September 7, 2009

நினைவோ ஒரு...

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எப்படியும் இந்த டிராஃபிக்கில் வீடு போய் சேர ஒரு மணி நேரமாவது ஆகும். உட்கார்ந்தவுடனே செல்போன் ட்ர்ர்ரியது. லேண்ட் லைனிலிருந்து வந்த நம்பர். மதியமே மீட்டிங்கில் இருக்கும்போது இதே நம்பரிலிருந்து வந்தது. பொதுவாக தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு அலட்டிக்கொள்வதில்லையென்றாலும் இரண்டு தடவை யார் செய்வார்கள் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

"ஸ்வேதா இருக்காங்களா" என்ற பெண் குரல் கேட்டது.

சட்டென்று குரலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாததால் மறுபடியும் ஹலோ என்றேன். இந்த முறை

"ஸ்வேதா இருக்காங்களா நான் செல்வி பேசறேன்".

செல்வி பேரைக் கேட்டவுடன் ஏற்பட்ட ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டு "ஹே செல்வி எப்படியிருக்க?" என்றேன். பத்து நிமிடம் பேசியபிறகு செல்வி தயங்கியவாறே "சித்தி உன்னை பார்க்கனும்னு சொல்லுது ஸ்வேதா" என்றாள். என் மௌனத்தின் அர்த்தம் புரிந்தவளாய் "ஒரே ஒரு தடவை வா ஸ்வேதா. எனக்காக. நம் பிரெண்ட்ஷிப்பிற்காக. ப்ளீஸ்". முயற்சி செய்கிறேன் என போனை வைத்தேன்.

போனை வைத்ததும் தூறல் போட ஆரம்பித்தது. தூறலுக்கு கிளம்பும் மண்வாசனைப்போல் செல்வியின் போன் அவள் நினைவுகளை என்னுள் கிளறிச் சென்றது.


செல்வியும், அம்மி ஆண்ட்டியும் என் நினைவில் சிரித்துக்கொண்டேயிருந்தார்கள்.

தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் தான் அந்த காலனிக்கு குடிவந்தோம். வந்தன்னிக்கே அம்மாக்கு மெட்ராஸ் ஐ. தீபாவளியன்று பலகாரம் வினியோகிக்கும் வேலை என்னிடம் தரப்பட்டது. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அம்மி ஆண்ட்டி. எல்லாரும் அவங்களை அப்படிதான் கூப்பிடுவாங்க. அம்மி ஆண்ட்டிக்கு இரண்டு குழந்தைகள். அங்கிள் மேத்ஸ் லெக்சரர். மாநிறம் தான் என்றாலும் மாசில்லாத முகத்தில் எப்போதுமே படர்ந்திருக்கும் ஒரு சினேகப் புன்னகை. அம்மி ஆண்ட்டியின் சிரிப்பை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. செய்யும் எல்லா வேலைகளையும் ரசனையோடு செய்வார். ஸ்வேதாக்குட்டி என்றவர் அழைக்கும்போது பாசமும், அன்பும் தெரிக்கும். முக்கால்வாசி நேரம் ஆண்ட்டி வீட்டிலேயே தான் இருப்பேன். என்ன செய்தாலும் ஸ்வேதாக்கு பிடிக்கும் என்று குடுத்தனுப்புவார். ஸ்வேதா தான் என் மூத்தப்பொண்ணு என எல்லாரிடம் சொல்லுவார்.

அம்மா என்னை திட்டினால் அம்மாவிடம் சண்டைக்கு வருவார். ஆண்ட்டியின் அக்கா பொண்ணு செல்வி. லீவுக்கு இங்கு வரும். எனக்கும் செல்விக்கும் நிறை விஷயங்களில் ஒத்துப்போகும். பாட்டு, படிப்பு, புத்தகங்கள் என நிறைய விஷயங்களில் எங்கள் ரசனையை பகிர்ந்து கொண்டோம். செல்வி என்னை விட ஓரு வருடம் தான் பெரியவள். என் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து மடல் அனுப்புவாள். அந்த காலனிக்கு சென்றதிலிருந்து காலாண்டு, அரையாண்டு லீவுக்கு ஊருக்குப்போவதில்லை. செல்வியும் நானும் ஜோடிப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றினோம்.

