March 7, 2012

நினைவெல்லாம் நிவேதா - 7

”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா?” என்றான் கணேஷ்.

“நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணிருக்காங்க.” என்றவாரே ஒரு ஃபைலை கணேஷிடம் நீட்டினான் வசந்த். ”ரிசப்ஷன்ல வழக்கம்போல் எந்த டீடெய்லும் கொடுக்கமாட்டேன்னுட்டாங்க. ஒரு வழியா என்னோட ஸ்டைல்ல. எல்லா தகவலையும் கறந்துட்டு வந்துட்டேன்.”

கணேஷ் மௌனமாக அந்த ஃபைலைப் புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து “எப்படி வாங்கினேன் கேக்கமாட்டீங்களா பாஸ்?” என்றான் வசந்த்.

”இதுக்கூட தெரியாமலா வசந்த் இருப்பேன். ரிசப்ஷனிஸ்ட் பேர் என்ன?”.

“ப்ரியா பாஸ். நீங்க சொல்லாம நான் செஞ்ச இன்னொரு வேலையக் கேட்டீங்கன்னா அசந்துருவீங்க”.

“அப்படி என்னடா வேலை?”

“இந்த ஃபைல்ல இருக்கிறதெல்லாம் நிவேதாவிற்கு டிப்ரெஷெனுக்காக டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள். இதில் வேடிக்கை என்னன்னா, இந்த மருந்து எதுவுமே வியாதிய குணப்படுத்தாது." ஆச்சர்யமாய் நிமிர்ந்த கணேஷைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே “டாக்டர் பேர் ஸ்வாதி” என்றான் வசந்த்.

”ஓஹ். ஜெயராமன் நான் நினைச்சத விட பயங்கரமான வேலை பண்ணிருப்பார் போலயே? சரி நீ தெரிஞ்சுகிட்டு வந்ததையெல்லாம் ஒரேடியா கொட்டிடு பார்ப்போம்” என்றான் கணேஷ்.

“இல்ல பாஸ். முதல்ல நீங்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்.”

“ஆல்ரைட். முதல் நாளிலிருந்தே எனக்கு ஜெயராமனோட நடவடிக்கைகளில் சந்தேகம். அந்தாளு நம்மள தேடி வந்தது மொத தப்பு. நிவேதா நம்மகிட்ட என்ன சொல்லியிருந்தா, இவருக்கென்ன? நேரா போலீஸ் கம்ப்ளையிண்ட் லாட்ஜ் பண்ண வேண்டியது தானே? ரெண்டாவது நிவேதாவின் வீட்டில் நடந்த விசாரணையில் சில முக்கியமான தடயங்கள் சிக்கிச்சு. நிவேதா நம்மள பார்க்க வந்ததை அவர் எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னார்?”

“டெலிஃபோன் பக்கத்துல, ஸ்க்ரிப்ளிங் பேட்ல நம்ம அட்ரெஸும் ஃபோன் நம்பரும் இருந்ததா சொன்னார்”.

“ம்ம்ம். அந்த பேப்பரை ஃபாரென்ஸிக் டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி செக் பண்ணதுல, அது நிவேதா கையெழுத்து இல்ல. ஜெயராமனோடதுன்னு கன்ஃபர்ம் ஆச்சு. ரெண்டாவது வேலைக்காரி தினம் பதினொரு மணிக்கு ஜெயராமன் நிவேதா வீட்டிற்கு வருவாரென்றும், கம்ப்யூட்டரில் டைம் ஸ்பெண்ட் செய்வார்ன்னும் சொன்னாளே ஞாபகமிருக்கா?”

“ஆமாம் பாஸ். பன்னெண்டு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டார்ன்னு சொல்லிச்சே”.

“அதான். அந்த சிஸ்டத்த நோண்டினதுல சில சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏற்பட்டது. மொதல்ல அந்த சிஸ்டத்துல நிவேதா தன் மெயில் அக்கவுண்ட்ல ஆட்டோ லாகின் செட் பண்ணி வச்சிருக்காங்க. நிவேதா அனுப்பினதா ஜெயராமன் நம்மிடம் காட்டிய நான்கு மெயில்களிலும் டைமை செக் பண்ணிப்பாரு. 11.15க்கு நிவேதாவின் அக்கவுண்ட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கு. இந்த சிஸ்டத்திலிருந்துதான். ரெண்டாவது ஹிஸ்டரிய தோண்டுனதுல, ஜெயராமன் யுஎஸ்லிருந்து கிரெடிட் கார்ட் மூலமா ஒரு கருவி ஆர்டர் பண்ணிருக்கார். அதன் மூலமா ஒருவருடைய ஆழ்மன சிந்தனைகளை சிதைக்க முடியுமாம். சைபர் க்ரைமிலிருந்து வந்த தகவல்கள் இவை. என் கணிப்பு படி, இவரே மெயில் அனுப்பிச்சுகிட்டு, நிவேதாவை சூசைட் அட்டெம்ப்ட்டிற்கு ட்ரிக்கர் பண்ணியிருக்கார். மனநல மருத்துவர் ஆலோசனைகளெல்லாம் தன் மேல் சந்தேகம் வராமலிருக்க செய்த செட்டப்.”

“கரெக்ட் பாஸ். நான் கொஞ்சம் துருவினதுல, நிவேதாவிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர், ஜெயராமனின் தோழி வசந்தாவோட பொண்ணு. நிவேதாவிற்கு ஏதாவது நேர்ந்தால், சொத்துப் போய் சேரும் ட்ரஸ்ட்டில் நிர்வாகிகளில் ஒருவரின் தங்கை தான் இந்த வசந்தா. பக்காவா ப்ளான் பண்ணிருக்கானுங்க பாஸ். திருட்டு பசங்க.”

“சோ, கேம் எண்ட்ஸ் ஹியர்.”

“இப்ப நம்ம என்ன பண்ணப்போறோம் பாஸ்?”

“அஷோக்கிற்கு விவரங்களை தெரியப்படுத்திவிட்டு, காதாம்பரி கேஸ்கட்ல தலையக் கொடுக்கப் போறோம்.”

“சரி பாஸ். ஒரு அவசர வேலையா நான் கிளம்பறேன்.”

