February 2, 2012

நினைவெல்லாம் நிவேதா - 6

”செம்ம ட்ராஃபிக் பாஸ். ரெண்டு மணிநேரமா க்ளட்ச்ச மாத்தி மாத்தி கால் வலிக்குது” என்றபடியே உள்ளே நுழைந்தான் வசந்த். ஒரு கேஸிற்காக சட்ட புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த கணேஷ், வசந்திடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

“வேணாம் பாஸ். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவதிருக்கா?” என்றபடியே ஃப்ரிட்ஜை ஆராய்ந்தவன், ஒரு ஆப்பிளைக் கடித்தபடியே வந்து கணேஷின் முன் அமர்ந்தான்.

“போன காரியம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.

“சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக இந்த வேலைக்கு என்ன அனுப்பிச்சீங்கன்னு சொல்லுங்க. என்னாலயும் ஒரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனாலும்..”

“சொல்றேன் வசந்த். இது கண்டிப்பா நிவேதாவே எடுத்த முடிவில்லங்கறது என்னோட யூகம். இந்த விஷயத்துல ரெண்டே பேரத்தான் நாம சந்தேகப்படமுடியும். ஒன்னு ஜெயராமன். இல்லன்னா அஷோக். மோட்டிவ் ஒன்னுதான். சொத்துக்காக.”

“அப்ப கொலைன்னு சொல்ல வர்றீங்களா. போஸ்ட்மார்ட்டம்ல கயிறு இறுகி, மூச்சுக்குழாய் முறிந்ததால் மரணம்ன்னு தெளிவாருக்கே. ரெண்டாவது, சம்பவம் நிகழ்ந்த அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஸ்ட்ராங்கான அலிபி இருக்கு.”

“அவசரப்படாத வசந்த். இது ஒருவரின் மேற்பார்வையில், வழிகாட்டுதலின் படி நடந்த தற்கொலை.”

“அப்படித்தான ஜெயராமனும் சொல்றாரு. அஷோக்தான் அந்த ஒருவன்ங்கறது அவரோட குற்றச்சாட்டு.”

”கரெக்ட். இப்ப அது நெஜமாவே அஷோக்தானாங்கறத தான் நாம கன்ஃபர்ம் பண்ணனும்.”

“சரி பாஸ். இப்ப உங்களோட மைண்ட்ல என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்களேன்.”

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்ட ரெண்டையும் கொண்டு வந்தியா?”

“கொண்டு வந்திருக்கேன் பாஸ். நீங்க கேக்காமலேயே இன்னொரு வேலையும் பண்ணி முடிச்சிருக்கேன்”. என்ன என்பது போல பார்த்தான் கணேஷ். ”முதல்ல நீங்க உங்க கெஸ்ஸ சொல்லுங்க பாஸ், அப்புறம் நான் என்ன பண்ணேன்ங்கறத சொல்றேன்”.

“ஆல்ரைட். முதல்ல அஷோக்கிட்டருந்து ஆரம்பிப்போம். லவ் மேரேஜ். பிரச்சனை எதுவும் இல்லை. அட்லீஸ்ட் எதுவுமில்லைன்னு அவர் நினைச்சுகிட்டிருக்கார். நல்ல வருமானம் ஈட்டிக்கொடுக்கும் தொழில். நஷ்டமோ, பெரிய பணத்தேவையோ இல்லை”.

“இந்தக் காரணங்கள் போதுமா பாஸ்? தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.”

“இரு வசந்த். அவசரப்படாத. இதெல்லாம் சும்மா ஆட் ஆன் வாதங்கள் தான். ஒரே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கு வசந்த். இம்மாதிரி நிவேதாவை தற்கொலைக்கு தூண்டுவதன் மூலம் தான் ஈசியாக மாட்டிக்கொள்வோம் என யோசிக்கத் தெரியாதவரல்ல அஷோக்.”

“எப்படி சொல்றீங்க?”

“சிம்பிள்டா. நிவேதாவின் அப்பா எழுதிவைத்திருக்கும் உயில் அப்படி. பொண்ணுக்கு கல்யாணம் ஆனப்புறம், ஏதாவது ஆச்சுன்னா புருஷந்தான் பொறுப்புன்னு தெளிவா எழுதிவச்சிருக்காரே. அதனால, நிவேதாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னைத்தான் பிடிப்பாங்கன்னு அவருக்கு தெரியாம இல்ல. அதுவுமில்லாம, அவருடைய பிசினெஸை கொஞ்சம் கிளறினேன். க்ளீனாதான் இருக்கார். நிவேதா இறப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் தொகை, அவருக்கு பெரிய அமவுண்ட்டாக இருக்காது. இதை அவரே சொல்லிருக்காரு.”

“ம்ம்ம். அப்ப அஷோக்க லிஸ்ட்ல இருந்து தூக்கிடலாம்”.

“யெஸ். ஜெயராமன தெளிவா டிக்கடிச்சிடலாம்”.

”ரீசன்?”

“சொல்றேன். இரு”.

-தொடரும்......

2 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
தொடருட்டும்.

Anbu Bala said...

mm already, you finished the story in http://www.panbudan.com/story/ninaivellam-nivetha-7 ...