November 21, 2011

நினைவெல்லாம் நிவேதா - 2

கணேஷும், வசந்தும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஓ மை காட். வீ ஃபீல் சாரி பார் யூ. என்ன நடந்தது?” என்றான் கணேஷ்.

“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார். தூக்குல தொங்கிண்டிருந்தா. நாக்கக் கடிச்சிண்டு, முழி பிதுங்கி. ஐயோ நிவேதா...”

ஜெயராமனைக் கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது கணேஷிற்கு. அவர் அழுது ஓயும் வரைக் காத்திருந்தனர் இருவரும். இருபது நிமிடத்தில் மொத்தக் கண்ணீரையும் செலவழித்துவிட்டு நிமிர்ந்தார் ஜெயராமன்.

"ஈஸி. ஈஸி. டூ வி ஹேவ் எனிதிங் இன் திஸ் சூசைட் சார்?" என்றான் வசந்த்.

"யெஸ். நிவேதா எதுக்காக உங்கள பார்க்க வந்தாங்கறத சொல்லமுடியுமா? ஐ பீல் ஷி வாஸ் ட்ரிக்கர்ட் டு கமிட் சுசைட்" என ஜெயராமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் செல்ஃபோனில் ஜென்ஸி காதல் ஓவியம் பாடஆரம்பித்தார். படக்கென ஃபோனை எடுத்து “பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் லைனைத் துண்டித்தார்.

“ஸாரி. வேர் வேர் வி? ஆங். நிவேதா உங்களை எதுக்காக பார்க்க வந்தா?”

"மிஸஸ் நிவேதா இங்கே வந்தாங்களே தவிர எந்த விவரத்தையும் நாங்க கேட்டுக்கல. வீ ஆஸ்க்ட் ஹெர் டு மீட் அஸ் சம்டைம் லேட்டர். அதுக்கப்புறம் அவங்க வரல. ஆனா நீங்க வந்திருக்கீங்க. வித் ஹெர் டெத் நியூஸ். ஹூம். பை த வே நிவேதா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என நீங்கள் நினைக்க காரணம்?"

"அது வந்து...”

“தயங்காம சொல்லுங்க சார்.”

“சமீப காலமாக அவளிடமிருந்து எனக்கு சில இமெயில்கள் வந்தது. அஷோக் அவளிடம் பிரியமாக இல்லையென. அவளை இக்னோர் செய்கிறார் என. இரண்டாவது நிவேதாவின் பெயரில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருக்கு. ஒரு விபத்தில் இறந்து போன என் அண்ணா, நிவேதாவிற்கு கல்யாணம் ஆகும்வரை நான் கார்டியனாக இருக்கவேண்டுமென்றும், கல்யாணத்திற்கு பின்னர் அவளுடைய கணவர் கார்டியனாக இருக்கவேண்டுமெனவும் உயிலெழுதியிருக்கிறார். நிவேதாவிற்குப் பிறகு சொத்துக்கள் அஷோக்கிற்குதான் போகும்.”

“ஓ. நீங்கள் நிவேதாவின் கணவரை சந்தேகப் படுகிறீர்களா?”

”ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ்”

”அப்ப நீங்க போலீஸ்ல கம்ப்ளையெண்ட் பண்ணலாமே?”

“செய்யப்போகிறேன். அஷோக் மேல் சந்தேகம் இருப்பதாக. மீன்வைல் நிவேதா உங்ககிட்ட என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். இஃப் யூ கைஸ் டோண்ட் மைண்ட் எனக்காக இந்த வழக்கை ப்ரொசீட் பண்ண முடியுமா?”

"வி வில் லெட் யூ நோ சார்.”

“இது என் கார்ட். ஐ’ல் பி வெயிட்டிங் ஃபார் யூ கைஸ்”.

“ஒரு நிமிஷம் சார். நிவேதா எங்கள பார்க்க வந்தாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் வசந்த்.

”வெல். ஹாலில் இருந்த ஸ்க்ரிப்ளிங் பேடில் உங்கள் பெயரையும், அட்ரஸையும் கிறுக்கி வைத்திருந்தாள். உங்களைப் பற்றி விசாரித்துப் பார்த்தேன். எதற்காக அவளுக்கு ஒரு வக்கீலின் முகவரி தேவைப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள வந்தேன்” என்றார் ஜெயராமன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு. ”ஒக்கே எனக்கு டைமாச்சு. எந்த முடிவாக இருந்தாலும் ஒரு கால் பண்ணுங்க” என சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

”என்ன பாஸ். போரடிக்குதுன்னு சொன்னீங்களே. உள்ள இறங்கிடுவோமா?” என்றான் வசந்த்.

ஜெயராமன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் “ம்” என்றான்.

1 comments:

sakthi said...

கலக்குறிங்க...சுஜாதா வோட பழைய novel ஏதும் upload செயரிங்கனு நினைச்சுட்டேன்...
அற்புதமான flow....