“சரி.”

“எங்கன்னு கேக்க மாட்டீங்களா?”

“மச்ச சாஸ்திரம் புக் வாங்கத்தானே? உன்ன திருத்தவே முடியாதுடா.”

(முற்றும்)

March 5, 2012

வருது வருது...விருது விருது..

நித்திலம் சிப்பிக்குள் முத்து தளத்தில் எழுதி வரும் சங்கரி மேடம் ஏதோ பெரிய மனசு பண்ணி நம்மையும் ஒரு ஆளா மதிச்சுஎனக்கு Versatile Blogger விருது தந்திருக்காங்க. ரொம்ப நன்றி மேடம். சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறதுதானே முறை. அதன்படி இந்த விருதை நான் பகிர்ந்துக்கப்போற மக்கள் இதோ. (ஒரே ஒரு விருதுதாங்கறதால கொஞ்ச பேருக்கு தான் டிஸ்ட்ரிப்யூட் பண்ண முடியும்:))))

எப்படி இவரால மட்டும் இப்படி அசுரத்தனமா படிக்க இல்லல்ல வாசிக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்:)

சயிண்டிஸ்ட் என்று ப்ளஸ்ர்களால் அழைக்கப்படும் முரளிகண்ணன். சினிமா முதற்கொண்டு இவரின் அநேக பதிவுகளிலும் ஒரு டீப் அனாலிஸிஸ் இருக்கும். சமீபத்தில் இவர் எழுதிய மதுரை ஏரியா பூக்காரர்களைப் பற்றிய பதிவைப் படித்து பாருங்கள்.

மனதில் பட்டதை பொதுவில் தயங்காமல் சொல்லுவதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அது கவிதாவிற்கு நிறையவே இருக்கிறது. மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் ஆல்டர்களில் அணில்குட்டி ரொம்பவே ஃபேமஸ்:)))) இந்த விருதுக்கு முக்கியமாய் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹி ஹி. புள்ளையாண்டானிடம் பல்பு வாங்குவதில் எனக்கு சீனியர்:) இந்த விஷயத்தில் இன்னொரு சீனியரான விஜிக்கும் இந்த விருதில் தம்மாத்துண்டு பிச்சிக் கொடுக்கப்படுகிறது:)

நம்மளமாதிரியே ப்ளாக்ல கலந்து கட்டி பதிவு போடறதால ஹூஸைனம்மாக்கும் இந்த விருதுல கொஞ்சம் போய் சேருது. இவங்களோட சப்பாத்தி டேஸ், டிரங்கு பெட்டி சீரிஸ் எல்லாம் என்னோட ஃபேவரிட்.

ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே ஒரு விருதுல இம்புட்டு தான் ஷேர் பண்ணிக்க முடியும். அடுத்த தபா, இன்னும் நிறைய ஆளுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.

இப்போ எனக்கு பிடிச்ச ஏழு விஷயங்களை பட்டியலிடனுமாம்.

1. நான் - ஆமாங்க. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கே என்னை பிடிக்கலைன்னா, வேற யாருக்கு பிடிக்கப்போவுது சொல்லுங்க:))

2. ஜூனியர் - கடந்த நான்கரை வருடங்களாய் எனக்கு புதுபுது விஷயங்களை ரொம்ப சிம்பிளா சொல்லி தந்துகிட்டிருக்காரு. என்னோட முன்கோபம், பொறுமையின்மை போன்ற நிறைய விஷயங்களில் பெரும் மாற்றம் ஜூனியரால். ஐ லவ் யூ டா குட்டி.

3. நண்பர்கள் - என் நட்பு வட்டம் மிகப் பெரியதெல்லாம் இல்லை. ஸ்கூல், காலேஜ், (எக்ஸ்)கலீக்ஸ் என சில நபர்களை மட்டுமே கொண்டதுதான். ஆனால் அவர்களால் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நிறைய விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து, சில விஷயங்களில் கண்டித்து திருத்தி, துவளும்போதெல்லாம் தோள்கொடுத்து உற்சாகப்படுத்துவது என் நண்பர்கள் தான். பத்தாண்டுக்கும் மேலாம் நட்பு, குடும்ப உறவுகளுக்குப் பின்னும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

4. இசை - “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகப் பொருந்தும். பாட்டு கேட்டுக்கொண்டேயிருப்பது எனது பழக்கம். இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்குமென்றில்லாமல், நன்றாக இசையமைக்கு யாரையும் பிடிக்கும்.

5. சாப்பாடு - ஹி ஹி. சொல்லவே வேண்டாம். இன்ஃபாக்ட் இதான் முதல்ல வந்திருக்கனும். இது ஒன்னும் தரவரிசை இல்லைங்கறதால, இப்ப குறிப்பிடறேன். விதவிதமா, வாய்க்கு ருசியா சாப்பிடனும். மனுஷன் ஆடி ஓடி கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதெல்லாம் எதுக்கு? இதுக்குதானே. அதுல ஏன் குறை வைப்பானேன்:)

6. தூக்கம் - எந்த தொந்தரவும் இல்லாம, அமைதியான சூழல், நானா முழிச்சிக்கிற வரைக்கும் தூங்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அது முடியலைன்னு இங்க புலம்பிருக்கேன். எப்படியாவது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது என் இஷ்டம் போல தூங்கிடுவேன். கும்பகர்ணின் வம்சாவளி டிஎன்ஏ ஏதாவது எனக்கு இருக்கான்னு செக் பண்ணனும்ன்னு ரங்ஸ் கிண்டல் பண்ணுவார்:)

7. திடீர்ன்னு எதையாவது செய்ய சொன்னா, சமாளிக்கறதுக்காண்டி எப்படியோ மேனேஜ் செய்யும் பழக்கம். அவசர அவசரமா எழுதுன இந்த பதிவு மாதிரி:))

