January 4, 2010

ரகோத்தமன் பார்வையில் ராஜிவ் படுகொலை...

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புத்தகம் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி திரு. ரஹோத்தமன் அவர்கள் எழுதியுள்ள "ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்". A to Z ஏற்கனவே நிறைய விஷயங்களை அலசியாயிற்று. இன்னும் என்ன புதுசாய் என்ற எண்ணமே புத்தகத்தை படிக்க தூண்டுகிறது. வெள்ளிகிழமையன்று புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகத்தை சனிக்கிழமை இரவு இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்தேன். புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பான நடை.

ஆசிரியர் சொல்வதைப் பார்த்தால்,விடுதலைப் புலிகளின் (சதித்)திட்டமும் அதனை அவர்கள் செயல்படுத்திய விதமும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஏற்கனவே கார்த்திகேயனின் புத்தகத்தில் இதைப் பற்றி மேலோட்டமாக படித்திருந்தாலும், இங்கு சொல்லப்பட்ட விதம் அட்டகாசம். முக்கியமாக தொடர்பு (contacts) ஏற்படுத்திக்கொள்ளும் விதம். நளினியை தங்கள் வசப்படுத்தியது, மரகதம் சந்திரசேகரின் மகன் மூலம் ராஜிவுக்கு மாலையிட முயற்சி செய்தது என சில விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதே போல் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து என்னென்ன பேருந்துகள், எத்தனை மணிக்கு, எந்தெந்த ஊருக்கு போகிறதென்ற விவரம் சிவராசனின் டைரியில் குறித்து வைக்கப்பட்டிருந்ததாக ரஹோத்தமன் குறிப்பிட்டுள்ளார். வந்தோம் கொன்றோம் சென்றோமென்றில்லாமல் க்ளீன் எக்ஸிக்யூஷன். ஹரிபாபுவின் கேமரா மட்டும் இல்லாவிட்டால் சி.பி.ஐ இந்தளவு துரிதமாக முன்னேறியிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகமே. கிட்டுவின் சவால் முறியடிக்கப்படாமலே போயிருக்கலாம்.

புத்தகத்தின் மூலம் ரஹோத்தமன் வருத்தப்படுவது/கோவப்படுவது நிர்வாகத்தின் எல்லாம் மட்டங்களில் தென்படும் மட்டமான அலட்சியப்போக்கு.

"நமது நிர்வாகத் தளங்களில் புரையோடிப் போயிருக்கும் அலட்சிய மனோபாவம், பொறுப்பற்ற தன்மை, எதிலும் மேம்போக்கான அணுகுமுறை, உயரதிகாரிகளின் திடுக்கிடச் செய்யும் சில முடிவுகள், அரசியல் சூழ்ச்சிகள், ரகசிய பேரங்கள் போன்றவற்றை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்ததை மிக முக்கியமாகக் கருதுகிறேன்."

"மாபெரும் ஜனநாயக தேசம் என்று மார் தட்டிக்கொள்கிறோம். அடிப்படை ஒழுக்கங்களில் பெரும்பாலும் கோட்டை விட்டுவிடுகிறோம்."


