல்ல உகாண்டா அதிபர் உபயோகிப்பது போன்ற மெர்சிடிஸ் கார் மற்றும் லேண்ட் ரோவர் கார் ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டது. மருத்துவ உதவிக்கான பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன் ஒரு போயிங் 707 விமானமும் தயாரானது.
C-130 ஹெர்குலஸ் ரக விமானம்
எந்த அடிப்படையில் இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த தாக்குதலுக்கு தயாரானார்கள்?

1. உகாண்டாவில் நிறைய இஸ்ரேலியர்கள் இருந்ததாக நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். அங்கு பிழைப்புக்கு என்ன செய்தார்கள்? இஸ்ரேலியர்கள் தாம் உகாண்டாவின் பெரும்பான கட்டிடங்களை உருவாக்கியவர்கள். எண்டபி விமான நிலையத்தை கட்டுவித்ததும் ஒரு இஸ்ரேல் நிறுவனம் தான். சோலேல் போன் (Solel Boneh) என்ற அந்த நிறுவனத்திடமிருந்து எண்டபி விமான நிலையத்தின் வரைபடம் பெறப்பட்டது.

2. ஏற்கனவே கடத்தல்காரர்கள் விடுவித்த பயணிகளிடமிருந்து, கடத்தல்காரர்களின் அடையாளம், பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையின் அமைப்பு, அவர்கள் வைத்திருந்த ஆயுதம் போன்ற தகவல்கள் பெறப்பட்டன.

3. மிக முக்கியமான நம்பிக்கை. யாருமே நினைத்துப் பார்க்க மாட்டார்கள் இஸ்ரேல் இப்படியொரு அதிரடி நடவடிக்கையில் இறங்குமென்று. அந்த நம்பிக்கைத் தான் இஸ்ரேல் ராணுவத்திற்கு பெரிய துணையாக இருந்தது. நினைத்துப் பார்க்காத விஷயத்தை நடத்தி எதிரியை நிலைகுலையச் செய்வது.
மீட்பு நடவடிக்கையின் மாதிரி
ஜூலை 3 பிற்பகல் 1.20 மணிக்கு விமானங்கள் பயணத்தை துவக்கின. எகிப்து, சூடான், சௌதி அரேபிய நாடுகளின் ரேடார்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு விமானங்கள் எண்டபியை அடைந்தபோது மணி இரவு பதினொன்று. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரே ஒரு நிமிடம் அதிகமானது. தரையிறங்கும் போதே கார்கோவின் கதவுகள் திறக்கப்பட்டன. துரிதகதியில் கார்களும், ஆயுதங்களும் இறக்கப்பட்டன். மொத்தம் 29 வீரர்கள். கமாண்டர் நேடன்யாஹு தலைமையில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

1. ஏரியாவை கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும்.
2. நம் விமானங்களை நோக்கி எதிரிகள் முன்னேறாமல் பாதுகாக்க வேண்டும்.
3. அதிரடியாய் களமிறங்கி பயணிகளை மீட்க வேண்டும்.
4. பயணிகளை பத்திரமாக விமானத்திற்கு கொண்டு வர வேண்டும்.
5. சுபம். கிளம்பிவிடலாம்.

விமானத்திலிருந்து இறக்கப்பட்ட மெர்சிடிஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்களில் ஏறிக்கொண்ட வீரர்கள் டெர்மினலை நோக்கி பயணித்தார்கள். அவர்கள் கணக்குப்படி இடி அமினீன் கார் என உகாண்டா வீரர்கள் தடுக்க மாட்டார்கள் என நினைத்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இடி அமின் சில தினங்களுக்கு முன்னர் தான் வெள்ளை நிற மெர்சிடிசுக்கு மாறியிருந்தார். கருப்பு நிற மெர்சிடிஸில் வருவது யாரென தெரிந்துகொள்ள இரு காவலர்கள் வண்டியை நிறுத்த முயற்சித்தார்கள். அவர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கமாண்டோக்கள், நொடியும் தாமதிக்காது டெர்மினலை நோக்கி முன்னேறினார்கள். அப்படி செல்கையில் தலைமேயேற்ற வீரர் நோடன்யாஹு கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து சுடப்பட்டு இறந்தார். இந்த ஆப்ரேஷனில் இறந்த ஒரே இஸ்ரேலிய வீரர். அவர் நினைவாக ஆப்ரேஷன் நேடன்யாஹு என்றும் அழைக்கப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்த ஒரே இஸ்ரேலிய வீரர் நேடன்யாஹு
டெர்மினலுக்குள் நுழைந்துகொண்டே "யாரும் எழுந்திருக்காதீர்கள். நாங்கள் இஸ்ரேலிய வீரர்கள்." எனக் கத்தினார்கள். விடுதலையாகப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் எழுந்து நின்ற ஒரு பயணியை தீவிரவாதி என நினைத்து சுட்டனர். மளமளவென்று தீவிரவாதிகளை வீழ்த்திய பின் பயணிகளை மீட்டு விமானங்களில் ஏற்றினர். ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டுமென திட்டமிட்ட தாக்குதல் 58 நிமிடங்களில் முடிந்தது. அதில் எட்டு தீவிரவாதிகளை வீழ்த்த ஆன நேரம் வெறும் முப்பது நிமிடங்கள். ஒரே ஒரு வீரர், மூன்று பயணிகளை பலிகொடுத்து. போகும்போது சும்மா போக வேண்டாமென நினைத்த இஸ்ரேல் வீரர்கள், உகாண்டாவின் மிக் 17 ரக போர் விமானங்களை (புறப்பட்ட பின் வானில் இடையூறு செய்யாமலிருக்க) காலி செய்துவிட்டுச் சென்றனர். கிட்டத்தட்ட பதினேழு விமானங்களுடன் 45 உகாண்டா வீரர்கள் உயிரை விட்டார்கள்.