February 29, 2012

Scribblings 29-02-2012

வாகனங்களில் போலீஸ், டாக்டர் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் ஒரு அர்த்தமிருக்கு. குறிப்பாக டாக்டர் என உணர்த்தும் ஸ்டிக்கர்கள், நிறைய இடங்களில் அவசரத்துக்கு உதவியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலமாக வக்கீல் என உணர்த்தும் ஸ்டிக்கர்களை கார்களில் நிறையப் பார்க்கிறேன். எதற்கு எனத் தெரியவில்லை. ஒருவேளை ”வண்டில மோதின, மவனே, கோர்ட்டு கேஸுன்னு இழுத்து விட்றுவேன்”னு பயமுறுத்த இருக்குமோ? மோகன்குமார் நீங்களும் அப்படி ஒட்டியிருக்கீங்களா? இதப் பார்த்துட்டு ரங்ஸ் சொன்னார் “பேசாம நானும் வண்டில சாஃப்ட்வேர் எஞ்சினியர்ன்னு ஸ்டிக்கர் ஒட்டட்டுமா?”. நான் சொன்னேன் “ஹுக்கும். ஒவ்வொரு தெருமுக்குலயும் மாம்ஸுங்க வசூல் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த ஸ்டிக்கர் பார்த்தா டபுளா கப்பம் கட்ட வேண்டியிருக்கும். பரவால்லையா?”. ஆப்போசிட் சைட் கப்சிப். வழக்கம்போல:)))
*************

சமீபத்தில் இரண்டு சாஃப்ட் ட்ரிங்ஸ் விளம்பரங்களின் இசை பெரிதும் கவர்ந்தது. ஒன்று கோகோ கோலா. கோரஸாக கேட்கும் குழந்தைகளின் குரல் கொள்ளை அழகு. கான்செப்டும் ஓக்கே. பார்த்துக்கொண்டிருக்கும்போது உறவினர் ஒருத்தர் அடித்த கமெண்ட் “அப்படியே ஒரு பாட்டில் கோக் பண்ண, எவ்வளவு லிட்டர் தண்ணீர் நாசமாப்போகுதுன்னும் சொல்லிருக்கலாம்” - அதானே. இன்னொரு விளம்பரம் செவன் அப்பின் I feel up. தமிழ் ட்ரான்ஸ்லேஷன் கொடுமையாக இருந்தாலும், பீட்ஸ் நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இரண்டு வரிகள் ”ரேஸில் ரிவர்ஸிற்கு பயனில்லை. சோகத்தை மேகத்தில் துடைக்கிறேன்”. நீங்களும் பாருங்க.


***********

கடந்த பத்து நாட்களாக தொண்டை வலி, வறட்டு இருமல் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள், ப்ளஸ்ஸர்கள் என அனைவரும் சொல்லிய அத்தனை கை வைத்தியத்தையும் செய்து பார்த்து சரியாகவில்லை. வழக்கம்போல ஹாஸ்பிட்டலில் தஞ்சமடைந்தால், அந்த டாக்டர் வலியே பரவாயில்லையென்ற அளவுக்கு மொக்கை போட்டார். சாம்பிளுக்கு

When was ur last LMP?

அப்படின்னா?

LMPன்னா தெரியாதா? (கேவலமான லுக் விட்டுகிட்டே)

தெரியாது.

என்ன படிச்சிருக்கீங்க?

டாக்டருக்கு படிக்கல (செம்ம கடுப்புல சொன்னேன்)

வாட்?

நத்திங். Does that really matter now?

ஓக்கே. LMPன்னா Last Menstrual Period. புரிஞ்சுதா.

நல்லா. என் GK இம்ப்ரூவ் பண்ணதுக்கு நன்றி.

(இப்ப டாக்டர் டென்ஷனாயிட்டாங்க.)

ஊசி ஒன்னு போட்டுகறீங்களா?

வேண்டாம். மாத்திரையே போதும்.

ஏன் விஷ ஊசி போட்டுடவேன்னு பயமா? ஹா ஹா ஹா ஹா.

அவ்வ்வ்வ். தேடிப்போய் சிக்கறேன் போலிருக்கு:(
*************

ஜூனியரை ரெகுலர் செக்கப்பிற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தேன். ஒன்றரை வருடமாக அவன் வெயிட் 14.5 - 16கிலோவிலே இருக்கிறது. ஏறுவதும் இல்லை. இறங்குவதுமில்லை. எனக்கு அதைப்பற்றி பெரிய கவலை இல்லையென்றாலும், பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) வீட்டிலும் பெரியவர்கள் பீடியாஸ்யூர் போன்ற ஊட்டச்சத்து பானங்களை கொடுக்க சொல்லி வற்புறுத்திகிட்டிருக்காங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. இம்முறை டாக்டரிடம் வெயிட் பற்றி கேட்டபோது அவர் சொன்னது சுவாரசியமாய் இருந்தது.

2 வயது வரை தான் எடை அதிகரிக்க வேண்டும்.
2-32 வயது வரை அறிவு வளர வேண்டும்.
32-64 வயது வரை செல்வம் வளர வேண்டும்.
64 வயதிற்கு மேல் ஞானம் வளர வேண்டும் என்றார். அறிவு வளர வேண்டிய வயதில் எடை கூடினால் அறிவு வளராது என்றார். அவன் வயசுக்கு நார்மலான வெயிட் தான் இருக்கான். பால் குடிக்கலைன்னா கூட கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிடற உணவையே கொடுங்க. விளையாட்டு. கூடவே நீச்சல் பயிற்றுவிக்க சொன்னார். நீச்சல் கற்றுக்கொண்டால், உடல் உறுதியாகும். அப்புறம் என்னைப் பார்க்க வர வேண்டியிருக்காது என்று சிரித்துக்கொண்டே விடைகொடுத்தார்.
*******************

தோனி படம் பார்த்தோம். படம் நன்றாக இருக்கிறது 3 இடியட்ஸ்/நண்பன் படங்களின் கான்செப்ட் தான். பிடிக்காததை படிக்காதே/செய்யாதே. பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருந்தாலும் சில காட்சிகள் சீரியல்/ட்ராமா மாதிரி இருந்தது. குறிப்பாக எப்பப்பார்த்தாலும் ஹெல்மெட் மாட்டிகிட்டே சுத்துவது கடுப்பாக இருந்தது. ஒரு சில சீன்களை தவிர்த்து படம் நீ வொர்க். நிறைய சீன்களுக்கு தியேட்டரில் கைதட்டல்களும், விசிலும் தூள் பறந்தன. குறிப்பாக ஆசிரியை ஒருவரிடம் பிரகாஷ்ராஜ் “நீங்க மட்டும் ஒரு சப்ஜெக்ட்ட தான் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. பசங்க மட்டும் இத்தனை பாடம் படிக்கனுமா?” எனக் கேட்டபோது எழுந்த கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாயிற்று. நீயா நானாவில் கல்வி சுகமா சுமையா என்ற விவாதம் நடப்பது போல் படத்தில் காமித்தார்கள். நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன? என்னமோ போடா மாதவா:)

February 13, 2012

ஜூனியர் அப்டேட்ஸ் 13-02-2012

ஜூனியருக்கு சமீபத்தில் பனீர் பக்கோடா செய்து கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு, “அம்மா நீ சூப்பரா செஞ்சிருக்கியே. யார் கத்துகொடுத்தா?”

ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.

#ஙே!!!
***********

திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”

#தேவைதான் எனக்கு
**************

திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:

”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”

அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்

“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.

”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.

”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************

ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************

எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது

“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”

“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”

“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”

#ஙே!!!
********************

”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”

#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))

February 8, 2012

மெரினா

”வணக்கம் வாழ வைக்கும் சென்னை”

சென்னையின் அடையாளங்களில் மறக்கமுடியாத, நிரந்தர இடம் பெற்றது மெரீனா. எல்லா வயதினர்க்கும் ஒரு உற்சாகமான மனநிலையை தரும் கடற்கரை. காதல், காமம், குற்றங்கள், நட்பின் கொண்டாட்டங்கள் இவற்றைத் தாண்டி கடற்கரையே வாழ்க்கைக் களமாக கொண்ட மனிதர்களின் கதை தான் இந்த மெரீனா. முக்கியமாக படிப்பைத் தொலைத்து, எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக அலையும் எண்ணற்ற சிறுவர்களில் சிலரின் வாழ்க்கை அத்தியாயங்களை சொல்லிப் போகிறது மெரீனா. ஊரிலிருந்து பிழைப்பு தேடி மெரீனா கடற்கரைக்கு வரும் ஒரு சிறுவன், அங்கே பிழைத்துக்கொண்டிருப்பவர்களோடு எப்படி சேர்கிறான்? என்ன செய்கிறான்? என்னவாகிறான்/என்னவாகப் போகிறான்? இந்தக் கேள்விகளுக்கான விடையோடு, மெரீனா கடற்கரைக்கு வரும் காதலர்கள் சிலரையும் தொட்டுச்செல்கிறது படம்.

தமிழ் சினிமாவிற்கே உரித்தான அதிகப்பிரசங்கி குழந்தைகளைக் காட்டி ”பசங்க” படத்தை ஆரம்பித்திருந்தாலும், ஓரிரு காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா குழந்தைகளைப் பற்றிய படமாக இல்லாமல், குழந்தைகளைப் பற்றிய தமிழ் சினிமாவாக தந்ததன் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் பாண்டிராஜ். இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு நிஜமாகவே எனக்கு விடை தெரியவில்லை. குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய படமென்றவுடன், வறுமை, தடம் மாறுதல், போதைப் பழக்கங்கள், வயசிற்கு மீறிய நடவடிக்கைகள் என்று இறங்காமல், சிறுவர்களின் குறும்புகள், வியாபர சண்டைகள், விளையாட்டுகள், சின்ன சின்ன ஆசைகள், கல்விக்கான ஏக்கம் என படம் முழுக்க சிறுவர்களைப் பாசிட்டிவாக காட்டியதற்காக ஒரு பெரிய சபாஷ். கதை, பாட்டு, ஃபைட்டு, காமெடி என்றில்லாமல், மனிதர்களின் வாழ்க்கையில் சில தினங்களை காட்ட முயற்சித்ததற்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், சில இடங்களில், கமர்ஷியல் சினிமாவாக மாற்ற முயற்சிக்கிறாரோ எனவும் தோன்றுகிறது. சிறுவனைத் தேடியலையும் போலீஸ்காரர்களும், அவர்களின் மேலதிகாரியுடனான சம்பாஷணைகளும் அமெச்சூர்தனமான எபிசோட்கள். கொஞ்சம் கூட க்ரவுண்ட் வொர்க் செய்யாமல் அமைக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. சிறுவர்களுக்கிடையே நடக்கும் போட்டிகளும், அவற்றையொட்டிய காட்சிகளும் முதலில் நன்றாக இருந்தாலும், ரீப்பிட்டடாக வரும் போட்டிகள் அயற்சியைத் தருகின்றன. குறிப்பாக பிற்பாதியில் வரும் குதிரைப் பந்தயம். எப்படா முடிப்பாங்க என்றிருந்தது. இந்த மாதிரி எதார்த்த??!! படங்களில் கட்டாயமாக ஒரு மரணம் இருக்க வேண்டுமென்பது ரூல் மாதிரியாகிவிட்டது. அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

அவ்வப்பொழுது தொய்ந்து சரியும் படத்தை நிமிர்த்துவது சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் எபிசோட்தான். ”லைட்டா பசிக்குது” என ஆரம்பிக்கும் ஓவியாவும், ”எல்லாம் இப்ப இப்படிதாண்டி சொல்லுவீங்க” என மைண்ட் வாய்சில் ஓட்டும் சிவாவும் அற்புதமாய் பண்ணியிருக்கிறார்கள். சிவாவின் நண்பராக வருபவர் அடிக்கும் காதல் பஞ்சுகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. டோலக்கடித்துக்கொண்டே பாடும் ஆள், அவர் மகள், பிச்சையெடுக்கும் வயதானவர், தபால்காரர் என அனைவரும் நிறைவாக செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் சில நிமிடங்களே வந்தாலும், நடிப்பில் அசத்துகிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அற்புதமாக வந்திருக்க வேண்டிய படம். இப்பவும் மோசமில்லை. ஆனால் என்னமோ குறை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.

