காலம் தான் எத்தனை வேகமாக சுழல்கிறது. நேற்று தான் நடந்தவை போலிருக்கிறது.
அண்ணாவின் கல்யாணத்தில் நாத்தனார் முடிச்சு போட்டுவிட்டு கீழே இறங்கும்போதே என்னவோ போலிருந்தது. அசதியாக இருக்குமென விட்டுவிட சிறுது நேரத்திற்கெல்லாம் இனம் புரியாத வலி. நர்ஸாக இருந்த அத்தையிடம் வலியைப் பற்றி சொல்ல லேபர் பெயின் என்றுவிட்டார்கள். கொடுத்திருந்த தேதியை விட ஒரு மாதம் முன்னராகவே. கண்டிப்பாக ட்ராவல் செய்யக்கூடாது என மதுராந்தகத்தில் பார்த்த டாக்டர் சொல்லியும் (அம்மா வீட்டில் பிரசவம்) அண்ணா கல்யாணத்திற்கு வந்ததை எல்லோரும் கண்டித்தார்கள். மடிப்பாக்கத்திலிருந்து அடையார். அவசர அவசரமாய் டாக்டரை வரவழைத்தார் ரகு. செக் செய்து பார்த்துவிட்டு அனிதா பார்த்தசாரதி சொன்னது ”போடி உனக்கு இப்பல்லாம் ஆகாது. சித்திரை தான ஆறது. வைகாசில தான் பொறக்கும்.”
பத்து நாள் கழித்து ரெகுலர் செக்கப்பிற்கு போனபோது குழந்தை பொசிஷன் பார்க்க ஸ்கேன் எடுக்க சொன்னார் டாக்டர். ஸ்கேன் பண்ண மற்றொரு டாக்டர் தலைய சைடுவாக்கில் ஆட்ட அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தை உள்ளவே தண்ணி குடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் உடனே எடுத்துவிடுவது நல்லது எனவும் சொன்னார்கள். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டு தியேட்டருக்குப் போனதும், முதுகில் ஊசி போட்டு, சரியாய் 5.08க்கு ”பையன்ம்மா”, “4 கிலோ இருக்கான்”, “எப்படிம்மா தூக்கிட்டு நடந்த” இவற்றை தொடர்ந்து தொம் என்ற சத்தமும் வீல் என அவனின் முதல் குரலும் கேட்டது. I still dont know how i felt. வலியிலும் மயக்கத்திலும் அவனைப் பார்க்க முடியவில்லை. செக்கச் செவேல்ன்னு இருக்காண்டி என்ற அம்மாவின் வர்ணனை மட்டும் அடிக்கடி கேட்டு்க்கொண்டிருந்தது. ஒரளவுக்கு நினைவு வந்து பார்க்கையில் பச்சை நிற காட்டன் புடவையில் சுற்றப்பட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

அன்று தொட்டு இன்று வரை மூன்று வருடங்களும் என் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிக் கொண்டிருக்கிறது குட்டிப் பிசாசு ஒன்று. முதல் சிரிப்பு, முதன் முதலில் கவிழ்ந்துப் படுத்தது, முட்டிப் போட்டது, உட்கார்ந்தது, தவழ்ந்தது, நின்றது, நடந்தது, அத்தை, மாமா, தாத்தா, ம்மா, தாட்டி (பாட்டி) ஆரம்பித்து அடடா மழடா, சிங்கம் சிங்கம் வரை ஒவ்வொரு நிகழ்வையும் கூடவே இருந்து பார்க்கும், பரவசப்படும் வாய்ப்பு கிடைத்தது/ஏற்படுத்திக்கொண்டது வரமே. நான்கு மாதக் குழந்தையை காப்பாற்றுவது கடினம், இருந்தும் முயற்ச்சிக்கிறோம் எனக் கூறியபோது கண்டிப்பாக என்னை விட்டுப் போகமாட்டான் என்று நினைத்தேன். எல்லாமே நேற்று நடந்தவை போல் கண் முன்னே ஓடுகிறது. மூன்று வருடங்கள் பறந்தேப் போய்விட்டன. 17ஆம் தேதியிலிருந்து பள்ளி செல்லவிருக்கிறான். ஏற்கனவே 8 மாதங்கள் ப்ளே ஸ்கூல் சென்றிருந்தாலும் ஏப்ரல் முதற்கொண்டு லாங் லீவில் இருக்கும் சார் எப்படி செட்டிலாவார் என்ற கவலை நிறையவே இருக்கிறது. டோரா பேக், டோரா லஞ்ச் பேக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (இதை எடுக்க அந்த போட்டோகிராபர் உயிர் போய் வந்த கதை தனியாக), என எல்லாம் ரெடி செய்தாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பேக்கை மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போய்ட்டு வந்துரேன் என டாட்டா காட்டுபவன் 17ஆம் தேதியிலிருந்து என்ன செய்யப் போகிறானோ என்று பயம்ம்ம்மாக இருக்கிறது.
ஆல் த பெஸ்ட் ச்சின்னு. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.