உலகம் முழுவதும் இஸ்ரேலின் இந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை பல்வேறு வகையாக விமர்சிக்கப்பட்டது. அவமானத்தில் இடி அமின் துடித்தார். மூன்று வருடங்கள் கழித்து ஆட்சி பறிக்கப்பட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களும், சினிமாக்களும் வந்தன. வரலாற்றின் பக்கங்களில் அதிரடி நடவடிக்கைக்காக நிரந்தர இடம் பெற்றது இந்தச் சம்பவம்.

பின்னிணைப்பு

இடி அமின் - ச.ந.கண்ணன்.
http://www.jewishvirtuallibrary.org/jsource/Terrorism/entebbe.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.operationentebbe.com/

www.military-today.com/aircraft/c130_hercules.jpg
http://newsimg.bbc.co.uk/media/images/41795000/gif/_41795388_entebbe_airport3_416.gif

March 10, 2010

ஆப்ரேஷன் எண்டபி - 1

அப்பா, அம்மா, தம்பி என குடும்பமாக அமர்ந்து மதிய உணவோ, மாலை டீயோ குடிக்கும் வாய்ப்பு அபூர்வமாய் கிடைக்கும். அப்படி கிடைக்கும் தருணங்களின் போது அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, உலக நிகழ்வுகள் என பலவற்றை அப்பாவுடன் விவாதிப்போம். அப்படி ஒரு தடவை விமானக் கடத்தல் பற்றி பேச்செழுந்தபோது அப்பா விவரித்த ஒரு விமானக் கடத்தலும், அதிரடி மீட்பு நடவடிக்கையும் சுவாரஸ்யமாக பட்டதால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1976 ஆம் வருடம் ஜூன் 27 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு டெல் அவிவிலிருந்து(இஸ்ரேல்) பாரீஸை நோக்கிச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமான பயணிகள் என்ன நினைத்து விமானத்தில் ஏறியிருப்பார்கள்? நம்மூர் ஆட்கள் என்றால் ஏர் இந்தியா விமானத்தில் சௌகார் ஜானகி போன்ற ஏர் ஹோஸ்டஸ் கொண்டு வரும் உணவிற்காக காத்திருந்திருப்போம். அப்படியிருக்கையில் ஒரு நாலு தடிமாடுகள் எழுந்து நின்று 'பெரியோர்களே தாய்மார்களே. தடங்கலுக்கு மன்னிக்கவும். தவிர்க்க இயலாத காரணத்தினால் இந்த விமானத்தை நாங்க கடத்தறோம்'னு கைல துப்பாகிய வச்சுகிட்டு சொன்னா எப்படியிருக்கும்? அதுபோன்ற மனநிலையில் தான் ஏர்பஸ்-300 விமான பயணிகளும் இருந்தார்கள். 248 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 260 பேர்.

பாலஸ்தீன விடுதலை முன்னணியைச் சேர்ந்த (Popular Front for the Liberation of Palestine) இரு பாலஸ்தீனியர்களும், ஜெர்மனின் புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த (Revolutionary Cellz) இருவரும் சேர்ந்து விமானத்தைக் கடத்திக் கொண்டுபோவதாக அறிவித்தார்கள். பாரீஸ் நகரிற்கு செல்ல வேண்டிய விமானம், லிபியாவின் பென்சகி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தக் களேபரங்களால் மயக்கமடைந்து உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் ஒருவரை லிபியாவில் இறக்கிவிட்டு, விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்ட விமானம் தரையிறங்கியது உகாண்டா நாட்டின் எண்டபி விமான நிலையத்தில்.