பெசண்ட்நகர் பீச்சிற்கு தினமும் சென்று வந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும். மெரினாவையும் அப்படிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மொட்டை வெயிலில், இரவில், மழையில், இளங்காலையில், மெல்லிய மாலைவெளிச்சத்தில், கூட்ட நெரிசலில், வெறிச்சோடிகிடக்கும்போதெல்லாம் மெரினா கொள்ளை அழகாகத் தெரிகிறது. “வணக்கம் வாழ வைக்கும் சென்னை”, “காதல் ஒரு தேவதையின்” பாடல்கள் ரெண்டும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிண்ணனி இசையும் பாதகமில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிப் போன கடற்கரை(களை)ப் பற்றி ஒரு படமென்றதும் ரொம்பவும் எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றமென்றாலும், வித்யாசமான முயற்சிக்காக ஒரு தடவையேனும் பார்க்கலாம்.

February 6, 2012

Scribblings 06-02-2012

இணைய நண்பர்கள் சிலர் சேர்ந்து கல்வி சம்பந்தமான உதவிகளை செய்யத் திட்டமிட்டு, என்ன செய்யலாம் என்று குழுமம் ஆரம்பித்து உதவி செய்ய ஆரம்பித்தோம். அதன் ஒரு அங்கமாக புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நேசம் என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்ட தளம் இங்கே

போட்டிக்காக அல்லாமல் புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. நேரமின்மையோடு என் சோம்பேறித்தனமும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே இருக்கின்றேன். கூடிய விரைவில் எழுதி வலையேற்ற வேண்டும்.
********************

இரு வாரங்களுக்கு முன்பு வண்டலூர் சென்றிருந்தோம். பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க போனபோது கூட வந்த ஒரு குடும்பத்தின் செய்கைகள் எரிச்சலைடைய செய்வதாக இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களை வண்டியிலிருந்து தூக்கி எறிவதும், மிருகங்களின் கூண்டருகே செல்லும்போது கத்தி கூச்சல் போடுவதும் (கவனத்தை ஈர்க்கறாங்களாமாம்) என இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். உச்சபட்சமாக சில இடங்களில் (மான், வெள்ளைபுலி, சிறுத்தை) மிருகங்களை நோக்கி சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றை தூக்கியெறிந்தனர். இந்த மாதிரி உணவுகளை மிருகங்களுக்கு கொடுக்காதீங்க என சொன்னபோது வழக்கமான “உன் வேலையப் பார்த்துகிட்டு போ”ங்கற பதில் தான் கிடைச்சது. எங்களுடன் வந்த இன்னொருவர், இப்ப நீங்க அமைதியா வரலன்னா, நான் போய் இன்சார்ஜ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன் என சொன்னதும் தான் அமைதியானார்கள். இதை முதல்லயே செஞ்சிருக்கலாமோன்னு பேசிகிட்டு வந்தோம். இன்னொரு குடும்பம் செம்ம ஜாலியாக கமெண்ட் பாஸ் பண்ணிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, யானைகள் பகுதியை கடந்து ஓரிரு நிமிடங்கள் வண்டியை நிறுத்தினர். திரும்ப அனைவரும் வண்டியில் ஏறும்போது குடும்பத் தலைவர் குடும்பத்தினரிடம், “சின்ன யானை வருது பாருங்க” என்றார். எல்லோரும் ஆர்வமாய் எங்கே எனப் பார்க்க, அவரோ “குட்டியானை வண்டில ஏறி உட்கார்ந்திருச்சு” என்றார். அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் என பின்னர் தான் புரிந்தது. எல்லாரும் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தது:)
***************

சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும். அந்த ஊரின் மெயின் ரோட், ஒருபுறம் ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்டதாகவும், மறுபுறம் தமிழ்நாடு எல்லைக்குட்பட்டதாகவுமிருக்கிறது. ஆந்திர எல்லைக்குட்பட்டு வரும் பக்கத்தில், ப்ரைவேட் ஒயின்ஷாப் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. விலையும் மலிவாம். உதாரணத்திற்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் 65ரூபாய் என்றால், இங்குள்ள கடைகளில் 25ரூபாய்க்கி கிடைக்கிறதாம். விலைமலிவாக இருப்பதால், இந்த ஊரின் டாஸ்மாக்கில் சேல்ஸ் இல்லையென்கிறார்கள். இம்மாதிரியாய் தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்கள் அருகருகே இருக்கும் மற்றொரு இடம் ஆர்கேபட்டு - பள்ளிபட்டு இடையே இருக்கிறதாம். இப்ப எதுக்கு இந்த தகவல் என்கிறீர்களா? சும்மா குடிமகன்களின் ஜெனரல் நாலேட்ஜை வளர்ப்பதற்காக. சீப்பான சரக்கிற்காக பாண்டி வரைக்கும் போகவேண்டாம் பாருங்கள்:):)
***************

அப்பா ரிட்டையராகி நான்கு மாதங்களாகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பா வேலை செய்த ஊரிற்கு ஒரு பெர்சனல் வேலையாக செல்லவேண்டியிருந்தது. அப்பாவிடம் வேலை செய்த ஒருவரை அழைத்து சில விவரங்கள் கேட்டார் அப்பா. அங்கு சென்றபோது, அந்தநபர் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ததோடில்லாமல், வேலை முடியும்வரை கூடவே இருந்தார். உங்களுக்குத்தான் சிரமம் என்றதும், அப்பாவிற்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி என சொல்லியதோடில்லாமல், அப்பாவிடம் வேலை பார்த்த அனுபவங்களை பெருமையாக கூறினார். அப்பாவை போல ஒரு அதிகாரியை பார்த்ததில்லை என சொன்னபோது எங்களுக்கு பெருமையாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் முன்னர் அதிகாரியாய் இருந்தவருக்கு, அதுவும் இப்போது பணிஓய்வு பெற்றவருக்கு உதவ வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அப்பாவை சம்பாதிக்க தெரியாதவர் என உறவுகளும், சுற்றத்தாரும் சொல்லக்கேட்டிருக்கேன். இன்று அவர்களையெல்லாம் அழைத்து எங்க அப்பா சம்பாதிச்சிருக்கறத பாருங்க என காட்ட வேண்டும்போலிருந்தது. I'm proud of you dad. Love you.
************

ட்விட்டர் கார்னர்

கேப்டனின் அந்நியன் அவதாரம் நிகழ்ந்த மறுநாள், என் ட்விட்ஸ் சில

ஸ்டாலின் டு விஜயகாந்த் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ. அப்படியே கையில சரக்கு எடுத்துக்கோ. இப்ப சரியா வாசி. பப்பாம் பப்பாம் பப்பாம் பபபாம்.

நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு.

கேப்டன் ஸ்டேடஸ் மெசேஜ் : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

February 2, 2012

நினைவெல்லாம் நிவேதா - 6

”செம்ம ட்ராஃபிக் பாஸ். ரெண்டு மணிநேரமா க்ளட்ச்ச மாத்தி மாத்தி கால் வலிக்குது” என்றபடியே உள்ளே நுழைந்தான் வசந்த். ஒரு கேஸிற்காக சட்ட புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த கணேஷ், வசந்திடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

“வேணாம் பாஸ். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவதிருக்கா?” என்றபடியே ஃப்ரிட்ஜை ஆராய்ந்தவன், ஒரு ஆப்பிளைக் கடித்தபடியே வந்து கணேஷின் முன் அமர்ந்தான்.

“போன காரியம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.

“சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக இந்த வேலைக்கு என்ன அனுப்பிச்சீங்கன்னு சொல்லுங்க. என்னாலயும் ஒரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனாலும்..”

“சொல்றேன் வசந்த். இது கண்டிப்பா நிவேதாவே எடுத்த முடிவில்லங்கறது என்னோட யூகம். இந்த விஷயத்துல ரெண்டே பேரத்தான் நாம சந்தேகப்படமுடியும். ஒன்னு ஜெயராமன். இல்லன்னா அஷோக். மோட்டிவ் ஒன்னுதான். சொத்துக்காக.”

“அப்ப கொலைன்னு சொல்ல வர்றீங்களா. போஸ்ட்மார்ட்டம்ல கயிறு இறுகி, மூச்சுக்குழாய் முறிந்ததால் மரணம்ன்னு தெளிவாருக்கே. ரெண்டாவது, சம்பவம் நிகழ்ந்த அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஸ்ட்ராங்கான அலிபி இருக்கு.”

“அவசரப்படாத வசந்த். இது ஒருவரின் மேற்பார்வையில், வழிகாட்டுதலின் படி நடந்த தற்கொலை.”

“அப்படித்தான ஜெயராமனும் சொல்றாரு. அஷோக்தான் அந்த ஒருவன்ங்கறது அவரோட குற்றச்சாட்டு.”

”கரெக்ட். இப்ப அது நெஜமாவே அஷோக்தானாங்கறத தான் நாம கன்ஃபர்ம் பண்ணனும்.”

“சரி பாஸ். இப்ப உங்களோட மைண்ட்ல என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்களேன்.”

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்ட ரெண்டையும் கொண்டு வந்தியா?”

“கொண்டு வந்திருக்கேன் பாஸ். நீங்க கேக்காமலேயே இன்னொரு வேலையும் பண்ணி முடிச்சிருக்கேன்”. என்ன என்பது போல பார்த்தான் கணேஷ். ”முதல்ல நீங்க உங்க கெஸ்ஸ சொல்லுங்க பாஸ், அப்புறம் நான் என்ன பண்ணேன்ங்கறத சொல்றேன்”.

“ஆல்ரைட். முதல்ல அஷோக்கிட்டருந்து ஆரம்பிப்போம். லவ் மேரேஜ். பிரச்சனை எதுவும் இல்லை. அட்லீஸ்ட் எதுவுமில்லைன்னு அவர் நினைச்சுகிட்டிருக்கார். நல்ல வருமானம் ஈட்டிக்கொடுக்கும் தொழில். நஷ்டமோ, பெரிய பணத்தேவையோ இல்லை”.

“இந்தக் காரணங்கள் போதுமா பாஸ்? தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.”

“இரு வசந்த். அவசரப்படாத. இதெல்லாம் சும்மா ஆட் ஆன் வாதங்கள் தான். ஒரே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கு வசந்த். இம்மாதிரி நிவேதாவை தற்கொலைக்கு தூண்டுவதன் மூலம் தான் ஈசியாக மாட்டிக்கொள்வோம் என யோசிக்கத் தெரியாதவரல்ல அஷோக்.”

“எப்படி சொல்றீங்க?”

“சிம்பிள்டா. நிவேதாவின் அப்பா எழுதிவைத்திருக்கும் உயில் அப்படி. பொண்ணுக்கு கல்யாணம் ஆனப்புறம், ஏதாவது ஆச்சுன்னா புருஷந்தான் பொறுப்புன்னு தெளிவா எழுதிவச்சிருக்காரே. அதனால, நிவேதாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னைத்தான் பிடிப்பாங்கன்னு அவருக்கு தெரியாம இல்ல. அதுவுமில்லாம, அவருடைய பிசினெஸை கொஞ்சம் கிளறினேன். க்ளீனாதான் இருக்கார். நிவேதா இறப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் தொகை, அவருக்கு பெரிய அமவுண்ட்டாக இருக்காது. இதை அவரே சொல்லிருக்காரு.”

“ம்ம்ம். அப்ப அஷோக்க லிஸ்ட்ல இருந்து தூக்கிடலாம்”.

“யெஸ். ஜெயராமன தெளிவா டிக்கடிச்சிடலாம்”.

”ரீசன்?”

“சொல்றேன். இரு”.

-தொடரும்......