நான் ப்ளஸ்டூ படித்துக்கொண்டிருந்தபோது செல்விக்கு எங்கள் ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. செல்வி அம்மி ஆண்ட்டி வீட்டிலேயே தங்கி படிப்பதென முடிவானது. எனக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசையொத்த தோழி அருகிலேயே இருப்பது மகிழ்வாய் இருந்தது. செல்வி என்னை காலேஜூக்கு கூட்டிப் போய் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தது. ப்ளஸ்டூ முடித்ததும் எனக்கும் அதே காலேஜில் வேறு துறையில் இடம் கிடைத்தது. ராகிங் பண்ண முயன்ற சீனியர்களிடம் என் சொந்தக்கார பொண்ணு என சொல்லி காப்பாற்றிவிட்டது. ஒன்றாக காலேஜ் போகவர ஆரம்பித்த வேளையில் அப்பாவிற்கு மாற்றலாகி ஐந்து கி.மீ தொலைவிலுள்ள வேறு ஊருக்கு சென்றோம்.

வீட்டை காலி செய்த அன்று நானும் ஆண்ட்டியும் அழுத அழுகையை இன்று நினைத்தால் சிரிப்பு வரும். அவ்வளவு எமோஷனல் சீன். இதற்கிடையில் காலேஜில் செல்வியை ஒரு பையனோடு அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஒரே வகுப்பு என்பதால் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அம்மி ஆண்ட்டியுடன் போனில் அடிக்கடியும் நேரில் எப்பவாவதும் பேசிக்கொண்டிருந்தேன். காலேஜ் போக வரவே நேரம் சரியாக இருந்தது. அதோடில்லாமல் காலேஜில் விரிந்த நட்புவட்டம் மெல்ல ஆண்ட்டி வீட்டிற்க்கு செல்வதைக் குறைத்தது. பலத்த மழை மெல்ல அடங்குவது போல் அடர்ந்த உறவு மெல்ல மெல்ல விட்டுக்கொண்டிருந்தது.

செல்வி பைனல் இயர் முடித்து இண்டர்வ்யூகளை அட்டெண்ட் செய்துகொண்டிருந்தது. அந்த வேளையில் செல்விக்கு வீட்டில் பையன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த இரண்டு மூன்று வரன்கள் முதலில் சரியென்று சொல்லிவிட்டு பின்னர் போன் பண்னி வேண்டாமென்றார்கள். ஆண்ட்டி அம்மாவிடம் ரொம்ப வருத்தப்பட்டார்கள்.

பின்னர் ஒருநாள் வீட்டிற்கு வந்த ஆண்ட்டி ஆவேசமாக

"உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்தேனே. இப்படி பண்ணிட்டியே. நீ நல்லாருப்பியா? நாசமாபோய்டுவ. உனக்கு கல்யாணம் ஆவாம உங்கம்மா கஷ்டப்படப்போறாங்க"