ஏதன்ஸ்லருந்து கடத்திக்கிட்டு வேற எங்கயும் கொண்டு போகாம ஏன் உகாண்டாவுக்கு வந்தாங்கன்னு ஒரு கேள்வி வருதா? அப்போ உகாண்டாவின் சர்வாதிகாரியா இருந்த இடி அமின் இஸ்ரேலுக்கு பகிரங்கமா எதிர்ப்பு தெரிவிச்சிக்கிட்டிருந்தார். எதிரிக்கு எதிரி நண்பனில்லையா. அதான் அங்கன கொண்டு போனாங்க. எண்டபில தரையிறங்கிய விமானத்தைப் பற்றின செய்தி இடி அமினுக்கு போன உடனே சார்வாள் ரொம்ப குஷியாகிட்டார். ஏன்னு இங்கயும் ஒரு கேள்வி வருதா. அது ஒரு பெரிய கதை. நம்ம கதையின் கருவை மட்டும் பார்த்துட்டு விமானத்துக்கு வருவோம். உகாண்டாவுல இடி அமின் பண்ணாத அட்டகாசமில்ல. அழிச்சாட்டியம் பண்ணவும் டப்பு வேணும்ல? அதான் இஸ்ரேல்கிட்ட இராணுவத்த பலப்படுத்தனும், ஆயுதங்கள் வாங்கனும் காசு கொடுன்னு அவங்க நாட்டுக்குப் போய் கேட்டாரு. மொள்ளமாரி, முடிச்சவுக்கி, கேப்மாரி என பல மாரித்தனங்களின் மொத்த உருவமும் நல்ல காரியம் பண்ணனும் காசு கொடுன்னு கேட்டா தூக்கி கொடுக்க இஸ்ரேலுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. 'அதெல்லாம் நயா பைசா பேறாது. போ'ன்னு துரத்தி விட்டுட்டாங்க. வந்ததே அமினுக்கு கோவம். நாட்டுக்கு திரும்பி வந்தவுடனே 'இஸ்ரேல்காரன் ஒருத்தன் என் எல்லைக்குள்ள இருக்கக்கூடாது. கெட் அவுட் ஐ ஸே'ன்னுட்டாரு. அதோட கோவம் அடங்கல. எதாச்சும் பண்ணி இவனுங்களுக்கு ஆட்டம் காட்டனுமேன்னு கருவிட்டிருந்தவருக்கு வயித்துல பால வார்த்த மாதிரி இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) அதிகமிருந்த விமானத்த தூக்கியாந்து இங்கன நிறுத்தினாங்க தீவிரவாதிங்க.

இப்ப திரும்பவும் எண்டபி விமானநிலையத்திலிருக்கும் கடத்தப்பட்ட விமானத்திற்கு வருவோம். தீவிரவாதிங்கன்னாலே கோரிக்கை இல்லாம கடத்தமாட்டாங்க தானே. அவங்களுக்கும் தொழில் தர்மம்ன்னு ஒன்னு இருக்குல்ல. அவுங்களோட கோரிக்கை என்னன்னா இஸ்ரேல், கென்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறை பிடிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட சுமார் 53 பாலஸ்தீனியர்களை (பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள்) எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கனும் என்பது தான். அவ்வாறு செய்யத் தவறினால் ஜுலை 1 முதல் ஒவ்வொரு பயணியாக கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்கள்.

இஸ்ரேலின் உயர் அதிகாரிகள் ஒன்று கூடி விவாதிக்க ஆரம்பித்தார்கள். '53 பேர விடுவிக்கறது இயலாத காரியம். அதே சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுக்கிறது மகா பாவம். என்ன செய்யலாம்?'னு மண்டைய பிச்சிக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் கால அவகாசம் கேட்போம். அதுக்குள்ள என்ன பண்ண முடியும்ன்னு யோசிப்போம்ன்னு தீவிரவாதிங்க கிட்ட கெடுவை ஜூலை 4 வரை நீட்டிக்க சொன்னாங்க. இடி அமினும் 'யப்பா நானும் மொரிஷியஸ் வர போவேண்டிய வேலை இருக்கு. நான் இல்லாத போது எதுவும் செய்ய வேணாம். பேசாம கெடுவ ஜூலை 4 வரை எக்ஸ்டண்ட் பண்ணுங்க. நானும் ஒரு எட்டு மொரிஷியஸ் போய்ட்டு வந்துடறேன்'னு சொல்லி தீவிராவதிங்களுக்கு சப்போர்ட்ட தன் ராணுவ வீரர்கள விட்டுட்டு போனாரு.

இஸ்ரேல் என்ன முடிவெடுத்தாங்க? பயணிகளின் கதி? அடுத்த பதிவில்..