January 30, 2012

போலேநாத் உணவகம்

மிக மிக குறைந்த விலையில், திருப்தியாய் சாப்பிட ஏற்ற இடம், திருவான்மியூரில் இருக்கும் போலேநாத் ரெஸ்டாரெண்ட். நார்த் இண்டியன், சைனீஸ், சாட் என cuisine லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது. ஞாயிற்றுகிழமைகளில் ஸ்பெஷல் தாலி மீள்ஸ் கிடைக்கிறது. 95 ரூபாய். ஜல்ஜீரா, ஜிலேபி, ரைத்தா (பூந்தி), சாலட், தால், மூன்று சப்ஜி (பாகற்காய், சோலே மசாலா, ஆலு மட்டர் மசாலா), கடி, ரொட்டி மற்றும் ஒயிட் ரைஸ். ஸ்வீட்டைத் தவிர எல்லாமே அன்லிமிடெட். அன்று எங்கள் ப்ளேட்டில் இருந்த அத்தனை ஐட்டமும் அட்டகாசமாய் இருந்தது. முக்கியமாய் கரேளா (பாகற்காய்) சப்ஜி. கசப்புடன், லைட்டான தித்திப்பும் புளிப்புமாய் அருமையாக இருந்தது. அடுத்து தால். தாலுக்கு ரொட்டி தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்:))

சூடான, மிருதுவான, நெய் தடவிய ரொட்டிகள். நெய் வேண்டாமென்றால் சொல்லிவிடலாம். நான் சாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு ரொட்டிகளை ரவுண்டுக் கட்டிக்கொண்டிருந்தேன். ஜிலேபி ஒக்கே. ரொம்ப சின்ன உணவகம் தான். அதிகபட்சம் 25 அல்லது 30 பேர் அமரலாம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோதான். ரெண்டே பேர்தான் சர்வ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பர்ஸிற்கு பங்கமில்லாமல், ஒரிஜினல் டேஸ்ட்டில், எண்ணைய் மிதக்காத க்ரேவிகளை சாப்பிட ஏற்ற இடம். சைனீஸ் ஐட்டம் எதையும் ட்ரை செய்யவில்லை. இந்த மாதிரி சின்ன உணவகங்களில் ஃப்ரைட் ரைஸ் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கனும்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - போலேநாத்
உணவு - நார்த் இண்டியன், சாட், சைனீஸ் Veg
இடம் - திருவான்மியூர். மருந்தீஸ்வரர் கோவில் பின்புறம் போகும் ரோடில், சிங்கப்பூர் ஷாப்பி என்றொரு கடை இருக்கிறது. அதையொட்டி போகும் ரோட்டில் இரண்டாவது பில்டிங். மாடியில்.
டப்பு - ரொம்பக் கம்மி. தாலி மீல்ஸ் 95ரூபாய். கூடுதல் நிம்மதியாய் 8% வரியெல்லாம் கிடையாது:))

பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். மினிமம் டேஸ்ட் கேரண்டி

January 24, 2012

கடவுளுக்கு ஒரு கடிதம்

அன்பின் கடவுளுக்கு,

என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.

1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.

2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?

3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?

4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.

இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?

January 18, 2012

அளம் - வாசிப்பனுபவம்

கூகிள் பஸ்ஸிற்கு மூடுவிழா நடக்கும்முன்பு, வடகரை வேலன் அண்ணாச்சி, ஜாக்கி சேகருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். மக்களை, மண்ணின் இயல்பை பிரதிபலிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை”. நான் அப்போதுதான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நாவலாக நெடுஞ்சாலை இருந்தது. கூடவே அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சு.தமிழ்செல்வியின் அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி ஆகியவையும் இருந்தன. 2012 புத்தக கண்காட்சியில் வாங்கவேண்டுமென குறித்து வைத்துக்கொண்டேன். போலவே, வாங்கியும் விட்டேன். முதலில் வாசிக்கத் துவங்கியது அளம்.

வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.

கிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.

தாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.

அளம்
சு.தமிழ்செல்வி
மருதா பதிப்பகம்
100 ரூபாய்

January 11, 2012

நினைவெல்லாம் நிவேதா - 5

”அஷோக்??? என்ன சொல்றீங்க?” என்றான் கணேஷ் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில். இருவருக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு சலனமற்று நின்றுக்கொண்டிருந்த அஷோக்கை மெல்ல நெருங்கினான். அருகே செல்ல செல்ல அஷோக்கின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பது கணேஷிற்கு தெளிவாகத் தெரிந்தது. மெதுவாக அவர் தோளைத் தொட்டதும், உடைந்து அழத் தொடங்கினார் அஷோக். இதனை சற்றும் எதிர்பாராத கணேஷ் “ஈசி அஷோக். ஈசி. சாரி உங்களை புண்படுத்த அப்படிக் கேட்கவில்லை”
முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி துடைத்துவிட்டு நிமிர்ந்த அஷோக், ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இட்ஸ் ஒக்கே. அது உங்க கடமை. ஐ லவ்ட் ஹெர் சோ மச் கணேஷ். பாசம் தெரியாமல், அப்பாவின் பரபரப்பையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த என் வாழ்க்கையில் நிவேதாவின் வரவு வசந்தமாக இருந்தது. இந்த மூணு வருஷம் எங்களுக்குள் எந்த விதமான சண்டையோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. வேலையில் நான் பிஸியானது உண்மைதான். அதை என்னிடம் சொல்லியிருந்தால் சரிசெய்திருப்பேனே. இவ்ளோ பெரிய தண்டனையா தரனும்? இப்படி பாதில விட்டுட்டுப் போனவள எதுக்கு இன்னும் நினைச்சுகிட்டிருக்கனும்? எதுக்கு லவ் பண்ணனும்? முடியல கணேஷ். வீட்ல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நரகமாருக்கு. அவள் சம்பந்தப்பட்ட எதையுமே பார்க்க பிடிக்கல. அதான் ஏறக்கட்டச்சொன்னேன்.” என்றார்.

”மறுபடியும் சாரி அஷோக். எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. நாங்கள் இங்கே வந்தது, நிவேதாவின் திங்ஸை பார்க்க முடியுமா எனக் கேட்கத்தான்.”

"எதுக்கு?”

“ஜஸ்ட் ஒரு ரொட்டீன் ஃபார்மாலிட்டி தான்.”

“ஒக்கே. நான் வேலைக்காரிகிட்ட சொல்றேன். நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்”

”நன்றி. நாங்க கிளம்புறோம்.”

“கணேஷ்.. ஒரு நிமிஷம். ஜெயராமன் போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்தா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?”

“அவரிடம் இருக்கும் எவிடென்ஸை பொறுத்திருக்கிறது. நாங்க வர்றோம்.”

“வருவீங்களா?”

“தேவைப்பட்டால்.”

“தேவைப்படுமா?”