சத்தியமான வார்த்தைகள். ஒரு சிட்டிங் பிரதமருக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் என்ன பயன்? அரசியல்வாதிகளின் செயல்பாடும் ஆத்திரத்தை வரவழைக்கிறது. ஐந்து லட்ச ரூபாய் நிதி கொடுத்த ஒரே காரணத்திற்காக யாரையோ மாலையிட அனுமதிப்பதில் தெரிகிறது காசு/பதவி மேல் அவர்களின் மோகம். வைகோவிற்கு முன்னரே இது தெரியும் என கைகாட்டுகிறார் ஆசிரியர். இது உண்மையானால் (உண்மைதான் என நம்பத்தோன்றுகிறது) வைகோ மாபெரும் தவறிழைத்திருக்கிறார். ராஜிவ் காந்திக்காக சொல்லவில்லை. அவருடன் உயிரிழந்தோர், அதன் பின்னான குழப்பங்கள், வீண் நேர மற்றும் பண விரயங்களைத் தவிர்த்திருக்கலாமே.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கருதப்படுகிறது. அதேபோல் தாமதிக்கப்பட்ட உத்தரவுகள் அர்த்தமற்றதாகவே போகிறது. ஒரு இரவு முழுவதும் கமாண்டோக்களை வைத்துக்கொண்டு சிவராசன் மற்றும் சுபா பதுங்கியிருந்த வீட்டை ரவுண்ட் அப் செய்தும் மேற்கொண்டு உத்தரவு வராததால் ஒன்றும் செய்ய இயலாத கையாலாகத்தனத்தை வெறுப்புடன் குறிப்பிட்டுள்ளார். இதே தாமதம் தான் மும்பையில் பல உயிர்களை காவு வாங்கியது. நான் தான் அதிகாரி என் உத்தரவுகள் தான் செல்லும் என்ற மனோபாவம் மாறினாலொழிய இதுபோன்ற காட்சிகள் எத்தனை ஆண்டுகளானாலும் மாறாது.

எல்லாவற்றையும் விட புத்தகமெங்கும் விரவிக்கிடப்பது சிறப்பு புலனாய்வுப் படையின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் மீதான கோவம். பல இடங்களில் நமக்கேன் வம்பு என்ற மனோபாவத்துடனே அவர் செயல்பட்டது போலத் தெரிகிறது. இப்படியான மனநிலையில் எந்தளவு நியாயமான விசாரணை நடக்குமென்பது கேள்விக்குறியாகிறது. அதேபோல் ரா, ஐ.பி போன்ற அமைப்புகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை (அப்படிப்பட்ட தோற்றமேற்படுவதே அசிங்கம்) சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐ.பிக்கு கிடைத்ததாக சொல்லப்படும் வீடியோ கேசட் புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் துரிதமாக விசாரணை முடிந்திருக்கும். நீ தான் காரணம் என ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டும் போக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இறந்தவர்களின் பட்டியலில் சரி பாதி பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாவது பேரைப் பார்த்தவுடம் இனம் புரியாத வலி மேலோங்கி நீர்த் திரை கண்களை மறைத்தது. பல பேரின் அஜாக்கிரதையால் ஐ'ம் மிஸ்ஸிங் யூ மாமா

22 comments:

butterfly Surya said...

புத்தகம் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை..

அருமையான அலசல்.

பின்னோக்கி said...

உங்கள் மாமாவின் பெயரை அதில் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு புரிந்துகொள்ளக்கூடியது. வருத்தங்கள்.

என்ன தவறு யார் செய்திருந்தாலும், ஒரு இளைய பிரதமரின் உயிர் மற்றும் பல குடும்பங்களின் வாழ்வினை, ஒரு (இரு ?) நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது என்பதை மறுக்க இயலாது.

Rajalakshmi Pakkirisamy said...

மனது கனக்கிறது.

tsekar said...

tsekar:

விறுவிறுப்பான நாவல் .கல்கின் " பொன்னியீன் செல்வன் " க்கு இனையான மர்ம நாவல் .

இந்த நாவல் எழுத பா.ராகவன் பங்கு இருக்கும்

sathishsangkavi.blogspot.com said...

இப்புத்தகத்தை நிச்சயம் படிக்கவேண்டும் என்ற ஆவல் உங்கள் பதிவை படித்தவுடன் ஆர்வம் அதிகமாகி உள்ளது.

S.A. நவாஸுதீன் said...

இந்த தடவை ஊருக்கு வரும்போது நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கு இதையும் சேர்த்து.

மணிப்பக்கம் said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி! படிக்க வேண்டும்!