என மண்ணை தூற்றி வாரி சாபமிட்டார். வீட்டில் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. எனக்கும்தான். ஆனால் எல்லாருக்கும் ரொம்ப கோவம். முக்கியமாய் எனக்கு. என்ன ஏது என்று தெரியாமலேயே ரொம்ப பாசமாய் இருந்தவரிடமிருந்து இப்படிபட்ட வார்த்தைகளை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அம்மி ஆண்ட்டியுடனான தொடர்பு சுத்தமாய் விட்டுப்போனது. காலேஜ் முடிக்கும்தருவாயில் அப்பாவிற்கு மறுபடியும் மாற்றலாகி சென்னை வந்துவிட்டோம். பின்னர் பவுனம்மாவின் மூலமாக செல்வி தன் கூடப் படித்த பையனை காதலித்ததாகவும், அவன் தான் பையன் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி எல்லா வரனையும் கெடுத்ததாகவும், ரொம்ப வருஷம் கழித்து சொந்த அத்தைப் பையனுக்கே செல்வியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் தெரியவந்தது. எனக்கு இந்த காதல் விவகாரம் முன்னமே தெரியுமென்றும், நாந்தான் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாகவும் அம்மி ஆண்ட்டி நினைத்தார் எனவும் சொன்னார். ரொம்பவே எரிச்சலாகிப் போனதெனக்கு. ஆண்ட்டி “இதெல்லாம் உண்மையாடி” என என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே எனத் தோன்றியது. சிறிது நாட்களில் எல்லாம் மறந்து என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து செல்வியிடமிருந்து போன். அவள் குரலில் இருந்த கெஞ்சல் ஏனோ எனக்கு ஆண்ட்டியை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மாவிற்கு போன் செய்தேன். உன் இஷ்டம்மா என்றார். வரும் ஞாயிறு அவரையும் அழைத்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவரிடம் கன்பஃர்ம் செய்துவிட்டு செல்வியை அழைத்து, வருவதை உறுதிப்படுத்தவேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கையில் ஸ்டாப்பிங் வந்தது.

மழையின்றி வீடு வந்து சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மழையின்போது ஆண்ட்டி போடும் இஞ்சி டீ நினைவுக்கு வந்தது. அன்று முழுவதும் ஆண்ட்டியே நினைவிலிருந்தார். மெல்ல ஆண்ட்டி செய்தது தவறில்லையோ எனக்கூட தோன்றியது.

நான்கு நாட்கள் கழித்து மதியம் மூன்று மணியளவில் செல்வியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளுக்கு போன் செய்ய மறந்தவிட்டதை நினைத்து வருந்திக்கொண்டே காலை அட்டெண்ட் செய்தேன்.

அழுதுக்கொண்டே செல்வி அம்மி ஆண்ட்டி கேன்சரால் இறந்ததைச் சொன்னாள். என்னையும் மீறி வெடித்து அழ தொடங்கியிருந்தேன்.இஞ்சி டீயின் வாசம் அறையெங்கும்.

..

17 comments:

கார்க்கிபவா said...

:((

புனைவும் தொடங்கியாச்சா?

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

அருமையான புனைவு. :)

Gajani said...

suberb :)

கார்ல்ஸ்பெர்க் said...

சொல்லிய விதம் மிக அருமையாக உள்ளது..

pudugaithendral said...

welcome back

kalakal

மணிப்பக்கம் said...

:) Nice! :)

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

மணிகண்டன் said...

நல்லா இருந்தது வித்யா.

Vidhya Chandrasekaran said...

நன்றி கார்க்கி (ஏதோ நம்மால முடிஞ்சது)
நன்றி அக்கிலீஸ்.
நன்றி gajani.
நன்றி கார்ல்ஸ்பெர்க்..
நன்றி கலா அக்கா.
நன்றி மணிப்பக்கம்.
கண்டிப்பாக செய்கிறேன் பிரபு.
நன்றி மணிகண்டன்.

Parthasarathy said...

Really Superb!!keep going

R.Gopi said...

ஆ..ஹா... இப்போ புனைவுமா?? பலே பலே... பேஷ்... பேஷ்...

ரொம்ப நன்னாருக்கு வித்யா... வாழ்த்துக்க‌ள்...

ஆகாய நதி said...

புனைவு அருமையாக இருந்தது வித்யா

"உழவன்" "Uzhavan" said...

கலக்கிட்டீங்க வித்யா, அருமை

Vidhya Chandrasekaran said...

நன்றி பார்த்தசாரதி.
நன்றி கோபி.
நன்றி ஆகாயநதி.
நன்றி உழவன்.

தராசு said...

நல்ல ஃப்ளோ,

வாசிக்க இனிமை. தொடருங்கள்.

விக்னேஷ்வரி said...

வித்யாவா இது... ஒரு ப்ரேக்குக்கு அப்புறம் கலக்குறீங்க.

Vidhya Chandrasekaran said...

நன்றி தராசு.
நன்றி விக்கி.