பதில் எதுவும் சொல்லாமல், சிரித்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். வெளியே வந்து சிகரெட் பத்த வைத்த கணேஷிடம் “என்ன பாஸ்? மூடிடலாமா? ஒன்னுமில்லாமத்தான் போகும் போலயே?” என்றான் வசந்த்.

”இல்லை வசந்த். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது” என்றான் கணேஷ் புகையை வெளியே விட்டபடி.

“என்ன பாஸ் சொல்றீங்க? ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு சொல்லுது. சித்தப்பன் புருஷன் தான் ட்ரிக்கர் பண்ணான்னு சொல்றாரு. புருஷனோ, பொண்டாட்டி செத்த வருத்தம் துளியும் இல்லாம, ஹீரோ கணக்கா ஜம்முன்னு வேலையப் பார்க்கிறான். ஜெயராமன கேஸ் ஃபைல் பண்ணச் சொல்லலாம். ஆட்டம் முடியப் போகுது. இனிமேதான் சூடு பிடிக்கப்போகுதுன்னு சொல்றீங்க? மனசுல என்ன ஓடுது பாஸ்? சொல்லிடுங்க.”

“பொறுமையா இரு வசந்த். சொல்றேன். அதுக்கு முன்னால கொஞ்சம் க்ரவுண்ட் ஒர்க் பண்ணலாம். நான் எதிர்பார்க்கிற லீட் கிடைச்சுதுன்னா ஆட்டத்த ஈசியா முடிக்கலாம்”.

January 9, 2012

Scribblings 09-01-2012

சென்னையின் 35வது புத்தக கண்காட்சி சென்ற ஐந்தாம் தேதி தொடங்கியது. கண்டிப்பாக போகனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். சனிக்கிழமையன்று போய்ட்டு வந்துட்டேன். இந்த தடவை ரொம்பக் கம்மியான புத்தகங்கள் (பட்ஜெட் பிரச்சனை) தான் வாங்கனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். வழக்கம்போல லிஸ்ட்டைத்தாண்டி நிறைய வாங்கிட்டேன். நம்ம யுஎஸ் ரிட்டர்ன் ராஜியோட, பதினோரு மணிக்கு திறக்கற கண்காட்சிக்கு, பத்தரைக்கெல்லாம் போயிட்டோம். நாள் முழுசும் சுத்திகிட்டே இருந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கின் பிரமாண்டமும், புத்தகங்களின் எண்ணிக்கையும் மூச்சடைக்க வைத்துவிட்டது. வழக்கம்போல சுஜாதாவோட கணக்கைத் தொடங்கினேன். இந்த முறையாவது வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கனும். பார்ப்போம்.
*********************

புத்தகத்திருவிழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மக்கள் காமிக்ஸ் புத்தகங்கள் மீது வெறிகொண்டு அலைகிறார்கள். 12 வருஷ கலெக்‌ஷனை 900 ரூபாய்க்கு தருகிறார்கள். என் அண்ணனிடம் 20 வருஷத்து கலெக்‌ஷன்கள் இருப்பதால் நான் வாங்கவில்லை. ஊரில் இவற்றை பத்திரமாக வைப்பதற்கென்றே மரப்பெட்டிகளின் உள்ளே வெல்வெட் துணி என பிரத்யோகமாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பால்யத்தில் விடுமுறைக்காக ஊருக்குப் போகும்போதெல்லாம், கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், டெக்ஸ் வில்லர், சிலந்தி மனிதன் என படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் பொங்கலோடு இரும்புக் கை மாயாவிக்கு 40 வயதாகிறதாம். ஹேப்பி பர்த்டே பாஸ்:)
*****************

2012 வாசிப்பு கணக்கை நேற்று தொடங்கியாச்சு. யுவகிருஷ்ணாவின் “அழிக்கப் பிறந்தவன்” நாவலை வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று. சுரேகா தன் விமர்சனப் பதிவில் கீழே வைக்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அங்கங்கே வாத்தியார் எட்டிப் பார்க்கிறார் (பெர்ஃப்யூமை ஸ்ப்ரேவிக் கொண்டான்). அதுசரி சுஜாதா விருது வாங்கினவரிடம் அவர் சாயல் துளியும் இருக்காதா என்ன? ஒன்னும் மட்டும் புரியவில்லை. லக்கி எப்படி மனம்வந்து அணிலின் படம் ஹிட்டாகும் என எழுதியிருக்கிறார்? குட் வொர்க் லக்கி. வாழ்த்துகள்.
****************

நேற்று அதிகப்படியான வேலை சலிப்பில் “நான் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்க்கிறது” என புலம்பிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட ஜூனியர், ”அம்மா பிங்கோ சாப்பிடும்மா” என்றான்.

”வீட்ல இல்லையே”

“நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்.”

“வேண்டாண்டா அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“பரவால்ல சாப்பிடும்மா. அது சாப்பிட்டா டூ ஆகிடுவாங்க. அப்ப நீ நிறைய வேல செய்யலாம். சரியா?”

அப்புறம்தான் புரிந்தது. சமீபத்திய பிங்கோ விளம்பரங்களில், அதை சாப்பிட்டால், ட்வின்ஸ் மாதிரி ஆகிடுவாங்க என வருகிறது. அவ்வ்வ்வ். எங்கேயெல்லாம் அப்ளை பண்றாங்க இந்த பசங்க.
***********************

சன் டிவியில் ஒளிப்பரப்பான நண்பன் பட இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் அடிச்ச ஜிங்ஜாங்கை தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் வெற்றியடைந்ததுன்னா அதுக்கு ஒரே காரணம் ஹிந்தி படத்தின் கதாசிரியர்/டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தான் என்றார். சீன் பை சீன், காஸ்ட்யூம் முதற்கொண்டு காப்பியடித்துவிட்டு சொந்தமா சிந்திச்சேன், தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தினேன் பீலா விட்டுகிட்டு சுத்தும் டைரக்டர்கள் மத்தியில் இந்த ஒரு விஷயத்துக்காகவாவது ஷங்கர் பாராட்டப் படவேண்டியவர். போகியன்று புக் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு சொல்றேன்:) அந்நிகழ்ச்சியை ஓட்டிய எனது ட்விட்.

ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?