Rajan said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி சூர்யா.
நன்றி பின்னோக்கி.
நன்றி ராஜி.
நன்றி சேகர்.
நன்றி சங்கவி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி மணிப்பக்கம்.
நன்றி ராஜன்.

Raghu said...

இந்த‌ புத்த‌க‌த்தை சிறிது நாட்க‌ள் க‌ழித்து வாங்க‌லாம் என்றெண்ணி விட்டுவிட்டேன். உங்க‌ள் விம‌ர்ச‌ன‌மும், குறிப்பாக‌ க‌டைசி வ‌ரியும் இப்புத்த‌க‌த்தை உட‌ன‌டியாக‌ வாங்க‌ தூண்டுகிற‌து. சனிக்கிழ‌மை மீண்டும் செல்லும்போது வாங்க‌லாம் என்றிருக்கிறேன்.

க‌டைசி வ‌ரியை ப‌டித்த‌போது ஒரு ஜெர்க் ஏற்ப‌ட்ட‌து உண்மை!

Unknown said...

I have not read the book.
But I have a read a thriller too. The book name is "The Day of the Jackal". Movie is also there. But still the book is the better one.

The last lines gives us a shock wave.

Priyan

வழிப்போக்கன் said...

விறுவிறுப்பான நாவல் .கல்கின் " பொன்னியீன் செல்வன் " க்கு இனையான மர்ம நாவல் .

இந்த நாவல் எழுத பா.ராகவன் பங்கு இருக்கும்:

உணர்வே இல்லாத சதைப்பிண்டத்தின்
கிண்டல்!

குசும்பன் said...

நல்ல விமர்சனம்!

கடைசி வரி:((

குசும்பன் said...

நல்ல விமர்சனம்!

கடைசி வரி:((

குப்பன்.யாஹூ said...

We should not encourage these kind of books and these kind of persons. Till he was in service he kept quiet. He should have written or taken up the issue in public when he was in service or he should have resigned when his words are not listened.

Please try to boycott these type of people, who got salary, Govt benefits tilll retirement and after retirement write anything under the sun.

மணிகண்டன் said...

புத்தக விமர்சனமும் நல்லா எழுதறீங்க. இந்தியா வரும்போது இந்த புக் வாங்கி படிச்சி பார்க்கிறேன். மற்றபடி ராஜீவ் காந்தி கொலை ஒரு தண்டனை என்று பேசும் பல முற்போக்காளர்களும் உங்க மாமா போன்றவர்களை பற்றி நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

Cable சங்கர் said...

புத்தகம் வாங்கியாகிவிட்டது.. ப்டிச்சிட்டு வர்றேன். உங்க விமர்சனத்துக்கு

Vidhya Chandrasekaran said...

நன்றி குறும்பன்.
நன்றி பிரியன்.
நன்றி கிருஷ்ணமூர்த்தி (அவரவர் கருத்து அவரவர்க்கு)
நன்றி குசும்பன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி மணிகண்டன்.
நன்றி கேபிள் சங்கர்.

நன்றி குப்பன் (காரணத்தையும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்).

பின்னூட்டத்திற்கு நன்றி அருண். உங்கள் கருத்தும் ஒரு விதத்தில் நியாயமானது தான்.

Unknown said...

உங்களிடமிருந்து இந்தப் புத்தகத்தின் விமர்சனத்தை எதிர்ப்பார்த்தேன். காரணம்: அந்தக் கடைசி வரிகள்

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு.

//புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இறந்தவர்களின் பட்டியலில் சரி பாதி பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாவது பேரைப் பார்த்தவுடம் இனம் புரியாத வலி மேலோங்கி நீர்த் திரை கண்களை மறைத்தது. பல பேரின் அஜாக்கிரதையால் ஐ'ம் மிஸ்ஸிங் யூ மாமா//

இந்த வரிகள் கண் கலங்கச்செய்தன வித்யா.

Vidhya Chandrasekaran said...

நன்றி கேவிஆர்.
நன்றி சரவணக்குமார்.